4.30.2020

பதிவு . 37

தறியுடன்... – இரா.பாரதிநாதன்.
உழைக்கும் மக்களுக்காக களத்தில் அமைதிவழியில் போராடினாலே, போராளிகள் அரச வன்முறைக்கு ஆளாகநேரிடும். இப்படியான சூழலில் மக்களுக்காக போராளிகள் ஆயுதங்களை தேர்ந்து எடுத்துவிட்டால், அரசால் அவர்கள் ஒடுக்கப்படுவதும், ஒழிக்கப்படுவதும் சர்வநிச்சயமாகும்.
இந்திய ஒன்றியத்தின் காவல் துறையால் அதிக ஒடுக்குதலுக்கும் இழப்புகளுக்கும் உள்ளானவர்கள் நக்சல்பாரி இயக்கத்தினர். அவர்கள் எப்படி மக்களை அரசியல் மயப்படுத்தினர், அதற்காக அரசு அவர்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தியதுஎன்பதைப்பற்றி சில தன்வரலாறுகள், பல நீதிமன்ற குறிப்புகள், உண்மையாகவும் உMண்மைக்கு புறம்பாகவும் நிறைய பத்திரிக்கை செய்திகள் உள்ளன. இதுப்பற்றிய இலக்கிய படைப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை இல்லாமல் செய்யும் படைப்பே இரா.பாரதிநாதனின் தறியுடன் நாவல் என்றால் அதுமிகையாகாது.
சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ( 1980 களில் ) வாழும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை பாடுகளையும், அவர்களுக்காக சங்கம் அமைத்து போராடிய போராளிகளின் பாடுகளையும் இந்த நாவல் மிகசிறப்பாக பதிவுசெய்துள்ளது. மேலும் போராட்டம் நடத்தியவர்களை தறி முதலாளிகளும் அரசாங்கமும் எப்படி ஒடுக்கியது என்பதையும் சொல்கிறது.
அரசியல் நாவல் என்றாலும் அரசியல் பிரச்சாரம் மேலோங்காமல் இருக்கிறது. தொழிலாளர்கள். போராளிகள், முதலாளிகள், காவல்துறையினர், சிறைத்துறையினர் என்று எல்லோரும் அவரவர் வர்க்கமாகவே இருப்பதை இருப்பதாகவே நேர்மையாக பதிவு செய்கிறது.
போராளிகளுக்கும் மக்களுக்குமான உறவு மிக இயல்பாகவே இருக்கிறது. இந்த நாவலில் வரும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ரத்தமும் சதையுமாக நம்முள் பதிவாகின்றனர். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடையும்போது நாமும் மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் துன்பப்படும்போது நாமும் துன்பப்படுகிறோம்.
அதிக பக்கங்கள் கொண்ட நாவல் என்றாலும் நாம் மிகவிரைவில் வாசித்துவிடுவோம். கதை அந்த அளவுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. நாவலாசிரியர் குறைந்த சொற்களில் மன உணர்வுகளையும், சமூக இயல்புகளையும். அதிலிருக்கும் அரசியல் உண்மைகளையும் முரண்களையும் மிகச்சிறப்பாக சொல்லி செல்கிறார்.
இந்நாவலை பொன்னுலம் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இந்த நாவலின் முதல் பதிப்பு 2014 சனவரியில் வெளியாகியுள்ளது.
இந்த நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் வேலூ சாரை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        24.04.2020.

பதிவு . 36

குதுப்பி - ம.காமுத்துரை. 
திருமணங்கள், சீமந்தம், காதுகுத்து, அன்னதானங்கள், அரசியல் கட்சி கூட்டங்கள் என இன்னும் நிறைய நிகழ்வுக்களுக்கு செல்கிறோம், அங்கு சாப்பிடுகிறோம். அந்த உணவை தயாரித்த சமையல் கலைஞர்கள் மற்றும் அந்த தொழிலாளர்கள் பற்றி என்றாவது நாம் நினைத்துப்பார்த்ததுண்டா, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்வுமுறைதான் என்ன என்று எண்ணிப்பார்க்கத்தான் நமக்கு நேரமிருக்கிறதா.... இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக தமிழில் ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரபஞ்சன் நினைவு பரிசுப்போட்டி(2019)-யில் பரிசு வாங்கிய நாவல்களில் ஒன்றான ம.காமுத்துரையின் குதுப்பி நாவல் அது.
தென் மாவட்டங்களில் ஒன்றான தேனியின் அல்லிநகரம் பகுதியை இந்நாவல் கதைக்களமாக கொண்டுள்ளது. அந்த பகுதியில் வீட்டு விசேசங்களுக்கு சமையல் வேலை செய்யும் தொழிலாளர்களை கதாப்பாத்திரங்களாகக்கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அந்த எளிய மனிதர்களின் அசலான வாழ்வை எந்த மிகையுமில்லாமல் ரத்தமும் சதையுமாக ம.காமுத்துரை எழுதியுள்ளார்.
அந்த தொழிலாளர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தை, துரோகத்தை, துக்கிரித்தனத்தை, ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும்அருமையாக, எளிமையான மொழியில் நம் மனதில் ஆழமாக பதியும்படி சொல்லியுள்ளார்.
குதிப்பி நாவலை இரண்டு வார கால அவகாசத்தில் இன்றுதான் வாசித்து முடித்தேன். இந்த நாவலாசிரியரின் படைப்புகளை இதற்கு முன்பு வாசித்ததில்லை. இந்த நாவலாசிரியரின் பிற படைப்புகள் பற்றியும் நாவலாசிரியரின் வாழ்க்கை குறிப்பும் இந்த நாவலில் இல்லை. அது இருந்திருக்கலாம்.
இந்நாவலை Discovery Book Palace சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல் இந்த நாவலை வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர்Jega Deesan S-க்கு என் மனமார்ந்த நன்றிகள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          10.04.2020.

துளி . 291

அரசியல் பற்றிய பதிவை தனிப்பதிவாகவும்
தனிப்பட்ட வாழ்வு சார்ந்த பதிவை                                                                                    அரசியல் பதிவாகவும்                                                                                                புரிந்துகொண்டு குழம்புகிறான்
என்னை மிகச்சரியாக
புரிந்து கொண்டதாக 
சொன்ன நண்பன்...                                                                                                                                                                                                                                                                                                                                                                         9.4.2020.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...