ஆகச் சிறந்த 50 மலையாள சினிமா கதைகள்
சில புத்தகங்களின் தலைப்பை பார்த்ததுமே படிக்க வேண்டும் என தோன்றும். அப்படி அண்மையில் என்னை கவர்ந்த புத்தகத்தின் தலைப்பு “ஆகச் சிறந்த 50 மலையாள சினிமா கதைகள்”. இதை எழுதியவர் பொன்.சுதா. இவர் இயக்கிய மறைபொருள் மற்றும் நடந்த கதை குறும்படங்கள் எனக்கு பிடித்தமானவை.
இவற்றில் நான் ஐந்து படங்களை பார்த்து இருக்கிறேன். 15 படங்களை கேள்வி பட்டு இருக்கிறேன். மீதமுள்ள 30 படங்களின் தலைப்பே எனக்கு இந்த புத்தகத்தில்தான் அறிமுகமாகிறது.
விதவிதமான கதைகள், பெரும்பாலான கதைகள் எளிய மனிதர்களின் கதையாகவே இருக்கிறது. இந்த கதைகளில் அரசியல், வரலாறு, ஐதீகம், குடும்ப உறவுகள், தியாகம், துரோகம், பழிவாங்கல் என மானுடத்தின் அனைத்து பக்கங்களையும் பார்க்க முடிகிறது. இந்த கதைகளின் வடிவங்கள் பல தமிழ் படங்களில் எடுத்து கையாண்டு இருப்பதும் தெரியவருகிறது.
மலையாள சினிமா கதைகளை எழுத்தாளர் பொன்.சுதா மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியுள்ளார். மிகவும் குறைந்த பக்கங்களில், இக்கதைகளை படித்தவுடன் அந்த படங்களை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளார்.
ஒவ்வொரு திரைப்படத்தின் கதை நிறைவுற்ற பிறகு அடைப்பு குறிக்குள் அந்த படத்தின் ஆதார செய்தியையும், அந்த பெற்ற விருதுகளை, அந்த படத்தின் இயக்குனர் குறித்த சிறு குறிப்பும் கொடுத்துள்ளார். அந்த செய்திகள் சுவையாக இருக்கிறது.
இந்த புத்தகத்தினை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் அஜயன் பாலாவின் நாதன் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டு உள்ளது. இதன் முதற் பதிப்பு சென்ற ஆண்டு (2024) வெளியாகியுள்ளது.
20.01.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக