5.30.2026

பதிவு. 97 - புதுப்புனல்.



 புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருந்த வேலையில்தான் “புதுப்புனல்” புத்தகத்தை 2023 ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இதன் தொகுப்பாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன். இவரின் கட்டுரைகளை “காலச்சுவடு” இதழில் படித்திருக்கிறேன். இவருடைய பரிந்துரைகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
இந்த புத்தகத்தில் கீழ்காணும் 14 சிறுகதை ஆசிரியர்களை அறிமுகம் செய்துள்ளார். அவர்களுடைய கதைகளின் தன்மையை பொருந்து உபதலைப்பு கொடுத்துள்ளார். அது அந்த கதாசிரியர்களின் பார்வையை அல்லது அவர்கள் எதன்மீது அதிக கரிசனம் கொள்கிறார்கள் என்பதை விளக்குவதாக இருக்கிறது.
1. தூயன் – தந்தையர்களும் தனயர்களும்.
2. சுரேஷ் பிரதீப் – அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும்.
3. சித்துராஜ் பொன்ராஜ் – நடுவில் இருக்கும் கடல்.
4. ராம் தங்கம் – உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம்.
5. கிருஷ்ணமூர்த்தி – கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும்.
6. அனோஜன் பாலகிருஷ்ணன் – போரும் காமமும்.
7. கார்த்திக் பாலசுப்ரமணியம் – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்.
8. சுனில் கிருஷ்ணன் – புனைவெழுத்தில் புதிய சாத்தியங்கள்.
9. மயிலன் ஜி சின்னப்பன் – அகத்தின் ஆழம் தேடி.
10. கமலதேவி – கதை சொல்லாத கதைகள்.
11. திருச்செந்தாழை – துலா முள்ளின் அசைவுகள்.
12. செந்தில் ஜெகநாதன் – நிலமும் திரையும்.
13. கனகலதா – வேறு நிலம், வேறு முகம், ஒரே வலி.
14. லாவண்யா சுந்தரராஜன் – புதிய தலைமுறை பெண்களின் சவால்கள்.
வாசகர்களுக்கு புதிய தலைமுறை சிறுகதை ஆசிரியர்களை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த தொகுதி.1. போல் இன்னும் பல தொகுதிகள் வரவேண்டும் என விரும்புகிறேன். இன்றைக்கு நிறைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அவர்களில் சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காண இந்த புத்தகம் உதவியாக இருக்கிறது.
எம்.கோபாலகிருஷ்ணன் சிறுகதைகளை சிறப்பான முறையில் விளக்கி செல்கிறார். அவர் ஒரு சிறுகதை எதனால் சிறப்பானதாக அல்லது எதனால் முழுமையடையாமல் இருக்கிறது என விளக்கும்போது ஒரு சிறந்த சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதையும் சேர்த்தே விளக்கி விடுகிறார் என நம்புகிறேன். இந்த புத்தகத்தை படிக்கும் இளம்படைப்பாளிக்கு அது ஒருவகையில் சிறுகதை குறித்த பாடமாகவும் மாறிவிடுகிறது.
இந்த புத்தகத்தினை தமிழினி பதிப்பகம் (முதல் பதிப்பு – 2022) சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

01.05.2026



பதிவு. 96 திரையில் மலர்ந்த சிறுகதைகள்.



 திரையில் மலர்ந்த சிறுகதைகள்.

இலக்கிய படைப்புகளை திரைப்படமாக எடுப்பது உலகு முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழிலும் நிறைய படைப்புகள் உருவாகியுள்ளது. அப்படி மலையாள சினிமாவில் வெளியான நான்கு திரைப்படங்கள் உருவாக காரணமாக இருந்த ஐந்து சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகமாகும்.
இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய யாத்ரா(1985) திரைப்படத்தின் மூலகதை அமெரிக்க எழுத்தாளர் பீட் ஹாமின் “வீடு திரும்புதல்” என்ற சிறுகதையாகும். இந்த சிறுகதை ஜப்பானில் “மஞ்சள் நிற கைகுட்டை”-யாகவும் மலையாளத்தில் “யாத்ரா”வாகவும் உருமாறி வந்துள்ளது.
இயக்குனர் ஜி.அரவிந்தன் இயக்கிய “சிதம்பரம்”(1985) திரைப்படம், மலையாள எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமனின் “சிதம்பரம்” சிறுகதையை அடைப்படையாக கொண்டது.
இயக்குனர் சி.வி.சந்திரனின் “பொந்தன் மாடா”(1994) திரைப்படம் எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமனின் “பொந்த மாடா” மற்றும் “சீமைத்தம்புரான்” சிறுகதைகளை அடைப்படையாக கொண்டது.
இயக்குனர் பரதனின் “தகர”(1979) திரைப்படம் எழுத்தாளர் பி.பத்தமராஜின் “தகர” சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இதே கதையை அதே இயக்குனர் தமிழில் “ஆவராம் பூ” என எடுத்துள்ளார்.
நான் இந்த நான்கு படங்களையும் பார்த்ததில்லை. இந்த புத்தகத்தை படித்த பிறகு இந்த நான்கு படங்களையும் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்த்துள்ளேன்.
மலையாளத்தில் சிறுகதை என்ன தலைப்பில் எழுதப்பட்டதோ அதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. ஆனால் சிறுகதையில் உள்ளதை மட்டும் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் எதை கூட்டினார்கள், எதை குறைத்தார்கள், எதை மறைத்தார்கள், எதை வெளிப்படையாக வைத்தார்கள் என்பதை படம் பார்த்துதான் தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி தெரிந்து கொள்வதும் அதை காரண காரியங்களோடு புரிந்து கொள்வதும் திரைக்கதையை கற்றுக்கொள்ள நல்ல பயிற்சியாக இருக்குமென கருதுகிறேன். இந்த புத்தகத்தின் நோக்கமும் அதுவாகதான் இருக்க முடியும் என நம்புகிறேன்.
இந்த புத்தகத்தில் எடுத்துக்கொண்ட திரைப்படம் குறித்தும் அதன் இயக்குனர் மற்றும் சிறுகதை ஆசிரியர் குறித்தும் தனித்தனியே குறிப்புகள் இருக்கிறது. இது அவர்களின் மற்ற படைப்புகளை தேடி செல்ல உதவியாக இருக்கிறது.
இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போல் இருக்கிறது. அந்த அளவுக்கு சிறப்பான முறையில் அவைநாயகம் மொழிப்பெயர்ந்துள்ளார்.
சிறப்பான அடைப்படத்துடன் இந்த புத்தகத்தை மதிமலர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
18.04.2026

All reactions:
Pirabu 

3.30.2026

துளி. 419

நீலம் சிவப்பாகிறது

சிவப்பு மஞ்சளாகிறது

மஞ்சள் ஆரஞ்சாகிறது

ஆரஞ்சும் இல்லாமல் போகிறது

அந்திவானத்தை

வண்ணமயமாக்கி விட்டு

மாயமாகிறான் ஆதவன்.

மாறிக்கொண்டே இருக்கும்

அந்திவான வண்ணங்களாய்

மனித மனம்.

- 12.03.2026.

பதிவு. 95

 முதல் காதல் - இவான் துர்கனேவ்

எல்லா மனிதர்களுக்கும் முதல் முதலில் புதிதாக ஒன்றை அனுபவிக்கும்போது தோன்றும் இன்பம் பேரின்பமாகத்தான் இருக்கும். அப்படித்தான் பதின்ம பருவத்தில் தோன்றும் காதலுக்கும் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.
உலகின் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் தொடர்ந்து எழுத்தப்பட்டு வரும் கருப்பொருள் காதல். அதுவும் ஒரு ஆணோக்கோ அல்லது பெண்ணுக்கோ முதன் முதலில் தோன்றும் காதல் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது.
இவான் துர்கனேஷ் எழுதிய “முதல் காதல்” என்ற குறுநாவல் ஒரு ஆணுக்கு ஏற்பட்ட முதல் காதல் அனுபவத்தையே சொல்கிறது. பதினாறு வயதில் தன்னைவிட சில வயது மூத்த பெண் மீது அவனுக்கு ஏற்பட்ட காதலையும் அதனால் அவன் மனதுக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்து செல்கிறது இந்த நாவல். அதே சமயம் அந்த இளம்பெண்ணின் மனவோட்டங்களையும் நமக்குள் கடத்துகிறது.
அந்த காலத்தில் ரஷ்ய வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது. ஆண் பெண் உறவுகள் எப்படி இருந்தது. பணம் படைத்தவர்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், பணம் இல்லாதவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, குறிப்பாக இளம் தலைமுறைக்கு தன் முந்தைய தலைமுறையின் இலக்கியம் குறித்து இருந்த கருத்துகள் என்ன என்பதையெல்லாம் இந்த குறுநாவல் தொட்டு செல்கிறது.
இவான் துர்கனேஷ் எழுதிய “முதல் காதல்” என்ற இந்த குறுநாவல் ரஷ்ய மொழியில் சுமார் 165 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. 2025 ஆண்டு தமிழில் பூ.சோமசுந்திரம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு முயற்கூடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

06.03.2026.


பதிவு. 94



வாடாமல்லி – கண்மணி குணசேகரன்.

இன்று நான் படித்து முடித்த புத்தகம் கண்மணி குணசேகரனின் “வாடாமல்லி” சிறுகதை தொகுப்பாகும். இதில் மொத்தம் ஆறு சிறுகதைகள் இருக்கிறது. இந்த கதைகள் அனைத்தும் நடுநாடு (கடலூர் மாவட்டம்)-ல் விருத்தாசலம் நகருக்கு பக்கத்தில் உள்ள மணகொல்லை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் விவசய குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை சொல்கிறது.
ஒரு நாடக குழுவில் உதவியாளனாக இருப்பவனின் இல்லற சிக்கல்(அம்போகம்), புது தொழில் செய்ய தொடங்கி அதில் பெரும் நட்டம் அடைந்து அதில் இருந்து மீண்டு உதறி தொழிலாளியானவனின் வாழ்க்கை கதை(இரும்பு ராசி), தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு மற்றொருவன் மீது இருந்த காதலை அறியும் ஆண்களின் மனநிலைகள்(பச்சைக்கிளி & வாடாமல்லி), காதலித்து கைபிடித்த கணவன் துரோகம் இழைத்ததை அறிந்த மனைவியின் மனநிலை(வெட்டுக்காடு), பஞ்சாயித்து தேர்தலில் எல்லோரும் பணம் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன் தான் நியாமானவன் அதனால் மக்கள் தனக்கு ஓட்டு போடுவார்கள் என நம்பி ஏமாந்த நபரின்(வாளி) கதை என பலரின் வாழ்க்கை பாடுகள் இந்த கதைகளில் இருக்கிறது.
இந்த ஆறு கதைகளில் நாலு கதைகள் கணவன் மனைவி உறவு சார்ந்த அகச்சிக்கல்களை பேசுகிறது, ஒரு கதை புறவாழ்வினால் ஏற்படும் பணம் நெருக்கடிகளையும் அதனால் ஏற்படும் மன நெருக்கடிகளையும் பேசுகிறது. இந்த கதையில்(இரும்பு ராசி) வரும் கணவன் மனைவி உறவுதான் அதிகமும் புரிதல் உள்ளதாக இருக்கிறது. மற்றொரு கதையில் மனைவின் சந்தேக புத்தியால் ஏற்படும் நெருக்கடிகள் ஒரு புறமும் பஞ்சாயித்து தேர்தலில் தோற்கடிக்கப்படுவதினால் ஏற்படும் நெருக்கடிகள் இன்னொரு புறமும் சூழ அந்த கணவன் திக்குத்தெரியாமல் தவிக்கிறான்.
இந்த புத்தகத்தின் பின்னட்டையில் உள்ள குறிப்பு சொல்வது மாதிரி இந்த கதைகள் அனைத்திலும் கண்ணீர் வழிந்தோடுகிறது. அன்பின் பொருட்டும், அவமானத்தின் பொருட்டும், அவமதிப்பின் பொருட்டும், புரிதல் இன்மையின் பொருட்டும் கண்ணீர் சிந்தப்படுகிறது அல்லது சிந்தவைக்கப்படுகிறது.
எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் எழுத்து நடை மிகவும் எளிமையானது. ஆனால் அவர் எழுதி காட்டும் வாழ்க்கை எளிமையானது அல்ல. அவர் கதைகளில் அந்த வட்டாரத்தின் மொழியும் வாழ்வும் இரண்டற கலந்துள்ளது. இதுதான் அவரின் மிகப்பெரிய வெற்றி என கருதுகிறேன். இந்த ஆறுகதைகளின் வடிவமும் ஒரே மாதிரியாக உள்ளது. இது எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது.
இந்த புத்தகத்தினை சிறப்பான அட்டைப்படத்துடன் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2019 ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த புத்தக வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் பொன்.கர்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- 04.03.2026.

துளி. 418

வெகு காலமாக எங்கெங்கோ
தேடிக்கொண்டு இருந்தேன்
எனக்கான மேய்ப்பரை
கடைசியில் கண்டடைந்தேன்
எனக்கான மேய்ப்பனை
எனக்குள்.

- 01.03..2026.

2.28.2026

துளி. 417

சதி கோட்பாடுகளை
நம்பியதே இல்லை நான்
நம் உறவில்
முதல் கீறல் விழும் வரை
கீறல் விரிசலாகி
விட்டு விலகிய பின்தான்
உணர்கிறேன் நடந்தேறிய சதிகளை
அதன் தொடக்க புள்ளி நீ
என்பது எனக்கு பேரதிர்ச்சிதான்
பேரன்புக்கு நீ கொடுக்கும்
பரிசுபோலும் இது

வாழ்க நலமுடன்.

26.02.2026. 

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...