11.19.2023

பதிவு. 76

 




பிழைத்தல் அல்ல வாழ்தல் – ம.ஜியோடாமின்.

 

 

புத்தகம் - 01

உயிர்வலை

 

சில புத்தகங்களின் பெயரை கேட்டதுமே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அண்மையில் அப்படி மனதை கவந்த புத்தகம் ம.ஜியோடாமின் எழுதிய “பிழைத்தல் அல்ல வாழ்தல்” என்ற புத்தகம். இது பத்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலாகும்.

 

முதல் புத்தகத்தின் பெயர் “உயிர்வலை” என்பதாகும். சுமார் 75 பக்கங்களில் இவ்வளவு சிந்தனைகளா என வியக்க வைக்கும் புத்தகம் இது. உணவு சங்கிலி என்று ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட செய்தியைதான் இது சொல்கிறது. ஆனால் சொல்முறையில் நம்மை வியக்க வைக்கிறது.

 

கடலில் வாழும் சாலமன் மீன்கள் தன் சந்ததியை பெருக்க பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து ஆற்றின் வழியே மலைக்கு வருகிறது. உப்பு நிறைந்த கடலில் வாழ்ந்த சாலமன் மீன் எப்படி நன்னீருக்குள் வந்து தன் சந்ததியை உருவாக்குகிறது, எப்படி தன் ஆதி பிறப்பிடத்தை கண்டு பிடிக்கிறது, பெரும் கூட்டமாய் வரும் மீன்கள் வழியில் எந்த எந்த உயிரினங்களுக்கு உணவாகிறது, மீன்கள் வருவதை அந்த உயிரினங்கள் எப்படி அடையாளம் காண்கிறது. இயற்கை எப்படி உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று இணக்கமாக வாழுமாறு படைத்திருக்கிறது என்பதை அற்புதமாக விளக்கி செல்கிறார்.

 

ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு பெரும் மேச்சல் நிலம் எப்படி பல்லாயிரம் உயினங்களுக்கு பெரும் உணவு மேசையாக இருக்கிறது என்பதையும், ஒரே தாவரம் எப்படி பலவிதமான உயிரினங்களின் உணவாக இருக்கிறது என்பதையும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லி செல்கிறார்.

 

இந்த புத்தகத்தில் நான்கு கட்டுரைகள் இருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் ம.ஜியோடாமின். இவர் பெயரே இப்போதுதான் அறிமுகம். ஆனால் அவரின் எழுத்துநடை மிகவும் எளிமையாக இருக்கிறது. அவர் சொல்லும் தகவல்களோ மிகவும் பிரமிப்பு தரக்கூடியதாக இருக்கிறது. சுற்றுசூழல் சார்ந்து எழுத்தில் நிறைய தகவல்கள் வருவதால் அதை படிப்பவன் மனதில் எளிதாக கடத்தும் கலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதை இவர் மிகவும் லாவகமாக செய்துள்ளார்.

 

 

புத்தகம் – 02

நாமும் நம் உறவினர்களும்

 

சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகத்தினை படிக்க தொடங்கினோம், அதனால் இந்த புத்தகத்தின் தலைப்பின்படி இந்த பூவுலகிம் வாழும் உயிர்களை நேசிக்க வேண்டும் என்ற சொல்ல வருகிற புத்தகமாக இது இருக்கும் என்று நினைத்தபடி படிக்க தொடங்கினேன். புத்தகத்தினை முழுதாக படித்து முடித்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

 

இந்த பூமி எப்படி தோன்றியது. அது உள்ளும் புறமும் காலவெள்ளத்தில் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது. அதில் எத்தனை வகையான உயிரனங்கள் வாழ்ந்து மறைந்தன.

 

சுமார் 460 கோடி ஆண்டுகள் வயதுள்ள பூமியில் மனிதனின் வயது சில லட்சம் வருடங்களுக்கு முன்பு தொடங்கினாலும் சுமார் பன்னிரெண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இப்போது இருக்கும் மனித இனத்தின் முன்னோர்களின் வரலாறு தொடங்குகிறது.

 

இந்த பூமியில் வாழும் எல்லா உயிர்களும் ஒரே உயிரில் இருந்து உருவான வரலாற்றை எளிமையாக எலோருக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார்.

 

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் குரங்கு இருக்கிறதே, அது எப்படி என வினவும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தினை படிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் கேள்விகளுக்கான பதில் இதில் இருக்கிறது.

 

பூமி தோன்றி இதுவரை 12 மணிநேரம்தான் ஆகிறது என கணக்கிட்டால், இதில் மனிதனின் தோற்றம் என்பது கடைசி 38 விநாடிகள் மட்டுமே என்ற வரையறையை படிக்கும்போது பூமியில் மனித இனத்தின் தோற்றம் என்பது எவ்வளவு சிறியது. ஆனால் இன்று இந்த பூமியை சிதைத்துக்கொண்டு இருப்பவர்களும் இந்த மனிதர்கள்தான்.

 

பூமியின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் மற்றும் மனிதர்களின் தோற்றம் குறித்து எளிமையாகவும் சுவையாகவும் எழுதியுள்ளார். இது பள்ளியில் பாடமாக வைக்க தகுந்த புத்தகம் என்றால் அது மிகையாகாது.

 

 

புத்தகம் - 03

ஏற்றத் தாழ்வுகளின் கதை.

 

பூமியில் மனிதர்கள் தோன்றிய போது இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. மனிதன் எப்போது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை கண்டுபிடித்தானோ அப்போதிலிருந்து ஏற்ற தாழ்வும் உருவாக தொடங்கியது. சுற்றுசூழல் பற்றி பேச ஆரம்பித்தால் ஏற்றதாழ்வை பேசாமல் இருக்க முடியாது.

 

இந்த மாற்றங்களை மனித இனத்தின் வளர்ச்சிப்போக்கில் எல்லாரும் வேட்டியாடி சமமாக பகிர்ந்துக்கொண்ட காலம்போய், சிலர் உழைக்கவும் சிலர் உழைக்காமல் பிறரின் உழைப்பு உறிஞ்சி வாழும் நிலை எப்படி வந்தது என்பது வரை மிக அழகாக சொல்லியுள்ளார்.

 

மனித இனம் முழுமைக்கும் பொதுவாக இருந்த நிலம் எப்படியெல்லாம் தனி மனிதர்களின் சொத்தாக மாறியது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். ஏற்ற தாழ்வை சமமாக்குவதன் மூலமே சுற்றுச்சூழலையும் சரி செய்யமுடியும் என்பதை எல்லோரும் உணரும் வண்ணம் கூறியுள்ளார்.

 

 

புத்தகம் - 04

பற்றி எரியும் பூமி.

 

இந்த தொகுப்பின் நான்காவது புத்தகம் பற்றி எரியும் பூமி. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிலையில் இருந்த பூமியின் வெப்பநிலையை கடந்த இருநூறு ஆண்டுகளில் மாற்றியிருக்கிறது மனிதனின் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள். புவி வெப்பமடைவதினால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும், என்ன என்ன அழிவுகளை ஏற்படுத்தும், அதனால் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப் படுவார்கள் என்று விளக்குகிறது இந்த புத்தகம்.

 

அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் செய்யும் காரியங்கள் எப்படி எளிய மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தாவங்களையும் பாதிக்கிறது என்பதை இந்நூலாசிரியர் எளிமையான உதாரணங்கள் மூலம் நமக்கு உணர்த்தி விடுகிறார்.

 

 

புத்தகம் - 05

பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்.

 

இந்த தொகுப்பின் ஐந்தாவது புத்தகத்தின் பெயர் “பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள்”. உண்மையான சுற்றுசூழல் பிரச்சனையை தொடங்கிய இடம் 1712 ஆண்டு நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் தொடங்குகிறது என்றும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு உதவியாக இருந்த நிலையில் இருந்து மனிதனை சுரண்டும் இடத்திற்கு அல்லது ஒரு சிலர் பெரும் லாபம் அடைய  வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளை சுயநலமாக பயன்படுத்தும் நிலைக்கு செல்லும்போது சுற்றுசூழல் மாசுப்படுகிறது என்பதை நமக்கு எளிமையாக உணர்த்துகிறது இந்த புத்தகம்.

 

நீண்ட ஆண்டுகள் உழைக்க கூடிய பொருட்களை கண்டுபிடித்தாலும், தங்களின் லாபத்திற்காக சில ஆண்டுகளே பயன்படுத்தும் அளவுக்கு திறன் குறைந்த பொருட்களை கண்டுபிடித்து, தயாரித்து சுற்றுசூழலை எப்படியெல்லாம் பெரும்முதலாளிகள் பாழ் ஆக்குகிறார்கள் என்பதையும், இந்த பூமிக்கு எருப்பு வைத்தவர்கள் அந்த பெரும் முதலாளிகள் என்றும் விளக்காமாக கூறுகிறது இந்த புத்தகம்.

 

தங்களை வல்லரசு நாடுகள் என கூறிக்கொள்ளும் நாடுகள்தான் இந்த பூமிக்கு பெரும் கேட்டை விளைவிக்கிறார்கள். தங்களின் சொகுசு வாழ்வுக்காக பிற நாடுகளை குப்பை தொட்டியாக மற்றும் அவர்கள் தங்களை நாகரிகமானவர்கள் என கூறிக்கொள்வது எவ்வளவு முரணானது.

 

 

புத்தகம் - 06

பச்சை வியாபாரம்.

 

சில புத்தகங்களின் பெயரை கேட்டதுமே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றிவிடும். அண்மையில் அப்படி மனதை கவந்த புத்தகம் ம.ஜியோடாமின் எழுதிய “பிழைத்தல் அல்ல வாழ்தல்” என்ற புத்தகம். இது பத்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு நூலாகும்.

 

இந்த தொகுப்பின் ஆறாவது புத்தகம் “பச்சை வியாபாரம்” என்பதாகும். பற்றி எரிந்து கொண்டிருக்கும் பூமியை காப்பாற்ற பெருநிறுவனங்கள் முயற்சி செய்வதாக சொல்லிக்கொண்டு செய்யும் வியாபாரமே பச்சை வியாபாரம். பூவுலகை நாசம் செய்துக்கொண்டு இருப்பர்களே பூவுலகை காக்க போராடுவதாக மக்களை நம்ப வைத்து எப்படி எல்லாம் அதை வியபாரமாக மாற்றுகிறார்கள் என்பதை இந்த புத்தகத்தில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

 

முதலாளித்துவம் தன் உற்பத்தியை பெருக்கிக்கொண்டே செல்ல செல்ல அதற்கு லாபம் மிகும். ஆனால் பூமியில் நச்சு பெருகும். நச்சை உருவாக்குபவர்களே நச்சை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் என்பது முரண்தான். ஆனால் நடமுறையில் அதுதான் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. பூமியை காக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான். ஆனால் அந்த அரசை இயக்குவது முதலாளித்துவம்தான் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எளிமையாக விளக்கி இருக்கிறார்.

 

 

புத்தகம் - 07

எந்திரன் – வேலையில் கரையும் வாழ்வு.

 

இந்த தொகுப்பின் ஏழாவது புத்தகம் எந்திரன். உபதலைப்பு வேலையில் கரையும் வாழ்வு. விரிவு அடைந்துக்கொண்டே இருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் மனிதன் எப்படி எந்திரனாக மாற்றப்படுகிறான் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

 

அவன் கைய வைத்தே அவன் கண்ணை குத்துவதுபோல் வளர்ச்சியின் பெயரால் முதலாளித்துவ உற்பத்தி எப்படி எல்லாம் மனிதனை மானிட நிலையிலிருந்து எந்திரன் நிலைக்கு தள்ளி அவன் வாழும் சூழலை கெடுக்கிறது என்பதையும் அதற்கு எப்படி எல்லாம் சமாதானம் சொல்லி அவனை பணிய வைக்கிறது என்பதையும் நூலாசிரியர் தெளிவாக கூறுகிறார். 

 

இயற்கையோடு வாழ்ந்த மனிதன் எப்படி இயற்கையை விட்டு விலகி சென்றான். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேலைக்கு செல்வதாக கூறும் மனிதன் முடிவில் வேலைப்பளு காரணமாக குடும்பத்துடன் ஒன்றாக இருக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறான். இப்படியான நிலமைக்கு யார் அல்லது எது காரணம் இதற்கு மாற்று என்ன அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என பலவாறு சிந்திக்க தூண்டுகிறது இந்த புத்தகம்.

 

 

புத்தகம் - 08

விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள்.

 

இந்த தொகுப்பின் எட்டாவது புத்தகத்தின் தலைப்பு விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள். சந்தை பொருளாதாரம் மனிதர்களை எப்படி வெறும் நுகர்வோர்களாக மாற்றி வைத்திருக்கிறது இல்லை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

 

சனநாயகம், சுந்தந்திரம், தனிமனித உரிமை என்றெல்லாம் பேசினாலும் நாமெல்லாம் சந்தை பொருளாதரத்தில் வெறும் நுகர்வோர் மட்டுமே. சந்தை பொருளாதாரம் மனிதனை நுகர்வோனாக மாற்ற, நுகர்வோன் அவனுக்கு தேவைக்கு அதிகமான நிறைய பொருட்களை வாங்குகிறான், நிறைய பொருட்கள் விற்பனையாக சந்தை பொருளாதாரத்தில் பெரும் முதலாளிகள் பெரும் லாபம் பார்க்கிறார்கள். ஆனால் தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியினால் சுற்றுசூழல் சீர்கெடுகிறது. நுகர்வோனாக மாறும் மனிதன் மானுட கரிசனங்களை இழக்கிறான். மனிதனின் அகமும் சூழலும் கெட காரணமாக இருக்கும் சந்தைப் பொருளாதரத்தை வீழ்த்தாத வரை மனிதனும் பூமிக்கும் மீட்சி கிடையாது. அதை எப்படி, எதனால்.. உடனடியாக விடைக்காணப்பட வேண்டிய கேள்விகள்.

 

 

புத்தகம் - 09

குறைவே நிறைவு.

 

இந்த தொகுப்பின் ஒன்பதாவது புத்தகத்தின் தலைப்பு குறைவே நிறைவு. இதுவரையிலான புத்தகங்கள் சுற்றுசூழல் எப்படியெல்லாம் மாசுபடுகிறது, அதற்கான அடிப்படை காரணிகள் என்ன என்ன என்பதை நமக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியது. இந்த புத்தகம் ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுசூழல் மாசுமாட்டை குறைக்க என்ன என்ன செய்யமுடியும் என்பதை சுருக்கமாக சொல்கிறது.

 

இயற்கை வளங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் எந்த பொருளும் அதனளவில் சுற்றுசூழலை பாதிக்கவே செய்யும்.  நாம்(தனிமனிதர்கள்) எவ்வளவு குறைவான பொருட்களை பயன்படுத்தி வாழ்ந்தாலே நாம் சுற்றுசுழல் மாசுபாடுகளை குறைக்க முயல்கிறோம் என்பதை பலவிதமான பொருட்களை முன்வைத்து சிறப்பாக விளக்கி கூறியுள்ளார். ரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் மினிமலிசத்திற்கு மாறுவது அல்லது அப்படி வாழ முயற்சி செய்யவேண்டும் என்பதேயாகும். இதனால் நமக்கு உடனடியான பொருளாதார லாபமும் நீண்ட நோக்கில் புவிக்கு நல்ல சுற்றுசூழலும் அமையும் என்பது இதன் சிறப்பாகும்.

 

 

புத்தகம் - 10

வளங்குன்றா வளர்ச்சி அல்ல: தேவை, மட்டுறு வளர்ச்சி.

 

இந்த தொகுப்பின் பத்தாவது புத்தகத்தின் தலைப்பு வளங்குன்றா வளர்ச்சி அல்ல: தேவை, மட்டுறு வளர்ச்சி. சுற்றுசூழலை சரிசெய்ய அல்லது சுற்றுசூழல் சீரழிவை கட்டுக்குள் கொண்டுவர தேவையான கருத்துக்களை கொண்ட கையேடு இது என்றால் அது மிகையாகாது.

 

சந்தைப் பொருளாதாரத்திற்கான மாற்று என்ன, அதை சரிசெய்ய தேவையான அமைப்புகள் எப்படி இயங்க வேண்டும், ஒவ்வொரு நாட்டின் அரசுகளின் மற்றும் ஐ.நாவின் செயல்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும், எது அத்தியாவசியம், எது உடனடியாக செய்படுத்த வேண்டியது, ஒவ்வொரு பொருள் உற்பத்திலும் எதற்கு முன்னுரிமை கொடுத்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என எல்லாமும் இந்த சிறு புத்தகத்தில் விளக்கமாக கூறப்பட்டு இருக்கிறது,

 

சுயமுன்னேற்ற புத்தகங்களில் உங்கள் குறிக்கோள்களையும் அதை அடைவதற்கான வழிமுறைகளையும் கால அளவையும் ஒரு நோட்டில் எழுதி ஒரு கனவு புத்தகத்தை உருவாக்க சொல்வார்கள். அதேபோல் இந்த புத்தகத்தை சுற்றுசூழல் சார்ந்த ஒரு கனவு புத்தகம் என்றும் கூறலாம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 

இந்த புத்தகத்தினை பூவுலகின் நண்பர்கள் சிறப்பான முறையில் தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.

 

19.11.2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...