10.12.2021

துளி - 327

அதையெல்லாம் செய்

இதையெல்லாம் செய்யாதே
ஒரு குழந்தைக்கு சொல்வதைப்போல் சொல்கிறேன்
என் மனதிடம்
எந்த மாறுதலுமின்றி தான்
நினைத்தையே செய்கிறது அது
அடம்பிடிக்கும் குழந்தையாய்.
- சாருமதி.

02.10.2021.

துளி - 326

உன்

கருப்பு வெள்ளைப் புகைப்படம்

என்னுள்

வண்ண வண்ண

கனவுகளை தூவுகிறது.

- சாருமதி.

30.09.2021.

துளி - 325

               அதிசயம்

கரையோரம் எப்பொழுதும்
ஆர்பரிக்கும் கடலைகள்
மையத்தில்
கனத்த மெளனத்தோடு இருக்கும்
கடலின் ஓர் அங்கமென்பது.

27.09.2021

துளி - 324

மறுபடியும் ஒருமுறை

எனக்குள் நானே

கேட்டுக்கொண்டேன்

நான் யார்...?!

15.08.2021.

துளி - 323

பெருக்கெடுத்து ஓடும்

பேரன்பின் நதியில்

நீராட நீயும் வா..

12.08.2021.

பதிவு - 50

 நாமார்க்கும் குடியல்லோம்,

நமனை அஞ்சோம்,
நரகத்தில் இடர்ப்படோம்,
நடலை இல்லோம்,
இன்பமே எந்நாளும்,
துன்பமில்லை.
- திருநாவுக்கரசர்.
நாம் எவருக்கும் அடிமையில்லை,
மரணத்தை கண்டு எமக்கு அச்சமில்லை,
எமக்கு நோயும் இல்லை, ஆக மொத்தத்தில் எனக்கு இன்பம் மட்டுமே உண்டு, துன்பம் இல்லை.
- விளக்க உரை ம.செந்தமிழன்.
ம.செந்தமிழனின் "நமனை அஞ்சோம்" சிறிய புத்தகம்தான் என்றாலும் அது சொல்லும் சேதி மிகப்பெரியது. உடலுக்கும் மனதுக்கும் இருக்கும் உறவு, உடலுக்கும் இயற்கைக்கும் இருக்கும் ஒற்றுமைகள், மனதால் உடலை செம்மை படுத்தும் விதம், நவீன மருத்துவம் செயல்படும் விதம், அதன் போதாமைகள். என அனைத்து விசயங்களையும் இந்த சிறு நூல் பேசுகிறது.

08.08.2021.


துளி - 322

தனிமை

தேவதையின் கழுத்தில்
உருண்டு புரளும்
ஒற்றை செயினினைபோல்
அலைந்து திரிகிறேன்
வாழ்வெனும் கனவு பிரதேசத்தில்
தன்னந்தனியாக...

21.07.2021.

பதிவு - 49

 காலப்பயண அரசியல் – கெளதம சித்தார்த்தன்.

கடந்த காலத்துக்குள் செல்ல எல்லோருக்கும் ஆசைத்தான். ஒருகாலத்தில் எனக்குள்ளும் அந்த ஆசை இருந்தது. அதற்கு காரணமாக காந்தி இருந்தார்.
காந்திய சிந்தனையின் பாதிப்பு எனக்குள் ஏற்பட்ட நாட்களில் நாட்களில் மாதம் ஒருமுறை அறைநாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். பசியை உணர்வதற்காவும் சீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கவும் அது உதவும் என்று காரணங்களை கற்பித்துக் கொண்டேன். அப்பொழுதெல்லாம் காந்தி வாழ்ந்த காலத்தில் வாழாமல் போய்விட்டமே என்று வருந்தி இருக்கிறேன். பிற்காலத்தில் அண்ணா காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என யோசித்து இருக்கிறேன்.
கால இயந்திரத்தில் கடந்து காலத்துக்கு செல்லும் பயணம் குறித்து கேள்விப்பட்டபோது அப்படி உண்மையிலேயே ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஆசைப்பட்டு இருக்கிறேன்.
கால இயந்திரத்தில் பயணம் செய்தவர்களை கதாபாத்திரங்களாக கொண்டு இரண்டு சிறுகதைகளை (இடியின் முழக்கம் – ரே பிராட்பரி & முகமதுவைக் கொன்றார்கள் – ஆள்ஃபிரெட்) இன்று படித்தேன்.
கெளதம சித்தார்த்தன் இந்த இரண்டு சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலம் பற்றிய தன்னுடைய சிந்தனைகளை “காலப்பயண அரசியல்” எனும் படைப்பாக மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சாத்தியமாக்கிய கெளதம சித்தார்த்தன் மற்றும் கால.சுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

08.07.2021.

பதிவு - 48

தலைமுறைகள் கடந்தும் ஒளிரும் தலைமுறைகள்.


சிங்கவினாயக தேவஸ்தானத்துப் பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழிமாத வைகறைக்குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத்தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.
- நாவலின் முதல் பாரா.
இலக்கியம் படிக்க தொடங்கிய காலத்தில், பிரபலமான எழுத்தாளர்களின் நேர்காணலில் அவரது பார்வையில் சிறந்த படைப்புகள் என்று சொல்லும் படைப்புகளைத் தேடித்தேடி படித்திருக்கிறேன். பல எழுத்தாளர்களின் பட்டியலிலும் சிறந்த நாவலாக சொல்லப்பட்ட நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலும் ஒன்றாகும்.
பல ஆண்டுகள் தேடி கிடைக்காமல் இருந்த இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன்பு கையில் கிடைத்தும் ஏனோ படிக்காமல் இருந்தேன். கடந்த இரண்டு நாட்களில் படித்து முடித்து பிரமித்துப் போனேன். இவ்வளவு நாள் படிக்காமல் விட்டதிற்காக வருத்தப்பட்டேன்.
நாவல் காட்சிபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது. சில இடங்களில் சினிமாப்போல் shot by shot-ஆகவும் இருக்கிறது. நாவலின் முதல் பத்தியும் கடைசி பத்தியுமே இதற்கு சாட்சியாகும்.
திரவியத்தின் பதின்பருவத்தி மத்தியில் தொடங்கி வாலிப பருவ தொடக்கம் வரையிலான பத்து ஆண்டுகளே கதை நிகழும் காலமாகும். அது இந்திய சுதந்திரத்துக்கு முந்திய காலமும்கூட.
தமிழக கேரள எல்லையோர பகுதி. மலையாளிகளும் தமிழர்களும் ஒன்றாக வாழும் நிலப்பகுதியில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தின் கதையாகும்.
திரவியம், அவன் பாட்டி உண்ணாமலை ஆச்சி ஆகிய இருவரிம் மூலமும் மூன்று தலைமுறைகளின் கதைகள் இந்த நாவலில் சொல்லப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பின்புலமாக கொண்டு அவர்களின் பழக்க வழக்கங்கள் குறிப்பாக சிறுவர்களின் விளையாட்டு, தாலாட்டு, ஒப்பாரி, கல்யாண மற்றும் சாவு வைபவ முறைகள் என எல்லா பண்பாட்டு கூறுகளும் இந்த நாவலில் பதிவாகி இருக்கிறது.
வட்டார வழக்கு மொழியாக இருப்பதினால் சில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் அது சொல்லும் உணர்வுகள் நம்மை கதை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்கிறது.
பழமைக்கும் புதுமைக்குமான போர் காலம் காலமாக நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் அருகருகேத்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சி இந்த கதையிலும் இருக்கிறது.
எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த நாவலை ஒரு நவீன இதிகாசம் என்கிறார். அது முற்றிலும் உண்மைத்தான். எளிமையும் உண்மையும் இதிகாசத்திற்கான ஆதார பண்புகளாக சொல்வார்கள். அவை இந்த நாவலில் நிறைந்து இருக்கிறது.
1968 ஆண்டு வெளியான இந்த நாவலை, காலச்சுவடு பதிப்பகம் தனது நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் 2013 ஆண்டில் நல்ல அட்டைப் படத்துடன் சிறப்பான வெளியிட்டுள்ளது.
கீழத்தெரு சிங்கவிநாயக தேவஸ்தான பிள்ளையார் கோவில் மணியோசைச் சிதறல்கள் காற்றில் நீந்தி அங்கே வந்து சேர்ந்தபோது, ஆலையமிருந்த திசையைப் பார்த்து, மனமொன்றிக் கரங்கூப்பித்தொழ, அப்பா மறக்கவில்லை.
- நாவலின் கடைசி பாரா.
இந்த நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் தனவேல் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

26.06.2021.





பதிவு - 47

 செம்புலம் - இரா.முருகவேள்.

எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது.
- இரா.முருகவேள்.
Once Upon a Time in Anatolia என்ற துருக்கியப் படத்தை பார்த்தபோது, இப்படியும் கதை சொல்ல முடியுமா என எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. கொலை செய்யப்பட்டவனின் உடலைத்தேடி செல்லும் பயணம் மிகவும் நிதானமாக செல்லும். வழக்கமான துப்பறியும் படம்போல், அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பு ஏதும் இருக்காது. ஆனாலும் நம் மனம் படத்தை விலகாது.
இரா.முருகவேளின் "செம்புலம்" நாவலைப் படிக்கும்போதும் எனக்கு மேற்குறிப்பிட்ட பட அனுபவமே ஏற்பட்டது.
இந்த நாவல் நான்கு பகுதிகளாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
முதல் பகுதி ஒரு துப்பறியும் கதையாக துவங்குகிறது.
இரண்டாம் பகுதி ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் புறத்திலும் மனிதர்களின் அகத்திலும் தலைமுறைகள் கடந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை பதிவு செய்கிறது.
மூன்றாவது மிக முக்கியமானது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவாக பதிவு செய்துள்ளது. பிரச்சனைகளின் வேர்களை நீக்க முயலாமல், பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் செய்து கொடுத்தாலே போதும் என்று செயல்படும் இந்த அமைப்புகளால் உண்மையில் யாருக்குத்தான் லாபம்.
நான்காவது பகுதியில், முதல் மூன்று பகுதிகளில் தவறவிட்ட அல்லது அந்த பகுதிகளுக்கான ஆதார உண்மை இருக்கிறது. அந்த உண்மை நம்மை நிலைகுலைய வைக்ககூடியதாக இருக்கிறது.
செம்புலம் துப்பறியும் வடிவில் சொல்லப்பட்ட அரசியல் நாவலாகும். தொடர்ந்து படிக்க தூண்டும் மிக எளிமையான மொழிநடையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இதில் பயன்படுத்தப் பட்டுள்ள நாட்டுபுற கதைக்கு ஏற்ப அட்டைப்படம் அருமையாக வரையப்பட்டுள்ளது.
பொன்னுலம் பதிப்பகம் இந்நாவலை(முதல் பதிப்பு 2017) சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் Dhan Vel அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.06.2021.


பதிவு - 46

 மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு.

நவீன வாழ்க்கை மனித உறவுகளில் பலவிதமாக (நல்லதும் கெட்டதுமாக) மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஆண் பெண் உறவில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுத்தி உள்ளது.
அப்படியான பிரச்சனையை அல்லது உறவைத்தான் வா.மு.கோமு தனது "மங்கலத்து தேவதைகள்" நாவலில் பதிவு செய்துள்ளார்.
இந்த நாவல் சமகால ஆண் பெண் பாலியல் உறவின் ஆவணமாக இருக்கிறது. இதையெல்லாம் நாவலில் பதிவு செய்யத்தான் வேண்டுமா என ஒழுக்க கண்ணாடி போட்ட மனம் துணுக்குறுவதை தவிர்க்க முடியாதுதான்.
ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவிற்கு தாவி செல்லவும், அப்படி பிரிய நேர்ந்த உறவை நினைத்து குற்றவுணர்ச்சி ஏதும் இல்லாமல் வாழவும் நவீன மனித மனம் தயாராகிவிட்டது.
இந்நாவலை உயிர்மை பதிப்பகம் 2011 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிட்டுள்ளது.
இந்த நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் Dhan Vel -க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

20.06.2021.





பதிவு - 45

 சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட காதல் காவியமான சரத் சந்தரின் தேவதாஸ் நாவலை அண்மையில் படித்து முடித்தேன். ரோமியோ ஜீலியட், அம்பிகாவதி அமராவதி போல் ஒன்று சேரதாத காதலர்களான தேவதாஸ் பார்வதியின் கதை இது.

பார்வதியின் கதாபாத்திரம் மிகவும் துணிச்சல் மிக்க பாத்திரம். அவள்தான் தன்காதலை தேவதாஸிடம் நேரடியாக சொல்கிறாள். அப்பா, அம்மாவின் ஆசைக்காக தேவதாஸ் பாருவின் காதலை நிராகரிக்கிறான். அவளை விட்டு பிரிகிறான். பிரிவின் துயரில்தான் அவளை எவ்வளவு காதலிக்கிறோம் என்பது அவனுக்கே புரிகிறது. அவன் திரும்பி பாருவிடம் வரும்போது காலம் கடந்து விடுகிறது. ஒருமுறை தவறான முடிவு எடுத்ததினால் அவனின் வாழ்வே பாழாகிறது. இந்த தவறுகளை இன்றும் மனிதர்கள் சாதிக்காக, மதத்துக்காக, பணத்துக்காக என்று செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதலின் துயரத்தில் வீழ்ந்த தேவதாஸ்மீது காசுக்காக காமத்தை விற்கும் சந்திரமுகி காதலில் விழுகிறாள். தன்னை தேடி வருவதினாலே அதன் அருமை தெரியாத தேவதாஸ் மறுபடியும் ஒரு தவறான முடிவை எடுத்து சந்திரமுகியை விலகி செல்கிறான். இப்போது சந்திரமதி காதலின் துயரில் வீழ்கிறாள்.
தேவதாஸ் படித்த பணக்கார வீட்டுப்பிள்ளை. அதனாலேயே அவன் வாழ்வில் பிரச்சனைகள் குறுக்கிடுகின்றன. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சிந்தனைவலிமை இல்லாத தேவதாஸ் சிக்கலில் சிக்கி சீரழிகிறான். பாருவின் காதலையும், சந்திரமுகியின் காதலையும் சரியாக புரிந்து கொள்ளமுடியாத தேவதாஸ் கடைசியில் ஓர் மழைநாள் இரவில் பார்வதியின் வீட்டு முன்பு மரணித்து போகிறான்.
தேவதாஸ் என்றாலே கூடவே ஒரு நாய் என்ற தோற்றம் மனதில் தோன்றும். இந்த கதையில் அப்படி ஒரு நாயே கிடையாது. திரைப்படம் உருவாக்கிய பிம்பம் போலும் நாய். ஏன் நாயை தேர்ந்து எடுத்தார்கள் என்றும் நன்றி மறவாத சீவன் அது என்பதினாலா...
இந்த தேவதாஸ் கதையை தழுவி இரண்டு இந்தி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று ஷாருக்கான், ஐஸ்வரியா, மாதுரி தீட்சித் நடித்த தேவதாஸ் படம். பிரமாண்டமான தயாரிப்பு. மற்றொன்று இயக்குனர் அனுராக் காஷ்பின் "தேவ் டி" படம். எளிமையான ஆனால் மிகவும் நவீனத்துவ பார்வைக் கொண்ட படம். பழைய கதையை சமகாலத்திற்கு ஏற்றார்போல் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமான படம். இந்த படமே என்னை மிகவும் கவர்ந்தது.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ள பழைய தேவதாஸ் படங்களையும் பார்க்க வேண்டும்.

08.05.2021.





திரை - 09

அன்பைத் தேடி அலைபவன்.
அன்பைப்போல் வன்முறை ஏதுமில்லை இந்த வரியை எங்கோ படித்ததாக நண்பர் சொன்னார் சில ஆண்டுகளுக்கு முன்பு அது அப்படியே என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதை அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. நேற்று HER படம் பார்த்ததும் இந்த வரி மறுபடியும் நினைவுக்கு வந்தது.
சிலருக்கு அன்பு செலுத்த மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் அன்பு செலுத்த ஆட்களைத்தேடி அலைகிறார்கள். அப்படி தேடி அலைவதினால் மட்டும் அன்பு கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமுமில்லை. நவீன தொழிற்நுட்பமான செயற்கை நுண்ணுயிர் அறிவியலில் இதுக்கு ஒரு வழிகிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற யோசனையின் விளைவுதான் HER திரைப்படமாகும். அப்படி கிடைக்கும் உறவு என்றும் நிலைத்து இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தான் அன்பு செலுத்தவும், பதிலுக்கு தன்மீது அன்பு செலுத்தப்படவும் ஓர் உயிர் தேவையாத்தான் இருக்கிறது.
சமகாலத்தில் இயற்கையைப்போல் அன்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது போலும். அதனால்தான் அன்பை தேடி அலைபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறதோ. சமகால மனிதனை அவனது நிழல்போலவே தனிமையையும் அவனைத் தொடர்ந்து கொண்டே வருகிறது. தனிமையை கொல்வது அல்லது தனிமையோடு உறவாடுவது எது அவனுக்கு சாத்தியம்.

04.05.2021.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...