நவீன வாழ்க்கை மனிதனுக்கு பல வசதிகளை கொண்டு வந்தது போலவே பல நெருக்கடிகளையும் கொண்டு வந்ததுள்ளது. ஜீ.முருகன் எழுதியுள்ள "மரம்" நாவலும் அதைத்தான் பதிவு செய்துள்ளது.
எல்லா வகையான மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் பாலியல் இச்சைகளை அதன் சரி தவறுகளுக்கு அப்பால் நின்று இந்நாவல் விவாதிக்கிறது.
அரசியல், ஆன்மீகம்,குடும்ப உறவுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் போலிகளையே தரிசிக்க வேண்டியுள்ளதை, இந்த நவீன வாழ்க்கையின் சில ஆண்களின் கதையையும், சில பெண்களின் கதையையும் சொல்வதின் மூலம் பதிவு செய்துள்ளார். சிறப்பான வாழ்வை சிக்கலாக்குவதுதான் மனிதனின் சிறப்பு இயல்பு போலும். ஜீ.முருகன் எளிய மொழியில் வலியான வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.
மரம் நாவலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் 2007-ல் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
தமிழ் சிறுகதையின் தந்தை புதுமைபித்தன் மெளனியை "தமிழ் சிறுகதையின் திருமூலர்" என போற்றினார்.
"நான் புதிதாக கதை எழுத தொடங்குவதற்கு முன் மெளனியின் "மாறுதல்" சிறுகதையை வாசிப்பேன்" என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
இந்த இரண்டு குறிப்புகள்தான் என்னை மெளனியை தேடி வாசிக்க தூண்டியது.
ஆனால் முதலில் வாசிக்க கிடைத்தது சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்த மெளனியின் "சாவில் பிறந்த சிருஸ்டி" சிறுகதை பற்றிய கட்டுரையேயாகும். இதுவும் மெளனியை வாசிக்க தூண்டுதலாக இருந்தது.
நீண்ட தேடலுக்கு பிறகு சச்சிதானந்தன் தொகுத்த மெளனி கதைகள் புத்தகம் கிடைத்தது. நேஷனல் புக் டிரஸ்ட் அல்லது சாகித்திய அகாதெமி வெளியீடு. வாசித்து பார்த்தால் பெரும் ஏமாற்றம். "சாவில் பிறந்த சிருஸ்டி" சிறுகதைப்பற்றிய கட்டுரை கவர்ந்த அளவுக்கு கூட கதை பிடிக்காமல் போனது. ஏன் இப்படி நிகழ்ந்தது என யோசித்தபோது நம் வாசிப்பு இன்னும் நுட்பமாக வேண்டுமோ என்னவோ என நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அவருடைய கதைகள் ஒன்று இரண்டை அவ்வப்போது வாசிப்பதுண்டு. மெளனியின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான "அழியாச் சுடர்" சிறுகதையை நான்கு ஐந்து முறை ( சில ஆண்டுகள் கால இடைவெளியில்) வாசித்தபின் எனக்கு அந்த கதை புரிந்தது, மிகவும் பிடித்துபோனது.
மெளனியை கொண்டாடும் கட்டுரைகளையும், நிராகரிக்கும் கட்டுரைகளையும் வாசித்து குழம்பும் வாசகனுக்கு மெளனியை சிறப்பான முறையில் எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் செய்துள்ளார்.
அண்மையில் புத்தக நாளை முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸ்யில் நடந்த கூட்டத்தில் மெளனியை பற்றி பேசிய எஸ்.ரா "மெளனி எழுத்து அவரது சமகால படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்து எப்படி மாறுபடுகிறது, அவரை புரிந்துகொள்ள எப்படி வாசிக்க வேண்டும்" என நிறைய செய்திகளை சொல்லிக் கொண்டே செல்கிறார். இந்த உரையை கேட்ட பின் நான் மறுபடியும் மெளனியை வாசிக்க திட்டமிட்டுள்ளேன். மெளனியின் எழுத்துக்கள் புரியவில்லை என்றவர்களுக்கு இந்த உரை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
நான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலை அண்மையில் வாசித்தேன்.
எழுத்து பத்திரிகையில் 1959-1960 காலக்கட்டத்தில் தொடராக வெளிவந்த நாவல் இது. இப்போது வாசிக்கும் போது நாவல் உயிர்ப்புடன் உள்ளது.
இளம் விதவை பெண்ணான சாவித்திரியின் மனவோட்டமாக கதை சொல்லப்படுகிறது.
குடும்ப உறவுகளைவிட பணம்தான் பிரதானம் என்னும் வாழ்க்கையை பெரும்பாலான மனிதர்கள் தேர்வு செய்யும் இன்றைய சூழலில் பணத்தை விட உறவுகள் முதன்மையானது என வாழ்ந்த சாவித்திரியின் குணம் அல்லது கதை இன்றும் பொருத்தமான ஒன்றாக உள்ளது.
நாவலுக்கு சி.சு.செல்லப்பா எழுதியுள்ள முன்னுரை ஒரு படைப்பை உருவாக்க படைப்பாளன் எந்த அளவுக்கு மெனக்கிட வேண்டும், பொறுமை காக்க வேண்டும் என்பதனை சொல்லும் கையேடாக உள்ளது.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலுக்கு பெருமாள் முருகன் ஒரு சிறப்பான முன்னுரையும் வழங்கியுள்ளார்.