9.07.2023

பதிவு. 75.

 

நான் படித்த மகாபாரத கதைகள். 

இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். இதில் குறிப்பாக மகாபாரதம் எனக்கு தெருக்கூத்து மற்றும் திரைப்படம் பார்த்ததிலும் மூலமே அறிமுகமாகிய நினைவு இருக்கிறது. பின்னாட்களில் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பரிச்சம் ஏற்படுகிறது.

புத்தகம் படிக்க தொடங்கிய பின் எனக்கு அறிமுகமான மற்றும் இன்றும் என் நினைவில் உள்ள சில புத்தங்கள் குறித்து நினைவு கூறுவதே இந்த பதிவின் நோக்கம்.

01.     மகாபாரதம் – வாரியார் சுவாமிகள்.                              இது பக்தர்களுக்கான மகாபாரதம். கிருஷ்ணன் கடவுள். அவன் தர்மத்தை காப்பாற்றவும் அதர்மத்தை வெல்லவும் நடத்திய லீலைகளே மகாபார யுத்தம். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் முன்வாழ்ந்த பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாரியார் கதையை ஆரம்பித்து விடுகிறார்.

02.     மகாபாரதம் – ராஜாஜி.                                              இது குழந்தைகளுக்கான மகாபாரதம். குழந்தைகளுக்கு பக்தியையும் தர்மத்தையும் போதிக்க எழுதப்பட்டதாக உணர்ந்தேன். எளிய மொழியில் சிறப்பாக கதை சொல்லியிருப்பார். கதைசொல்லியாக இந்த கதையை அவர் தொடங்கிய இடம் படித்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. பீஷ்மரின் அம்மாவை அவரது தந்தை பார்க்கும் காட்சியே இதன் தொடக்கம்.

03.     மஹாபாரதம் பேசுகிறது – சோ.ராமசாமி.                         இது அரசியலுக்கான மகாபாரதம். இது வியாசனின் கதையை நேரடியாக பின்பற்றி எழுதப்பட்டதாக சோ சொல்கிறார். மகாபாரத கதையில் இன்றைக்கு நெருடலாக நாம் உணரும் சில இடங்களுக்கு சோ ஒரு விளக்கம் தருகிறார். சிலது ஒத்து போகும். பலது ஒத்து போகாது. அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இதில் பிரதிபலிப்பதாக உணர்ந்தேன். இது இரண்டு பாகம். நான் முதல் பாகம் மட்டுமே படித்துள்ளேன்.

04.     பாஞ்சாலி சபதம் – பாரதியார்.                                   இது மகாபாரதத்தில் ஒரு சிறுபகுதி. இது கவிதையாக எல்லாருக்குமானது. இதில் பீமன், அர்சுனன் மற்றும் பாஞ்சாலி சபதம் ஏற்கும்போது பேசும் வசனங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் தன்மையுடையது. இந்த கதையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் அஞ்ஞனா பூரி இயக்கிய நாடகம் இனிமையான நினைவாக இருக்கிறது.

05.     யயாதி – வி.எஸ்.காண்டேகர் – மாரத்தி.                       இதுவும் மகாபாரத கதையின் ஒரு சிறுபகுதி. பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவனான யயாதியின் காதல்கள் மற்றும் காமங்களை மையமிட்ட கதையாகும். மனம் அமைதியடையாத வரை காமம் நிறைவு பெறுவதில்லை. எவ்வளவு அனுபவித்தாலும் அந்த அனுபவத்தில் இருந்து புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதே காமத்தின் இயல்பு என்றும் அதனால் மன அடக்கத்தின் மூலமே காமத்தை வெல்ல முடியும் என்பதை யயாதி உணரும் இடம் மிகவும் அற்புதமானது. இந்த கதையை மட்டும் இரண்டுமுறை படித்துள்ளேன். மறுபடியும் படிக்கும் திட்டமும் இருக்கிறது.

06.     உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்.                          இது நவீன மொழியின் மகாபாரதம். இவ்வளவு சின்ன புத்தகத்தில் அவ்வளவு பெரிய கதையை எப்படி சொல்லி இருப்பார் என இந்த புத்தகத்தை பார்த்ததும் எனக்குள் வியப்பாக தோன்றியது. ஆனால் கதையை படிக்க பிடித்துப்போனது. எஸ்.ராவின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. காலத்தில் முன்னும் பின்னுமான இதன் கதை சொல்லல் முறை மிகவும் உவப்பானதாக இருந்தது. இதில் எஸ்.ரா மொழியை கையாண்ட விதம் பிரமிப்பாக இருந்தது.

07.     பருவம் – எஸ்.எஸ்.பைரப்பா – கன்னடம்.                         இது யாதார்த்தமான மகாபாரதம். நான் படித்த மகாபாரத பிரதிகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது. மகாபாரத கதையில் இருக்கும் கடவுள் அல்லது அதீத சக்திகளை நீக்கிவிட்டு இக்கதை மனிதவாழ்வில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்த நாவல். நாவலாசிரியர் எஸ்.எஸ்.பைரப்பா பல ஆராய்சிகள் மேற்கொண்டு, தகவல்களை மனித வாழ்வாக மாற்றி சிறப்பான படைப்பாக பருவம் நாவலை உருவாக்கி இருக்கிறார்.

08.    இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் – மலையாளம்.           இது பீமனின் பார்வையிலான மகாபரதம். பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்த பீமனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தனக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணன் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுண்டு வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் தம்பியின் பார்வையில் பாண்டவர்களின் வாழ்வு விரித்து சொல்லப்படுகிறது.

09.     திரெளபதியின் கதை – பிரதிபாராய் – ஒரியா.                     இது பாஞ்சாலியின் பார்வையிலான மகாபாரதம். ஐந்து பாண்டவர்களின் மனைவியான திரெளபதி அரசவையில் வைத்து அவமானப்படுத்தும்போது கிருஷ்ணன் வந்துதான் அவளின் மானம் காப்பற்றபட வேண்டியிருக்கிறது. கணவர்(கள்) இருந்தும் ஒரு பெண்ணின் மானத்தை இன்னொருர் வந்து காப்பற்ற வேண்டிய சூழலில் அந்த பெண்ணின் மனநிலைகள் என்ன..? ஆண்கள் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட ஏற்படுத்தும் போரினால் பாதிக்கப்படுவது இருதரப்பிலும் பெண்ணாகவே இருக்கிறாள். இதற்கான காரணம் என்ன..? பெண்ணிய பார்வையில் குடும்பம், அரசு, போர் என எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் நாவலாக இது இருக்கிறது.

நீங்கள் படித்து வியந்த மகாபாரதம் சார்ந்த கதைகள் குறித்து பதிவிட்டால் அதை தேடி படிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். 




8.31.2023

பதிவு. 74.

 திரெளபதியின் கதை – பிரதிபாராய்.

கதைகளின் தொகுப்பான இதிகாசம் மகாபாரதம். அந்த கதைகளை நவீன எழுத்தாளர்கள் பலர் மறுபடியும் எழுதியுள்ளார்கள். மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பீமனின் பார்வையில் மகாபாரதத்தை சொல்கிறது. அதே போன்று ஒரிய எழுத்தாளர் பிரதிபாராய் யக்ஞசேனி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பாஞ்சாலியின் பார்வையில் மகாபாரத கதையை சொல்கிறது. இதுவே தமிழில் இரா.பாலச்சந்திரனால் திரெளபதியின் கதையாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
திரெளபதி தனது ஐந்து கண்வன்மார்களுடன் பூத உடலுடன் சொர்க்கம் செல்லும் வழியில் மயங்கி விழுகிறாள். “அவள் நம் ஐவரையும் சமமாக நேசிக்கவில்லை, அர்சுனன் மீது அதிக நேசம் கொண்டிருந்தாள் அதனால் அவள் சொர்க்கம் புகமுடியாது, யாரும் திரும்பி பார்க்காமல் என்னை பிந்தொடருங்கள்” என்று அவளின் மூத்த கணவன் தருமன் தன் தம்பிகளிடம் சொல்கிறான். இமையமலையில் அடிவார பொன்மணலில் மயங்கி கிடக்கும் திரெளபதி தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதையை நினைத்துப் பார்க்கிறாள் என்ற வடிவத்தில் இக்கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
மன்னன் துருபதன் ஏழை துரோணரை அவமதிக்கிறான். இளவரசர்களின் குருவாக துரோணர் தன் மாணவர்களை கொண்டு துருபதனை பழிவாங்குகிறார். பழிக்கு பழி வாங்க துருபதன் யாகம் வளர்த்து வரமாக ஒரு மகனையும் ஒரு மகளையும் பெறுகிறான். அந்த மகளின் பெயர் யக்ஞசேனி. அவளுக்கு கிருஷ்ணா, பாஞ்சாலி, திரெளபதி என பல பெயர்கள் இருக்கிறது. அவளுக்கு குழந்தை பருவமே கிடையாது.
திரெளபதி அறிவாற்றலும் கலைமனமும் கொண்ட இளவரசியாக வாழ்க்கை தொடங்குகிறாள். கனவுகள் மிகும் இளம்பருத்தில் அவள் கிருஷ்ணனையும், கர்ணனையும் நினைத்து மயங்குகிறாள். சுயம்வரத்தில் அர்சுனால் வெல்லப்பட்டு குந்தியால் ஐவருக்கும் மனைவியாக பகிர்ந்து அளிக்கப்படுகிறாள். இங்கு தொடங்கும் அவளின் துயரம் அவள் மரணிக்கும் கடைசி கணம் வரை அவளைப் பிந்தொடர்கிறது.
திரெளபதியின் மனம் எவ்வளவு இலகுவானதாக இருந்தது, பிறகு எப்படியெல்லாம் இறுகிபோனது, மறுபடியும் அது எப்படி கருணைமிக்கதாக மாறியது என அவளின் மன உணர்வுகளை இந்தநாவலில் பிரதிபாராய் மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார். ஒரு மனைவியாக, ஒரு தாயாக, ஒரு தோழியாக, ஒரு மகாராணியாக, அவமானத்தை தாங்கும் பெண்ணாக, பழிவாங்க துடிக்கும் பெண்ணாக, விருந்தினாக வந்த எதிரியையும் மன்னிக்கும் பெண்ணாக என திரெளபதியின் பல முகங்களை நாம் இக்கதையில் தரிசிக்கலாம். பெண்ணிய பார்வையில் இக்கதை போர் எதிர்ப்பு மனநிலையும் பதிவு செய்கிறது.
இந்தநாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரா.பாலச்சந்திரன் மிக நேர்த்தியாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்ட நாவல் போன்று இருக்கிறது.
இந்தநாவலை சாகித்திய அகாதெமி குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.


- 30.08.2023.

துளி. 387.

அனுமதிக்காக காத்துகிடக்கின்றன என் ஆசைகள் உன் இதயவாசலில்... - 25.08.2023.

துளி. 386.

உண்மையாக சொன்னதை பொய் என்றும் பொய்யாக சொன்னதை உண்மை என்றும் புரிந்துக்கொள்ளும் உன்னை புரிந்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறேன் தனிமையில். - 24.08.2023.

துளி. 385.

மழையை பார்த்ததும் கவிதை எழுத தோன்றுகிறது.

காதல் இல்லாதவன்
காற்றையும் மழையும் பார்த்துதான் கவிதை எழுத வேண்டும்.
கவிதையின் தலைப்பு
மழையை வேடிக்கைப் பார்ப்பவன்.
மழையை மட்டுமா
வேடிக்கை பார்க்கிறாய்
வாழ்க்கையே வேடிக்கைதானே.
அகமும் புறமும்
முட்டி மோதியதில்
கவிதைக்கு ஓர் முற்றும். - 23.08.2023.

துளி. 384.

ரசித்து உண்ண தெரிந்தவனு(ளு) பட்சணம் கிடைப்பதில்லை.

காதலையும் காமத்தையும்
கட்டுடலில் வைத்து
கண்ணாமூச்சு ஆடுகிறது காலம்.
அதை வெல்வேனா
அல்லது
அதனால் வெல்லப்படுவேனா..
போற்றுமின் போற்றுமின்
எல்லாம் கைகூடும்
களிப்பு களியிடும்
கனவை. - 22.08.2023.

துளி. 383.

உன் நினைவுகளால் உருண்டோடுகிறது என் காலம்... - 21.08.2023.

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...