11.19.2023

பதிவு. 76

 




பிழைத்தல் அல்ல வாழ்தல் – ம.ஜியோடாமின்.

 

 

புத்தகம் - 01

உயிர்வலை

 

சில புத்தகங்களின் பெயரை கேட்டதுமே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அண்மையில் அப்படி மனதை கவந்த புத்தகம் ம.ஜியோடாமின் எழுதிய “பிழைத்தல் அல்ல வாழ்தல்” என்ற புத்தகம். இது பத்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலாகும்.

 

முதல் புத்தகத்தின் பெயர் “உயிர்வலை” என்பதாகும். சுமார் 75 பக்கங்களில் இவ்வளவு சிந்தனைகளா என வியக்க வைக்கும் புத்தகம் இது. உணவு சங்கிலி என்று ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட செய்தியைதான் இது சொல்கிறது. ஆனால் சொல்முறையில் நம்மை வியக்க வைக்கிறது.

 

கடலில் வாழும் சாலமன் மீன்கள் தன் சந்ததியை பெருக்க பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து ஆற்றின் வழியே மலைக்கு வருகிறது. உப்பு நிறைந்த கடலில் வாழ்ந்த சாலமன் மீன் எப்படி நன்னீருக்குள் வந்து தன் சந்ததியை உருவாக்குகிறது, எப்படி தன் ஆதி பிறப்பிடத்தை கண்டு பிடிக்கிறது, பெரும் கூட்டமாய் வரும் மீன்கள் வழியில் எந்த எந்த உயிரினங்களுக்கு உணவாகிறது, மீன்கள் வருவதை அந்த உயிரினங்கள் எப்படி அடையாளம் காண்கிறது. இயற்கை எப்படி உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக வாழுமாறு படைத்திருக்கிறது என்பதை அற்புதமாக விளக்கி செல்கிறார்.

 

ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு பெரும் மேச்சல் நிலம் எப்படி பல்லாயிரம் உயினங்களுக்கு பெரும் உணவு மேசையாக இருக்கிறது என்பதையும், ஒரே தாவரம் எப்படி பலவிதமான உயிரினங்களின் உணவாக இருக்கிறது என்பதையும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி செல்கிறார்.

 

இந்த புத்தகத்தில் நான்கு கட்டுரைகள் இருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் ம.ஜியோடாமின். இவர் பெயரே இப்போதுதான் அறிமுகம். ஆனால் அவரின் எழுத்துநடை மிகவும் எளிமையாக இருக்கிறது. அவர் சொல்லும் தகவல்களோ மிகவும் பிரமிப்பு தரக்கூடியதாக இருக்கிறது. சுற்றுசூழல் சார்ந்து எழுத்தில் நிறைய தகவல்கள் வருவதால் அதை படிப்பவன் மனதில் எளிதாக கடத்தும் கலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதை இவர் மிகவும் லாவகமாக செய்துள்ளார்.

 

 

புத்தகம் – 02

நாமும் நம் உறவினர்களும்

 

சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகத்தினை படிக்க தொடங்கினோம், அதனால் இந்த புத்தகத்தின் தலைப்பின்படி இந்த பூவுலகிம் வாழும் உயிர்களை நேசிக்க வேண்டும் என்ற சொல்ல வருகிற புத்தகமாக இது இருக்கும் என்று நினைத்தபடி படிக்க தொடங்கினேன். புத்தகத்தினை முழுதாக படித்து முடித்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

 

இந்த பூமி எப்படி தோன்றியது. அது உள்ளும் புறமும் காலவெள்ளத்தில் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது. அதில் எத்தனை வகையான உயிரனங்கள் வாழ்ந்து மறைந்தன.

 

சுமார் 460 கோடி ஆண்டுகள் வயதுள்ள பூமியில் மனிதனின் வயது சில லட்சம் வருடங்களுக்கு முன்பு தொடங்கினாலும் சுமார் பன்னிரெண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இப்போது இருக்கும் மனித இனத்தின் முன்னோர்களின் வரலாறு தொடங்குகிறது.

 

இந்த பூமியில் வாழும் எல்லா உயிர்களும் ஒரே உயிரில் இருந்து உருவான வரலாற்றை எளிமையாக எலோருக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.

 

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் குரங்கு இருக்கிறதே, அது எப்படி என வினவும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தினை படிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் கேள்விகளுக்கான பதில் இதில் இருக்கிறது.

 

பூமி தோன்றி இதுவரை 12 மணிநேரம்தான் ஆகிறது என கணக்கிட்டால், இதில் மனிதனின் தோற்றம் என்பது கடைசி 38 விநாடிகள் மட்டுமே என்ற வரையறையை படிக்கும்போது பூமியில் மனித இனத்தின் தோற்றம் என்பது எவ்வளவு சிறியது. ஆனால் இன்று இந்த பூமியை சிதைத்துக்கொண்டு இருப்பவர்களும் இந்த மனிதர்கள்தான்.

 

பூமியின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் மற்றும் மனிதர்களின் தோற்றம் குறித்து எளிமையாகவும் சுவையாகவும் எழுதியுள்ளார். இது பள்ளியில் பாடமாக வைக்க தகுந்த புத்தகம் என்றால் அது மிகையாகாது.

 

 

புத்தகம் - 03

ஏற்றத் தாழ்வுகளின் கதை.

 

பூமியில் மனிதர்கள் தோன்றிய போது இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. மனிதன் எப்போது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை கண்டுபிடித்தானோ அப்போதிலிருந்து ஏற்ற தாழ்வும் உருவாக தொடங்கியது. சுற்றுசூழல் பற்றி பேச ஆரம்பித்தால் ஏற்றதாழ்வை பேசாமல் இருக்க முடியாது.

 

இந்த மாற்றங்களை மனித இனத்தின் வளர்ச்சிப்போக்கில் எல்லாரும் வேட்டியாடி சமமாக பகிர்ந்துக்கொண்ட காலம்போய், சிலர் உழைக்கவும் சிலர் உழைக்காமல் பிறரின் உழைப்பு உறிஞ்சி வாழும் நிலை எப்படி வந்தது என்பது வரை மிக அழகாக சொல்லியுள்ளார்.

 

மனித இனம் முழுமைக்கும் பொதுவாக இருந்த நிலம் எப்படியெல்லாம் தனி மனிதர்களின் சொத்தாக மாறியது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். ஏற்ற தாழ்வை சமமாக்குவதன் மூலமே சுற்றுச்சூழலையும் சரி செய்யமுடியும் என்பதை எல்லோரும் உணரும் வண்ணம் கூறியுள்ளார்.

 

 

புத்தகம் - 04

பற்றி எரியும் பூமி.

 

இந்த தொகுப்பின் நான்காவது புத்தகம் பற்றி எரியும் பூமி. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிலையில் இருந்த பூமியின் வெப்பநிலையை கடந்த இருநூறு ஆண்டுகளில் மாற்றியிருக்கிறது மனிதனின் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள். புவி வெப்பமடைவதினால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும், என்ன என்ன அழிவுகளை ஏற்படுத்தும், அதனால் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப் படுவார்கள் என்று விளக்குகிறது இந்த புத்தகம்.

 

அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செய்யும் காரியங்கள் எப்படி எளிய மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தாவங்களையும் பாதிக்கிறது என்பதை இந்நூலாசிரியர் எளிமையான உதாரணங்கள் மூலம் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

 

 

புத்தகம் - 05

பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்.

 

இந்த தொகுப்பின் ஐந்தாவது புத்தகத்தின் பெயர் “பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்”. உண்மையான சுற்றுசூழல் பிரச்சனையை தொடங்கிய இடம் 1712 ஆண்டு நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் தொடங்குகிறது என்றும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு உதவியாக இருந்த நிலையில் இருந்து மனிதனை சுரண்டும் இடத்திற்கு அல்லது ஒரு சிலர் பெரும் லாபம் அடைய  வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளை சுயநலமாக பயன்படுத்தும் நிலைக்கு செல்லும்போது சுற்றுசூழல் மாசுப்படுகிறது என்பதை நமக்கு எளிமையாக உணர்த்துகிறது இந்த புத்தகம்.

 

நீண்ட ஆண்டுகள் உழைக்க கூடிய பொருட்களை கண்டுபிடித்தாலும், தங்களின் லாபத்திற்காக சில ஆண்டுகளே பயன்படுத்தும் அளவுக்கு திறன் குறைந்த பொருட்களை கண்டுபிடித்து, தயாரித்து சுற்றுசூழலை எப்படியெல்லாம் பெரும்முதலாளிகள் பாழ் ஆக்குகிறார்கள் என்பதையும், இந்த பூமிக்கு எருப்பு வைத்தவர்கள் அந்த பெரும் முதலாளிகள் என்றும் விளக்காமாக கூறுகிறது இந்த புத்தகம்.

 

தங்களை வல்லரசு நாடுகள் என கூறிக்கொள்ளும் நாடுகள்தான் இந்த பூமிக்கு பெரும் கேட்டை விளைவிக்கிறார்கள். தங்களின் சொகுசு வாழ்வுக்காக பிற நாடுகளை குப்பை தொட்டியாக மற்றும் அவர்கள் தங்களை நாகரிகமானவர்கள் என கூறிக்கொள்வது எவ்வளவு முரணானது.

 

 

புத்தகம் - 06

பச்சை வியாபாரம்.

 

சில புத்தகங்களின் பெயரை கேட்டதுமே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அண்மையில் அப்படி மனதை கவந்த புத்தகம் ம.ஜியோடாமின் எழுதிய “பிழைத்தல் அல்ல வாழ்தல்” என்ற புத்தகம். இது பத்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலாகும்.

 

இந்த தொகுப்பின் ஆறாவது புத்தகம் “பச்சை வியாபாரம்” என்பதாகும். பற்றி எரிந்து கொண்டிருக்கும் பூமியை காப்பாற்ற பெருநிறுவனங்கள் முயற்சி செய்வதாக சொல்லிக்கொண்டு செய்யும் வியாபாரமே பச்சை வியாபாரம். பூவுலகை நாசம் செய்துக்கொண்டு இருப்பர்களே பூவுலகை காக்க போராடுவதாக மக்களை நம்ப வைத்து எப்படி எல்லாம் அதை வியபாரமாக மாற்றுகிறார்கள் என்பதை இந்த புத்தகத்தில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

 

முதலாளித்துவம் தன் உற்பத்தியை பெருக்கிக்கொண்டே செல்ல செல்ல அதற்கு லாபம் மிகும். ஆனால் பூமியில் நச்சு பெருகும். நச்சை உருவாக்குபவர்களே நச்சை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் என்பது முரண்தான். ஆனால் நடமுறையில் அதுதான் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. பூமியை காக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான். ஆனால் அந்த அரசை இயக்குவது முதலாளித்துவம்தான் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எளிமையாக விளக்கி இருக்கிறார்.

 

 

புத்தகம் - 07

எந்திரன் – வேலையில் கரையும் வாழ்வு.

 

இந்த தொகுப்பின் ஏழாவது புத்தகம் எந்திரன். உபதலைப்பு வேலையில் கரையும் வாழ்வு. விரிவு அடைந்துக்கொண்டே இருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் மனிதன் எப்படி எந்திரனாக மாற்றப்படுகிறான் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

 

அவன் கைய வைத்தே அவன் கண்ணை குத்துவதுபோல் வளர்ச்சியின் பெயரால் முதலாளித்துவ உற்பத்தி எப்படி எல்லாம் மனிதனை மானிட நிலையிலிருந்து எந்திரன் நிலைக்கு தள்ளி அவன் வாழும் சூழலை கெடுக்கிறது என்பதையும் அதற்கு எப்படி எல்லாம் சமாதானம் சொல்லி அவனை பணிய வைக்கிறது என்பதையும் நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். 

 

இயற்கையோடு வாழ்ந்த மனிதன் எப்படி இயற்கையை விட்டு விலகி சென்றான். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேலைக்கு செல்வதாக கூறும் மனிதன் முடிவில் வேலைப்பளு காரணமாக குடும்பத்துடன் ஒன்றாக இருக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறான். இப்படியான நிலமைக்கு யார் அல்லது எது காரணம் இதற்கு மாற்று என்ன அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என பலவாறு சிந்திக்க தூண்டுகிறது இந்த புத்தகம்.

 

 

புத்தகம் - 08

விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள்.

 

இந்த தொகுப்பின் எட்டாவது புத்தகத்தின் தலைப்பு விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள். சந்தை பொருளாதாரம் மனிதர்களை எப்படி வெறும் நுகர்வோர்களாக மாற்றி வைத்திருக்கிறது இல்லை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

 

சனநாயகம், சுந்தந்திரம், தனிமனித உரிமை என்றெல்லாம் பேசினாலும் நாமெல்லாம் சந்தை பொருளாதரத்தில் வெறும் நுகர்வோர் மட்டுமே. சந்தை பொருளாதாரம் மனிதனை நுகர்வோனாக மாற்ற, நுகர்வோன் அவனுக்கு தேவைக்கு அதிகமான நிறைய பொருட்களை வாங்குகிறான், நிறைய பொருட்கள் விற்பனையாக சந்தை பொருளாதாரத்தில் பெரும் முதலாளிகள் பெரும் லாபம் பார்க்கிறார்கள். ஆனால் தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியினால் சுற்றுசூழல் சீர்கெடுகிறது. நுகர்வோனாக மாறும் மனிதன் மானுட கரிசனங்களை இழக்கிறான். மனிதனின் அகமும் சூழலும் கெட காரணமாக இருக்கும் சந்தைப் பொருளாதரத்தை வீழ்த்தாத வரை மனிதனும் பூமிக்கும் மீட்சி கிடையாது. அதை எப்படி, எதனால்.. உடனடியாக விடைக்காணப்பட வேண்டிய கேள்விகள்.

 

 

புத்தகம் - 09

குறைவே நிறைவு.

 

இந்த தொகுப்பின் ஒன்பதாவது புத்தகத்தின் தலைப்பு குறைவே நிறைவு. இதுவரையிலான புத்தகங்கள் சுற்றுசூழல் எப்படியெல்லாம் மாசுபடுகிறது, அதற்கான அடிப்படை காரணிகள் என்ன என்ன என்பதை நமக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியது. இந்த புத்தகம் ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுசூழல் மாசுமாட்டை குறைக்க என்ன என்ன செய்யமுடியும் என்பதை சுருக்கமாக சொல்கிறது.

 

இயற்கை வளங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்த பொருளும் அதனளவில் சுற்றுசூழலை பாதிக்கவே செய்யும்.  நாம்(தனிமனிதர்கள்) எவ்வளவு குறைவான பொருட்களை பயன்படுத்தி வாழ்ந்தாலே நாம் சுற்றுசுழல் மாசுபாடுகளை குறைக்க முயல்கிறோம் என்பதை பலவிதமான பொருட்களை முன்வைத்து சிறப்பாக விளக்கி கூறியுள்ளார். ரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் மினிமலிசத்திற்கு மாறுவது அல்லது அப்படி வாழ முயற்சி செய்யவேண்டும் என்பதேயாகும். இதனால் நமக்கு உடனடியான பொருளாதார லாபமும் நீண்ட நோக்கில் புவிக்கு நல்ல சுற்றுசூழலும் அமையும் என்பது இதன் சிறப்பாகும்.

 

 

புத்தகம் - 10

வளங்குன்றா வளர்ச்சி அல்ல: தேவை, மட்டுறு வளர்ச்சி.

 

இந்த தொகுப்பின் பத்தாவது புத்தகத்தின் தலைப்பு வளங்குன்றா வளர்ச்சி அல்ல: தேவை, மட்டுறு வளர்ச்சி. சுற்றுசூழலை சரிசெய்ய அல்லது சுற்றுசூழல் சீரழிவை கட்டுக்குள் கொண்டுவர தேவையான கருத்துக்களை கொண்ட கையேடு இது என்றால் அது மிகையாகாது.

 

சந்தைப் பொருளாதாரத்திற்கான மாற்று என்ன, அதை சரிசெய்ய தேவையான அமைப்புகள் எப்படி இயங்க வேண்டும், ஒவ்வொரு நாட்டின் அரசுகளின் மற்றும் ஐ.நாவின் செயல்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும், எது அத்தியாவசியம், எது உடனடியாக செய்படுத்த வேண்டியது, ஒவ்வொரு பொருள் உற்பத்திலும் எதற்கு முன்னுரிமை கொடுத்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என எல்லாமும் இந்த சிறு புத்தகத்தில் விளக்கமாக கூறப்பட்டு இருக்கிறது,

 

சுயமுன்னேற்ற புத்தகங்களில் உங்கள் குறிக்கோள்களையும் அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கால அளவையும் ஒரு நோட்டில் எழுதி ஒரு கனவு புத்தகத்தை உருவாக்க சொல்வார்கள். அதேபோல் இந்த புத்தகத்தை சுற்றுசூழல் சார்ந்த ஒரு கனவு புத்தகம் என்றும் கூறலாம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 

இந்த புத்தகத்தினை பூவுலகின் நண்பர்கள் சிறப்பான முறையில் தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.

 

19.11.2023.

திரை. 21

 Farha – Darin J. Sallam.

இரண்டாம் உலகபோரில் இனத்தின் பெயரால் ஹிட்லரின் நாசி படைகளால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அது சார்ந்து இதுவரை நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. புதிது புதிதாக இன்னும் வந்துக்கொண்டும் இருக்கிறது. உலக மக்கள் அனைவரிடமும் யூதர்களுக்கு அனுதாபமும் இருக்கிறது. அந்த அனுதாபத்தினாலும் சில நாடுகளின் நலனுக்காகவும் யூதர்களுக்கென தனிநாடு(இஸ்ரேல்) ஒன்று பாலஸ்தீனர்களின் நிலத்தில் உருவாக்கப்பட்டது. அன்று முதல் பாலஸ்தீனர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.
பாலஸ்தீன மக்களின் துயரத்தின் ஒரு துளிதான் Farha திரைப்படமாகும். குவைத்தில் வாழும் ஜோர்டன் நாட்டவரான இயக்குனர் Darin J. Sallam, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தினை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட 1948 ஆண்டில் நடக்கிறது. சொந்த நிலத்திலிருந்து பாலஸ்தீனர்கள் விரட்டப்படும் சூழலில் நகரத்து போய் படிக்க வேண்டும் என கனவு காணும் ஒரு கிராமத்து பதின்ம வயது பெண்ணின் வாழ்க்கையை சொல்வதினூடாக பாலஸ்தீனர்களின் வாழ்வு சொல்லப்படுகிறது.
நாசிகளால் குரூரமாக சொல்லப்பட்ட இனமான யூதர்கள், இப்போது பாலஸ்தீனர்களை நிலத்துக்காக மிகவும் குரூரமாக கொன்றுகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இதை தொடர்ந்து 75 ஆண்டுகளாக செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த தொடக்கத்தின் சிறு புள்ளியை இப்படம் நம் கண்முன் காட்சியாக கொண்டு வருகிறது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, அது பேசும் அரசியல், படம் உருவாக்கப்பட்டுள்ள விதம் என அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த படத்தினை இஸ்ரேல் அரசு தடை செய்து இருக்கிறது. இதிலிருந்தே இந்த படம் பேசும் அரசியல் எவ்வளவு உண்மையாகவும் தீவிரமாகவும் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். 07.11.2023.

திரை. 20

 ஈரான் படங்களை பார்க்கும்போது, ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு எப்படி இவ்வளவு சிறப்பான படங்களை எடுக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். சில மலையாள, மாராத்தி படங்களை பார்க்கும்போது இதே மனநிலை தோன்றும்.

தமிழில் அப்படி ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு சிறப்பான படமாக ''கூழாங்கல்'' வெளிவந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு வரண்ட கிராமத்தையும் அதில் வாழும் சில மனிதர்களையும் உண்மைக்கு மிக நெருக்கமாக திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் இல்லை, மயிர்கூச்செரியும் சண்டை காட்சிகள் இல்லை. ஆனால் உண்மையான மானுட வாழ்க்கை இருக்கிறது.
தமிழில் ஓர் உலக சினிமா என சிலப்படங்களுக்கு விளம்பரம் மட்டும் செய்வார்கள். கூழாங்கல் உண்மையான வாழ்வை சொல்லும் தமிழ் திரைப்படம். அதனாலேயே அது உலக திரைப்படமாகவும் மிளிர்கிறது. 05.11.2023.

திரை. 19

 Killers of the Flower Moon – Martin Scorsese

அமெரிக்க திரைப்பட இயக்குனர்களில் பலர் 70+ மற்றும் 80+ வயதுகளிலும் தொடந்து திரைப்படம் இயக்கிகொண்டு இருப்பதை பல ஆண்டுகளாக வியந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அப்படி சினிமா சார்ந்து இயங்கவும் விருப்பம் கொள்கிறேன்.
இந்தியாவில் கடந்த வாரம் வெளியான அமெரிக்க திரைப்படம் Killers of the Flower Moon. இந்த படத்தின் இயக்குனர் (Martin Scorsese, Age-80). அத்துடன் நடிகர்(Robert De Niro, Age-80), படத்தொகுப்பாளர் (Thelma Schoonmaker, Age-83) மற்றும் இசையமைப்பாளர் (Robbie Robertson, Age-80) இவர்களைப் பார்த்து வியப்பு இன்னும் கூடுகிறது.
மார்ட்டின் ஒரு இயக்குனராக தனக்கு பிடித்த கதையை தனக்கு பிடித்த விதத்தில் சிறப்பாக இந்த படத்தை எடுத்து இருக்கிறார். இந்த கதை ஒரு துப்பறியும் கதையாக மாற வாய்ப்பு இருந்தும் அதை தெளிவாக தவிர்த்து இருக்கிறார்.
குறிப்பிட்ட திரைப்பட வகைமைக்கு நியாமாக இருக்க வேண்டும் என்றோ, திரைக்கதை தியரிகளுக்கு உட்பட வேண்டும் என்றோ, பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்றோ, பார்வையாளன் சோர்வடையாமல் இருக்க படத்தின் நீளம் குறைவாக இருக்க வேண்டும் என்பதையோ கருத்தில் கொள்ளாமல் படத்தை எடுத்து பார்வையாளனை பல விதங்களிலும் சிந்திக்க தூண்டி இருக்கிறார்.
1920-பதுகளில் நடந்த தொடர் கொலைகள் குறித்து எழுதப்பட்ட இதே பெயரிலான புத்தகத்தை ஆதாரமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அமெரிக்க வெள்ளையர்கள் எப்படியெல்லாம் கொலை செய்தார்கள் என்பதை ஒரு செவ்விந்திய குடும்பத்தை முன்வைத்து அன்றைய அரசியலை தெளிவாக பேசுகிறது இந்த திரைப்படம்.
செவ்விந்தியர்கள் மற்றும் வெள்ளையின மக்களின் வாழ்க்கையை ரத்துமும் சதையுமாக இப்படம் நம்முன் காட்சியாக கொண்டுவருகிறது. தோழமையும் துரோகமும் காலந்தோறும் மானிட வாழ்வை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் திரையில் பாருங்கள் நல்ல அனுபவமாக இருக்கும். 04.11.2023.

துளி. 388

தூக்கமில்லா இரவு ஒன்றில் உன் நினைவுகளின் துணையோடு தூரத்தில் தனித்து அலையும் நிலவை வேடிக்கை பார்க்கிறேன்.

30.09.2023.

9.07.2023

பதிவு. 75.

 

நான் படித்த மகாபாரத கதைகள். 

இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். இதில் குறிப்பாக மகாபாரதம் எனக்கு தெருக்கூத்து மற்றும் திரைப்படம் பார்த்ததிலும் மூலமே அறிமுகமாகிய நினைவு இருக்கிறது. பின்னாட்களில் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பரிச்சம் ஏற்படுகிறது.

புத்தகம் படிக்க தொடங்கிய பின் எனக்கு அறிமுகமான மற்றும் இன்றும் என் நினைவில் உள்ள சில புத்தங்கள் குறித்து நினைவு கூறுவதே இந்த பதிவின் நோக்கம்.

01.     மகாபாரதம் – வாரியார் சுவாமிகள்.                              இது பக்தர்களுக்கான மகாபாரதம். கிருஷ்ணன் கடவுள். அவன் தர்மத்தை காப்பாற்றவும் அதர்மத்தை வெல்லவும் நடத்திய லீலைகளே மகாபார யுத்தம். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் முன்வாழ்ந்த பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாரியார் கதையை ஆரம்பித்து விடுகிறார்.

02.     மகாபாரதம் – ராஜாஜி.                                              இது குழந்தைகளுக்கான மகாபாரதம். குழந்தைகளுக்கு பக்தியையும் தர்மத்தையும் போதிக்க எழுதப்பட்டதாக உணர்ந்தேன். எளிய மொழியில் சிறப்பாக கதை சொல்லியிருப்பார். கதைசொல்லியாக இந்த கதையை அவர் தொடங்கிய இடம் படித்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. பீஷ்மரின் அம்மாவை அவரது தந்தை பார்க்கும் காட்சியே இதன் தொடக்கம்.

03.     மஹாபாரதம் பேசுகிறது – சோ.ராமசாமி.                         இது அரசியலுக்கான மகாபாரதம். இது வியாசனின் கதையை நேரடியாக பின்பற்றி எழுதப்பட்டதாக சோ சொல்கிறார். மகாபாரத கதையில் இன்றைக்கு நெருடலாக நாம் உணரும் சில இடங்களுக்கு சோ ஒரு விளக்கம் தருகிறார். சிலது ஒத்து போகும். பலது ஒத்து போகாது. அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இதில் பிரதிபலிப்பதாக உணர்ந்தேன். இது இரண்டு பாகம். நான் முதல் பாகம் மட்டுமே படித்துள்ளேன்.

04.     பாஞ்சாலி சபதம் – பாரதியார்.                                   இது மகாபாரதத்தில் ஒரு சிறுபகுதி. இது கவிதையாக எல்லாருக்குமானது. இதில் பீமன், அர்சுனன் மற்றும் பாஞ்சாலி சபதம் ஏற்கும்போது பேசும் வசனங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் தன்மையுடையது. இந்த கதையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் அஞ்ஞனா பூரி இயக்கிய நாடகம் இனிமையான நினைவாக இருக்கிறது.

05.     யயாதி – வி.எஸ்.காண்டேகர் – மாரத்தி.                       இதுவும் மகாபாரத கதையின் ஒரு சிறுபகுதி. பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவனான யயாதியின் காதல்கள் மற்றும் காமங்களை மையமிட்ட கதையாகும். மனம் அமைதியடையாத வரை காமம் நிறைவு பெறுவதில்லை. எவ்வளவு அனுபவித்தாலும் அந்த அனுபவத்தில் இருந்து புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதே காமத்தின் இயல்பு என்றும் அதனால் மன அடக்கத்தின் மூலமே காமத்தை வெல்ல முடியும் என்பதை யயாதி உணரும் இடம் மிகவும் அற்புதமானது. இந்த கதையை மட்டும் இரண்டுமுறை படித்துள்ளேன். மறுபடியும் படிக்கும் திட்டமும் இருக்கிறது.

06.     உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்.                          இது நவீன மொழியின் மகாபாரதம். இவ்வளவு சின்ன புத்தகத்தில் அவ்வளவு பெரிய கதையை எப்படி சொல்லி இருப்பார் என இந்த புத்தகத்தை பார்த்ததும் எனக்குள் வியப்பாக தோன்றியது. ஆனால் கதையை படிக்க பிடித்துப்போனது. எஸ்.ராவின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. காலத்தில் முன்னும் பின்னுமான இதன் கதை சொல்லல் முறை மிகவும் உவப்பானதாக இருந்தது. இதில் எஸ்.ரா மொழியை கையாண்ட விதம் பிரமிப்பாக இருந்தது.

07.     பருவம் – எஸ்.எஸ்.பைரப்பா – கன்னடம்.                         இது யாதார்த்தமான மகாபாரதம். நான் படித்த மகாபாரத பிரதிகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது. மகாபாரத கதையில் இருக்கும் கடவுள் அல்லது அதீத சக்திகளை நீக்கிவிட்டு இக்கதை மனிதவாழ்வில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்த நாவல். நாவலாசிரியர் எஸ்.எஸ்.பைரப்பா பல ஆராய்சிகள் மேற்கொண்டு, தகவல்களை மனித வாழ்வாக மாற்றி சிறப்பான படைப்பாக பருவம் நாவலை உருவாக்கி இருக்கிறார்.

08.    இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் – மலையாளம்.           இது பீமனின் பார்வையிலான மகாபரதம். பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்த பீமனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தனக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணன் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுண்டு வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் தம்பியின் பார்வையில் பாண்டவர்களின் வாழ்வு விரித்து சொல்லப்படுகிறது.

09.     திரெளபதியின் கதை – பிரதிபாராய் – ஒரியா.                     இது பாஞ்சாலியின் பார்வையிலான மகாபாரதம். ஐந்து பாண்டவர்களின் மனைவியான திரெளபதி அரசவையில் வைத்து அவமானப்படுத்தும்போது கிருஷ்ணன் வந்துதான் அவளின் மானம் காப்பற்றபட வேண்டியிருக்கிறது. கணவர்(கள்) இருந்தும் ஒரு பெண்ணின் மானத்தை இன்னொருர் வந்து காப்பற்ற வேண்டிய சூழலில் அந்த பெண்ணின் மனநிலைகள் என்ன..? ஆண்கள் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட ஏற்படுத்தும் போரினால் பாதிக்கப்படுவது இருதரப்பிலும் பெண்ணாகவே இருக்கிறாள். இதற்கான காரணம் என்ன..? பெண்ணிய பார்வையில் குடும்பம், அரசு, போர் என எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் நாவலாக இது இருக்கிறது.

நீங்கள் படித்து வியந்த மகாபாரதம் சார்ந்த கதைகள் குறித்து பதிவிட்டால் அதை தேடி படிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். 




8.31.2023

பதிவு. 74.

 திரெளபதியின் கதை – பிரதிபாராய்.

கதைகளின் தொகுப்பான இதிகாசம் மகாபாரதம். அந்த கதைகளை நவீன எழுத்தாளர்கள் பலர் மறுபடியும் எழுதியுள்ளார்கள். மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பீமனின் பார்வையில் மகாபாரதத்தை சொல்கிறது. அதே போன்று ஒரிய எழுத்தாளர் பிரதிபாராய் யக்ஞசேனி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பாஞ்சாலியின் பார்வையில் மகாபாரத கதையை சொல்கிறது. இதுவே தமிழில் இரா.பாலச்சந்திரனால் திரெளபதியின் கதையாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
திரெளபதி தனது ஐந்து கண்வன்மார்களுடன் பூத உடலுடன் சொர்க்கம் செல்லும் வழியில் மயங்கி விழுகிறாள். “அவள் நம் ஐவரையும் சமமாக நேசிக்கவில்லை, அர்சுனன் மீது அதிக நேசம் கொண்டிருந்தாள் அதனால் அவள் சொர்க்கம் புகமுடியாது, யாரும் திரும்பி பார்க்காமல் என்னை பிந்தொடருங்கள்” என்று அவளின் மூத்த கணவன் தருமன் தன் தம்பிகளிடம் சொல்கிறான். இமையமலையில் அடிவார பொன்மணலில் மயங்கி கிடக்கும் திரெளபதி தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதையை நினைத்துப் பார்க்கிறாள் என்ற வடிவத்தில் இக்கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
மன்னன் துருபதன் ஏழை துரோணரை அவமதிக்கிறான். இளவரசர்களின் குருவாக துரோணர் தன் மாணவர்களை கொண்டு துருபதனை பழிவாங்குகிறார். பழிக்கு பழி வாங்க துருபதன் யாகம் வளர்த்து வரமாக ஒரு மகனையும் ஒரு மகளையும் பெறுகிறான். அந்த மகளின் பெயர் யக்ஞசேனி. அவளுக்கு கிருஷ்ணா, பாஞ்சாலி, திரெளபதி என பல பெயர்கள் இருக்கிறது. அவளுக்கு குழந்தை பருவமே கிடையாது.
திரெளபதி அறிவாற்றலும் கலைமனமும் கொண்ட இளவரசியாக வாழ்க்கை தொடங்குகிறாள். கனவுகள் மிகும் இளம்பருத்தில் அவள் கிருஷ்ணனையும், கர்ணனையும் நினைத்து மயங்குகிறாள். சுயம்வரத்தில் அர்சுனால் வெல்லப்பட்டு குந்தியால் ஐவருக்கும் மனைவியாக பகிர்ந்து அளிக்கப்படுகிறாள். இங்கு தொடங்கும் அவளின் துயரம் அவள் மரணிக்கும் கடைசி கணம் வரை அவளைப் பிந்தொடர்கிறது.
திரெளபதியின் மனம் எவ்வளவு இலகுவானதாக இருந்தது, பிறகு எப்படியெல்லாம் இறுகிபோனது, மறுபடியும் அது எப்படி கருணைமிக்கதாக மாறியது என அவளின் மன உணர்வுகளை இந்தநாவலில் பிரதிபாராய் மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார். ஒரு மனைவியாக, ஒரு தாயாக, ஒரு தோழியாக, ஒரு மகாராணியாக, அவமானத்தை தாங்கும் பெண்ணாக, பழிவாங்க துடிக்கும் பெண்ணாக, விருந்தினாக வந்த எதிரியையும் மன்னிக்கும் பெண்ணாக என திரெளபதியின் பல முகங்களை நாம் இக்கதையில் தரிசிக்கலாம். பெண்ணிய பார்வையில் இக்கதை போர் எதிர்ப்பு மனநிலையும் பதிவு செய்கிறது.
இந்தநாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரா.பாலச்சந்திரன் மிக நேர்த்தியாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்ட நாவல் போன்று இருக்கிறது.
இந்தநாவலை சாகித்திய அகாதெமி குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.


- 30.08.2023.

துளி. 387.

அனுமதிக்காக காத்துகிடக்கின்றன என் ஆசைகள் உன் இதயவாசலில்... - 25.08.2023.

துளி. 386.

உண்மையாக சொன்னதை பொய் என்றும் பொய்யாக சொன்னதை உண்மை என்றும் புரிந்துக்கொள்ளும் உன்னை புரிந்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறேன் தனிமையில். - 24.08.2023.

துளி. 385.

மழையை பார்த்ததும் கவிதை எழுத தோன்றுகிறது.

காதல் இல்லாதவன்
காற்றையும் மழையும் பார்த்துதான் கவிதை எழுத வேண்டும்.
கவிதையின் தலைப்பு
மழையை வேடிக்கைப் பார்ப்பவன்.
மழையை மட்டுமா
வேடிக்கை பார்க்கிறாய்
வாழ்க்கையே வேடிக்கைதானே.
அகமும் புறமும்
முட்டி மோதியதில்
கவிதைக்கு ஓர் முற்றும். - 23.08.2023.

துளி. 384.

ரசித்து உண்ண தெரிந்தவனு(ளு) பட்சணம் கிடைப்பதில்லை.

காதலையும் காமத்தையும்
கட்டுடலில் வைத்து
கண்ணாமூச்சு ஆடுகிறது காலம்.
அதை வெல்வேனா
அல்லது
அதனால் வெல்லப்படுவேனா..
போற்றுமின் போற்றுமின்
எல்லாம் கைகூடும்
களிப்பு களியிடும்
கனவை. - 22.08.2023.

துளி. 383.

உன் நினைவுகளால் உருண்டோடுகிறது என் காலம்... - 21.08.2023.

பதிவு. 73.



 விலாஸம் – பா.திருச்செந்தாழை.

பா.திருச்செந்தாழையின் “விலாஸம்” சிறுகதை தொகுப்பை கடந்த இரண்டு வாரங்களில் படித்து முடித்தேன். இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றில் 11 கதைகள் 2021 ஆண்டில் எழுதப்பட்டவையாகும். இந்த ஆண்டில் அவர் மிகுந்த படைப்பு மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இச்சிறுகதைகள் இருக்கிறது.
2021 ஆண்டில் எழுதப்பட்ட 11 சிறுகதைகளில் எனக்கு எட்டு கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. அவற்றில் இருந்து என் எண்ணங்களை இங்கு தொகுத்தளிக்க முயல்கிறேன். இந்த பதினொரு கதைகளில் பா.திருச்செந்தாழையின் கதை உலகம் தோராயமாக மூன்றாக உள்ளது.
ஒன்று நவீன உலகத்தில் ஆண் பெண் உறவு சார்ந்த கதைகள். இதில் டீ-ஷர்ட், திராட்சை மணம் கொண்ட பூனை, த்வந்தம், மஞ்சள் பலூன்கள் மற்றும் வேர் என ஐந்து சிறுகதைகள் உள்ளன. இவற்றில் உச்சமான கதையாக நான் “த்வந்தம்” சிறுகதையை சொல்வேன். நெடும் காலமாக ஆண் பெண் உறவில் ஒருவரையொருவர் வெல்ல துடிக்கும் மல்யுத்தம் தொடந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இந்த கதையில் ஆண் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு களத்தைவிட்டு வெளியேறுகிறான்.
இரண்டாவது நவதானிய வியபார மண்டி மற்றும் அந்த பின்புலம் சார்ந்த கதைகள். இதில் விலாஸம், அசபு மற்றும் ஆபரணம் என மூன்று கதைகள். இதில் விலாஸம் கதை பரவலாக அறியப்பட்ட கதையாகும். இந்த படைப்பாளி எனக்கு அறிமுகமானதும் இந்த கதை வழியேதான். ஆனால் எனக்கு ஆபரணம் கதை மிகவும் பிடித்திருக்கிறது. வியபார தளத்தில் தம்பியை அண்ணன் எப்படி நயவஞ்சகாக வெல்கிறான் என்பதை சொல்லும் கதை. ஆனால் காலம் அண்ணனை வேறுவிதமாக வஞ்சித்து விடுகிறது. நீ ஒருவன் பொருளை திருடினால் இன்னொருவன் உன் பொருளை திருடி விடுவான் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் எளிய மக்கள் மனதில் பதிந்த நீதியாகும். அதை இந்த கதையில் உணர முடிந்தது.
மூன்றாவது உலகம் வறுமையில் இருக்கும் மனிதர்கள் சார்ந்த கதைகள். சிலர் அதிலிருந்து மீள படும் பாடுகளையும், சிலரை அது எப்படி குற்றவாளியாக மாற்றுகிறது என்பதையும் சொல்லும் கதைகள். இதில் துடி, துலாத்தான் மற்றும் காப்பு என மூன்று கதைகள். இதில் எனக்கு துடி கதை பிடித்திருக்கிறது. வறுமை ஒருவனை எப்படி வன்முறையாளனாக மாற்றுகிறது என்பதை சொல்லு கதையாகும்.
பா.திருச்செந்தாழையின் மொழி, கதைச்சொல்லல் முறை சில இடங்களில் மயக்கம் தருவதாகவும் சில இடங்களில் மிகவும் எளிமையாகவும் இருக்கிறது. இரண்டுமே மனதை கவர்வதாகவும் படிக்க இன்பம் அளிப்பதாகவும் இருக்கிறது.
கடைசி எட்டு கதைகளை இந்த தொகுப்பில் சேர்த்திருக்க வேண்டியதில்லை. முதல் 11 கதைகளுக்கும் கடைசி எட்டு கதைகளுக்கும் அவ்வளவு இடைவெளி. ஆனால் இந்த எட்டு கதைகளை எழுதிய பிறகுதான் இந்த 11 கதைகளையும் எழுதியிருக்கிறார். ஒன்று காலவரிசையில் தொகுத்து இருக்கலாம் அல்லது 2021-ல் எழுதிய கதை ஒன்று அதற்கு அடுத்து பழைய கதை ஒன்று என தொகுத்து இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. இப்போது இருக்கும் தொகுப்பு முறை முடிவில் திருப்தியாக இல்லை.
இந்த புத்தகத்தினை எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான அட்டைப் படத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு ஜனவரி 2022 வெளியாகி இருக்கிறது.
- 20.07.2023.

All reaction

துளி. 382.

கலங்காது காத்திருங்கள் காதல் வரும் கண்டிப்பாக... - 20.07.2023.

6.30.2023

துளி. 381.

இயற்கையின் பேரன்பு பெருமழையாய்... 20.06.2023.

துளி. 380.

அகால மரணத்திற்கு சென்று திரும்பும் தருணங்களில் எல்லாம் உணர்கிறேன் நாம் நிலையாமையின் நிழலில் உயிர் வாழ்வதை... 12.06.2023.

துளி. 379.

எதுவும்
ஒருவழி பாதையாக
இருக்க முடியாது அன்பு உட்பட...  11.06.2023.

துளி. 378.

பிரிவென்னும் வெக்கையை தணிக்க நினைவுமழை பொழிகிறது. 05.06.2023.

துளி. 377


பூங்காவில் இருக்கும் சறுக்கு பலகையில் ஒரு குட்டிப் பையன் எதிர் திசையில்
ஏற முயற்சிக்கிறான்
முடியாமல்
சறுக்கி விழுகிறான்
மறுபடியும் முயற்சி
மறுபடியும் வீழ்ச்சி
இருந்தும் கைவிடவில்லை
அவன் முயற்சிப்பதை
வியந்து பார்க்கும்
இவனுக்கு
அந்த சிறுவனே
தானாகிவிட்டதாக தோன்றுகிறது.

21.05.2023.


துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...