6.30.2018

பதிவு . 09

நானும் மெளனியும்
தமிழ் சிறுகதையின் தந்தை புதுமைபித்தன் மெளனியை "தமிழ் சிறுகதையின் திருமூலர்" என போற்றினார்.
"நான் புதிதாக கதை எழுத தொடங்குவதற்கு முன் மெளனியின் "மாறுதல்" சிறுகதையை வாசிப்பேன்" என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
இந்த இரண்டு குறிப்புகள்தான் என்னை மெளனியை தேடி வாசிக்க தூண்டியது.
ஆனால் முதலில் வாசிக்க கிடைத்தது
சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்த மெளனியின் "சாவில் பிறந்த சிருஸ்டி" சிறுகதை பற்றிய கட்டுரையேயாகும். இதுவும் மெளனியை வாசிக்க தூண்டுதலாக இருந்தது.
நீண்ட தேடலுக்கு பிறகு சச்சிதானந்தன் தொகுத்த மெளனி கதைகள் புத்தகம் கிடைத்தது. நேஷனல் புக் டிரஸ்ட் அல்லது சாகித்திய அகாதெமி வெளியீடு. வாசித்து பார்த்தால் பெரும் ஏமாற்றம்.
"சாவில் பிறந்த சிருஸ்டி" சிறுகதைப்பற்றிய கட்டுரை கவர்ந்த அளவுக்கு கூட கதை பிடிக்காமல் போனது.
ஏன் இப்படி நிகழ்ந்தது என யோசித்தபோது நம் வாசிப்பு இன்னும் நுட்பமாக வேண்டுமோ என்னவோ என நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அவருடைய கதைகள் ஒன்று இரண்டை அவ்வப்போது வாசிப்பதுண்டு. மெளனியின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான "அழியாச் சுடர்" சிறுகதையை நான்கு ஐந்து முறை ( சில ஆண்டுகள் கால இடைவெளியில்) வாசித்தபின் எனக்கு அந்த கதை புரிந்தது, மிகவும் பிடித்துபோனது.
மெளனியை கொண்டாடும் கட்டுரைகளையும், நிராகரிக்கும் கட்டுரைகளையும் வாசித்து குழம்பும் வாசகனுக்கு மெளனியை சிறப்பான முறையில் எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் செய்துள்ளார்.
அண்மையில் புத்தக நாளை முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸ்யில் நடந்த கூட்டத்தில் மெளனியை பற்றி பேசிய எஸ்.ரா "மெளனி எழுத்து அவரது சமகால படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்து எப்படி மாறுபடுகிறது, அவரை புரிந்துகொள்ள எப்படி வாசிக்க வேண்டும்" என நிறைய செய்திகளை சொல்லிக் கொண்டே செல்கிறார். இந்த உரையை கேட்ட பின் நான் மறுபடியும் மெளனியை வாசிக்க திட்டமிட்டுள்ளேன். மெளனியின் எழுத்துக்கள் புரியவில்லை என்றவர்களுக்கு இந்த உரை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

                                                                                                                           17.06.2018
YOUTUBE.COM
டிஸ்கவரி புக் பேலஸ் தேசாந்திரி பதிப்பகம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...