11.30.2024

சிறுகதை. 2 (நம்பிக்கை)

நம்பிக்கை.

                                                    

முருகன் காலைக்கும் மதியத்துக்குமான இடைப்பட்ட நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு முடித்தான். காலதாமாக சாப்பிட்டதினால் உடலும் மனமும் மந்தமாக இருந்தது. சாப்பாட்டு பாத்திரங்களை விட்டு சற்றுதள்ளி உடலை கீழே சாய்த்தான். வெளியில் வெயில் உக்கிரமாக மாறிக்கொண்டுப்பதை இங்கிருந்தே உணரமுடிந்தது. இன்னும் சற்றுநேரத்தில் அறையின் காற்றாடியிலிருந்து வெப்பக் காற்றுவீச தொடங்கிவிடும். இந்த நாளை எப்படி கடத்துவது என்று யோசித்தப்போது அவனின் அலைப்பேசி ஒலித்தது.

முருகன் படுத்தப்படியே கையை மட்டும் நீட்டி அலைப்பேசியை எடுத்து அழைப்பது யாரென பார்த்தான். சந்திரன் அழைக்கிறான். எடுக்கலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்தான். பிறகு சந்திரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

 

ஹலோ.

 

நல்லா இருக்கீங்களா...?

 

நல்லா இருக்கேன் சந்திரன்.

 

நீங்க எப்படி இருக்கீங்க...?

 

நல்லாயிருக்கேன்.

 

எப்படி போயிட்டு இருக்கு...?

 

ஏதோ போயிகிட்டு இருக்கு

 

முருகரே இப்படி சொன்னாஎப்படி.

எங்க சந்திரன். என்னோட எல்லா திட்டமும் தோத்துகிட்டு இருக்கு.

 

உங்களுக்குமட்டுமா. உலக முழுக்க எல்லாருக்கும் இதானே நெலம.

 

அது என்னமோ உண்மைதான். பணம் இருக்கறவனுக்கு பிரச்சனை இல்ல. நம்மளமாதிரி ஆளுங்க நெலம என்னாவுறது. சாதாரண நாட்களிலேயே சினிமாவில் வாய்ப்பு தேடிகிட்டு இருக்கவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை. அப்ப ஒரு அடின்னா. இப்போ நாலு அடியாள இருக்கு.

 

அது உண்மைதான். சினிமாவுல மத்தவங்களவிட உதவி இயக்குனர்களின் நெலம இன்னும் சிக்கலானதுதான். ஆமா நம்ம யூனியன்ல மளிகை பொருட்கள் கொடுக்கிறாங்களே.

 

கொடுக்கிறது தெரியும். நான் தான் யூனியன்ல மெம்பர் இல்லையே.

 

நானும் தாங்க மெம்பர் இல்லைதான், நம்ம டக்ளஸ் தெரிமில்ல.

 

ஆமா. அவன்தான் ஊருக்கு போயிட்டானே.

 

ஊர்லதான் இருக்காப்ல.

 

அவருகிட்ட யாரோ ஒருத்தர் யூனியனில் மெம்பரா இல்லனாலும் பரவாயில்ல, வரசொல்லுங்க உதவி பொருட்கள் கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லியிருக்காராம். என்ன போய் வாங்கிக்க சொன்னாப்பல. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு நீங்க போய் வாங்கிக்கிறீங்களா.

 

இல்லங்க... மெம்பரா இல்லாமா அவங்க முன்னாடி போய் நிக்க எனக்கும் சங்கடமா இருக்கு...

 

உண்மைதான். எனக்கும் அதான் பிரச்சனை. சரி அதவிடுங்க. அப்பறம் என்ன பண்ணுறீங்க.

 

இப்பத்தான் சாப்பிட்டேன். சும்மா படுத்திருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க.?

 

சமையல் செய்யனும்.

 

நீங்க சமைச்சாச்சா என்ன சாப்பாடு...?

 

என்ன சாப்பாடு என்று இழுத்தான் முருகன்.

 

என்ன இழுக்குறீங்க

 

ஒன்னுமில்ல. நைட் அம்மா உணவகத்துல சப்பாத்தி சாப்பிட்டு காலைக்கும் சேத்துவாங்கிட்டு வந்தேன். அததான் இப்போ சாப்பிட்டேன். மதியத்துக்கு சமையல் செய்யனும்.

 

ஓ... ரெண்டு வேலையும் அம்மா உணவகத்திலேயே முடிச்சிடுறீங்களா.

 

என்னாப்பன்னறது நெலம அப்படி ஆயிடுச்சு. முன்னெல்லாம் வாரத்துல ஒருநாளு ரெண்டுநாளுதான் அங்க போவேன். இப்போ தெனம்போற மாதிரி ஆயிடுச்சு.

 

இதுல தப்பு என்ன இருக்கு. நம்மளமாதிரி ஆளுக்காத்தானே அம்மா உணவகம் திறந்திருக்காங்க.

 

முருகன் சிரித்தப்படியே நல்லா சமாதானம் சொல்லுறீங்க சந்திரன்.

 

சந்திரனும் சிரித்தான்.

 

சந்திரன் உங்ககிட்ட ஏற்கனவே சொன்ன கதையை இந்த டைம்ல எழுதிடனும்னு நெனைக்கறேன்.

 

வாவ்... நல்ல விசயங்க. அப்போ சொன்னத மொதல்ல எழுதியிடுங்க. தேவப்பட்டா நாம மறுபடியும் டிஸ்கஸ் பண்ணுவோம்.

 

சரிங்க எழுதிட்டு சொல்றேன்.

 

சரிங்க என்றபடி சந்திரன் போனை துண்டித்தான்.

 

முருகன் ஒரு கணம் அலைப்பேசியையே பார்த்தான். உதட்டில் சிறுபுன்னகையை தவழவிட்டபடி உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தான்.

 

***           ***         ***

 

சந்திரன் தறியுடன் நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறான். கதையில் சம்பள உயர்வுக்கான போராட்டம் நடக்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நீடிக்கிறது. தறியோட்டும் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் வாடுகிறார்கள். பசினால் தொழிலாளர்கள் சோர்ந்துவிடக்கூடாதே என சங்கத்துகாரர்கள் கவலைக்கொள்கிறார்கள்.

 

சந்திரனுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. நாவலை மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று தண்ணீர் குடிக்கிறான். வெளி எதிரியோடு போராடுவது எளிது. உள்ளிருக்கும் பசியோடு இறுதிவரை போராட முடியுமா என்ற சிந்தனை அவனுள் ஓடுகிறது. வயிற்றை தடவி பார்க்கிறான். காலையில் சாப்பிடாதினால் வயிறு உள்ளொடுங்கி கிடக்கிறது. இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் சந்திரன் காலை உணவு சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டுவிட்டான். படிப்பது அல்லது எழுதுவது காரணமாக இரவு தூங்க நடுசாமம் கடந்துவிடுகிறது. காலை கண் திறந்து பார்த்தால் சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும். மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். பதினோரு மணியாகிறது. இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பாடு வாங்க போகலாமென படிக்க உட்காருகிறான். அப்போது அவனுடைய அலைப்பேசி ஒலிக்கிறது. அலைப்பேசியை எடுத்து யாரென பார்க்கிறான். முருகன்தான் அழைக்கிறான். அலைப்பேசியை ஆன் செய்து காதில் வைக்கிறான்.

 

சொல்லுங்க முருகன்.

 

ஹலோ சந்திரன் என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க.

 

புத்தகம் படிச்சிக்கிட்டு இருக்கேன்.

 

பரவாயில்ல நீங்க ஜாலியா இருக்கிங்க.

 

சந்திரன் சிரித்தப்படியே அப்படிலாம் ஒண்ணுமில்ல முருகன்.

 

சமைச்சிட்டீங்களா..

 

எங்க சமைக்கறது, கரண்டடுப்பு ஒர்க் ஆகல.

 

அய்யோ அப்பறம்.

 

அப்பறம் என்ன மோகன் ஸ்டியோவாசல தர இலவச உணவ வாங்கித் தான் சாப்பிடுறேன். நீங்க என்னா பண்ணுறீங்க.

 

இந்த ஊரடங்கு நாம செய்யக்கூடாதுன்னு நெனைக்கறதையெல்லாம் செய்யவைக்குதே.

 

பணமில்லாதவனுக்கு மொதல்ல காணமபோறது அவனோட சுயமரியாதைதான்.

 

சரியா சொன்னீங்க சந்திரன்.

 

ம்.

 

நான் கூட இன்னைக்கு டைரக்டர் யூனியன் வரைக்கும் போனேன்.

 

என்ன விசயம்.

 

உதவிப் பொருட்கள் வாங்கத்தான்.

 

அன்னைக்கு வேணாம்னு சொன்னீங்க.

 

அன்னைக்கு வேணாம்னுதான் சொன்னேன். அப்படியே இருக்க முடியலையே. என் ரூம்மெட், அதான் சச்சின் கபடி குழு டைரக்டர் மணிகண்டன் இருக்காருல.

 

ஆமாம்.

 

அவரு யூனியன் மெம்பர். அவருடையத போய் வாங்கிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். சரி நம்மள தேடி வரத ஏன் வேண்டாம்னு சொல்லனு. அதான் போய் வாங்கிகிட்டு வந்தேன்.

 

எப்படி போனீங்க

 

நடந்துதான்.

 

இந்த வெயில் நேரத்திலா..?

 

ஆமாம்.

 

இப்பதான் போயிட்டு வந்தேன்.

 

என்னடாது முருகனுக்கு வந்த சோதனை.

 

சோதனைதான். சரியான வெயில். அதுல நடந்துபோறதே பெரும்பாடு. வரும் போது அரிசி மூட்டைய தூக்கிட்டு வரப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சந்திரன். எதுக்காக சென்னைக்கு வந்தோம். ஏன் நம்ம வாழ்க்கை இப்படியே இருக்கு. நம்ம கையில் காசு இருந்தா ஊருக்கு போயிருக்கலாம். இப்போ வேலயில்ல, கைல காசு இல்ல. இது எப்ப முடியும்னு தெரில.

 

முருகன் மனச தளர விடாதீங்க. ஒம்பதாவது படிக்கும் போது லைப்ரரில உக்காந்து யோசிச்சிங்களே இன்னைக்கு நான் மத்த சாதனையாளர்களோட வாழ்க்கை கதையை படிக்கறேன். நாளைக்கு என்னுடைய சாதனைக் கதைய மத்தவங்க படிக்கனும்னு அத மறுபடியும் நெனைச்சுங்க.

 

சிரித்தப்படியே முருகன் சொல்கிறான். சந்திரன் அத நான் நெறைய பேர்கிட்ட சொல்லியிருக்கேன் ஆனா நீங்க மட்டும்தான் அத அடிக்கடி எனக்கு ஞாபகபடுத்திகிட்டே இருக்கிங்க.

 

அது வெறும் வார்த்தையில்லை முருகன்.

 

உண்மைதான் சந்திரன்.

 

கதை எழுத போறதா சொன்னீங்களே எழுதுனீங்களா?

 

யோசிச்சுகிட்டு இருக்கேன். அடிக்கிற வெயில எதையுமே யோசிக்க முடியல. பகல ரூம்ல இருக்கவே முடியல. அவ்வளவு வெக்கையா இருக்கு.

 

உங்க ரூம் ஆஸ்பெட்டாக்ஸ்ல. ரொம்ப கொடுமையாதான் இருக்கும். பகல்ல மட்டுமில்லாம ராத்திரியும் வெக்கையா இருக்குமே.

 

ஆமாங்க. ராத்தி தூங்க பன்னெண்டு மணியாயிடுது. கண்ணெல்லாம் எரியுது.

 

கடைக்கு எதும் வேலை வருதா

 

எங்கங்க.

 

எல்லாரும் வீட்ல இருக்கறதுனால யாரும் இப்போ புதுசா எதும் தைக்க வரதில்ல. பேசாம கடை வைக்காம இருந்திருக்கலாமோன்னு தோணுது. ரூம் வாடகை, கடை வாடகைன்னு ரெண்டு வாடகை கொடுக்கனும். கந்துக்கு பணம் கட்டனும். எப்படி சமாளிக்கறதுன்னே தெரில.

 

கவலபடாதீங்க. கையில் ஒரு பைசா இல்லாமா உங்க உழைப்பால ஒரு கடைக்கு மொதலாளியா ஆயிருக்கிங்க. ஒரு வருசம் தாக்கு பிடிச்சியிருக்கிங்க. அதுவே சாதனைதான்.

 

நான் இதுக்காகவா சென்னைக்கு வந்தேன். தப்பு பண்ணிட்டேன். சான்ஸ் தேடிக்கிட்டே இருந்திருக்கனும். கல்யாண ஆசையில கொஞ்சம் கொழம்பிட்டேன்.

 

கல்யாணம் ஆசப்படுறது தப்பா என்ன...?

 

தப்பு இல்லதான். ஆனா சினிமாக்காரன்னு சொன்னாலே பொண்ணு தரமாட்டேங்கறாங்களே. அதான் டைலர் கடைவச்சா அந்த தொழில காமிச்சு கல்யாணம் பண்ணியிடலாம்ன்னு நெனைச்சேன். மொதல்ல சினிமான்னா வேண்டாம்னு சொன்னாங்க, இப்ப வயசு அதிகம், படிப்பு இல்லன்னு புதுபுது காரணமா சொல்றாங்க.

 

இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்ல முருகன். சினிமாவுல வேலப்பாக்குற நெறையபேருக்கு இருக்கு. நானும் தான் ஐஞ்சு வருசமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன். தேடித்தேடி கலச்சி போயி இனிமே படம் பண்ணியிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு கதைய ரெடி பண்ணி சொல்லலாம்னு ரெடியானேன். ஊரடங்கு போட்டு ஊட்ல உக்கார வச்சிட்டாங்க.

 

ஆமாம். நீங்க லைக்காவுல ஒருத்தருக்கு கத சொன்னீங்களே. அவர் இப்போதொடர்புல இருக்காரா.

 

தொடர்புல  இருக்காரு. அவருக்கு கத புடிச்சிடுச்சியிருக்கு. மேலிடத்துல ஒருத்தருக்கு மாச கடைசில சொல்ல சொன்னாரு. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே.

 

அதுக்கப்பறம் அவர்கிட்ட பேசுனீங்களா.

 

பேசினேன். கொரோனா முடிஞ்சி பாத்துக்கலாம்னு சொல்லியிட்டாரு.

 

ஏங்க நமக்கு மட்டும் இப்படி நடக்குது.

 

ஏன்னா, நாம சராசரி ஆட்கள் மாதிரி வாழலையே. நமக்கு வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் பெருசு பெருசுத்தான் வரும்.

 

சரிங்க... யூனியன் போயிட்டு வந்தத சொல்லத் தான் கூப்பிட்டேன். அங்க நம்ம சையத்த பாத்தேன்.

 

ஓ... என்ன சொல்லுறாரு சையத்...?

 

எல்லாருக்கும் உள்ள பிரச்சனைத் தான் அவருக்கும். இன்னும் ரூம்க்கு வாடகை கொடுக்கல. அவரு யூனியன்ல தற்காலிக மெம்பருன்னுட்டு உதவிபொருட்கள் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.

 

அவசரகாலத்து உதவிக்கு என்னங்க தற்காலிகம் நிரந்தரம்ன்னு சொல்லிக்கிட்டு.

 

நீங்க சொல்றது சரிதான். அப்படிலாம் யாரு பாக்கிறா கொடுக்காம இருக்க ஒரு காரணம் அவ்வளவு தான். வேறென்ன.

 

வேற என்ன சொன்னாரு.

 

அவரும் ஒரு புது தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி ஓக்கே பண்ணி வச்சியிருந்தாராம். இப்போ அந்த தயாரிப்பாளர் கொரோனா முடிஞ்சி பாத்துக்கலாம்ன்னு சொல்லியிட்டாராம்.

 

அடகொடுமையே. இது மாதிரி எத்தன பேர் வாழ்க்கை கனவு கலைஞ்சு போச்சோ.

 

நெறைய பேரோட கனவ இந்த கொரோனா கலைச்சிசுச்சு.

 

சரிங்க சந்திரன் சாப்பாடு வாங்க கிளம்புங்க டைம் ஆயிடுச்சு.. நாம நாளைக்கு பேசலாம்.

 

சரிங்க முருகன்... என்று சொல்லிவிட்டு சந்திரன் இணைப்பை துண்டித்தான். கழிவறைக்கு சென்று வந்து, சட்டையை எடுத்துபோட்டுக் கொண்டான். கைக்குட்டயை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு வெளியேவந்து அறையை பூட்டினான்.

 

***         ***           ***

 

மதிய உணவுக்கு பிறகு அறையில் உட்கார்ந்து இருக்கவே முடியவில்லை. வெப்பக் காற்றினால் உடல் எரிகிறது. முருகன் எழுந்து சட்டையை அணிந்து கொண்டு அறையை பூட்டிவிட்டு சாவியை மறைவிடத்தில் வைத்துவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கினான். பக்கத்து சந்திலிருக்கும் அந்த சிறிய வேப்பமர நிழலை நோக்கி நடந்தான். மர நிழல் குளுமையாக இருந்தது.

மெல்லிய காற்று உடலை தழுவி சென்றது. உடலுக்கும் மனதுக்கும் குளுமையாக இருந்தது. கிராமத்தில் என்றால் ஒரு கயிற்று கட்டிலை கொண்டு வந்துபோட்டு அதில் படுத்துக்கொள்ளலாம். வெயில் நேரத்தில் வேப்பமர நிழலில் படுத்துறங்கினால் உடம்புக்கு நல்லது என்று பாட்டி சொல்லும். இந்த வெயிலில் பாட்டி எப்படி இருக்கிறதோ, இந்த ஊரடங்கில் பாட்டி இறந்து போனால் ஊருக்கு செல்வது எப்படி என்ற எண்ணம் தோன்றியதும். அவனுக்கே அவன் மேல் கோவம் வந்தது.

நல்லாயிருக்கும் போது ஏன் சாவைப் பற்றி நினைக்க வேண்டும். எண்ணத்தை திசைமாற்ற அலைப்பேசியை எடுத்து அழைத்தவர்கள் பேசியவர்கள் பட்டியலை பார்த்தான். பட்டியலில் சந்திரன் பெயர் வந்ததும், கடைசியாக இரண்டு முறை சந்திரன் அழைத்த போதும் தாம் பேசவில்லை என்பது அவன் நினைவுக்கு வந்தது. உடனே சந்திரனுக்கு அழைத்தான். சோதிக்காமல் அவனும் உடனே எடுத்துவிட்டான்.

 

சொல்லுங்க முருகன்.

 

சாரி சந்திரன், நீங்க கூப்பிட்டப்ப வேலையா இருந்தேன். அதான் எடுக்க முடியல.

 

அதனால் என்னங்க. வேலயிருக்கிறப்போ அதான முக்கியம்.

 

என்னங்க குரல் ரொம்ப டல்லா இருக்கு. சாப்டீங்களா இல்லையா..?

 

சாப்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஊருக்கு பேசினேன். ஊர்ல உடன் பங்காளி அண்ணன் ஒருத்தர் இறந்துட்டாரு. ஊர்ல இருந்தா இன்னை முழுக்க அந்த வீட்டு வாசல்ல தான் இருக்கனும். அதுக்கு போக முடியலையேன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன்.

 

ஓ...

 

போனவாரம் சொந்தத்துல ஒருத்தர் திடீரென உடம்பு சரியில்லாமா இறந்து போனார். அதுக்கும் போக முடியல. என்ன வாழ்க்கை இது.

 

கொடுமைதான்.

 

இப்பதான் ஊர்ல யாரும் திடீரென செத்திட்டா என்ன பண்ணறதுன்னு நெனைச்சு பாத்தேன். சாவ மறக்கத்தான் உங்களுக்கு போன் பண்ணேன். நீங்களும் சாவபத்திதான் யோசிச்சுகிட்டு இருக்கிங்க. என்ன ஒற்றும. நான் வேணும்ன்னா அப்பறமா கூப்பிடட்டா.

 

இல்ல... பரவாயில்ல பேசுங்க முருகன்.

 

நம்ம நண்பர்கள் வேற யார்கிட்டேயும் பேசுனிங்களா.?

 

ம். பேசுனேன்.

 

நம்ம சையத் ரூம காலிபண்ணிட்டு ஊருக்கு போயிட்டாரு.

 

ஏன்.?

 

மூனு மாசமா வேல இல்ல. இனி வேல ஆரம்பிக்க எப்படியும் ஆறுமாசம் ஆகும். அதுவரையில் ரூமுக்கு வாடகை கொடுக்கறது கஷ்டம். ரூம்க்கு கொடுத்த அட்வான்ஸ் கழிஞ்சு போயிடுச்சி அதனால சாமன்கள கொண்டு போயி அவங்க அண்ணன் வீட்ல போட்டுட்டு ஊருக்கு போயிட்டாரு. வேல ஆரம்பிச்சா பிறகு வந்து புது ரூம் பாத்தகலாம்னு சொன்னாரு.

 

நல்ல ஐடியாத்தான். ரூம் அட்வான்ஸ் முடிஞ்சதும் வீட்ட பூட்டிடுவேன்னு வீட்டு ஓனர் சொன்னதா நம்ம செந்தில்கூட சொன்னாரு. நெறைய பேருக்கு இந்த பிரச்சன. எனக்கும் அட்வான்ஸ் கழிஞ்சிடுச்சு வீட்டு ஓனர் என்ன சொல்லப் போறார்னு தெரியல.

 

வசமா சிக்கிட்டோம். சமாளிச்சுதான் ஆகனும். பாக்கலாம் காலம் மாறாமலா போயிடும்.

 

காலம் மாறும். மாறாம எங்கபோவுது. மாறப்ப நம்ம நெலம எப்படி இருக்கபோவுதோ. அதான் கவல வேறென்ன.

 

சரி விடுங்க. அதபத்தி பேசுனா அது போய்கிட்டே இருக்கும்.

 

என்னவேல திடீர்னு பிஸியாயிட்டீங்க.

 

ம்... சந்திரன்... நம்ம மார்த்தாண்டம் இருக்காருல

 

யார சொல்லுறீங்க?

 

வாடக வீடு படத்துல ஹீரோவா நடிச்சாரே!

 

ஆமாம். ஆமாம். தெரியுது சொல்லுங்க.

 

அவரு இப்போ ஒரு படம் எடுக்கிறாரு.

 

இந்த டைம்லையா.

 

ஆமாம். என் கடைக்கு பக்கத்துல எடுத்தாரு. பாத்து பேசினேன். என்ன ஒரு சின்ன கேரக்டர்ல நடிக்கவச்சாரு.

 

ஓ... எப்படி எடுக்குறாரு...

 

ரொம்ப சிம்பிளா... மொபைல் போன்ல.. ஆனா ரொம்ப தெளிவா இருக்காரு.. மொதல்ல நடிக்க தான் போனேன். நா சின்ன சின்ன ஐடியா கொடுத்தேன். அது அவருக்கு புடிச்சு போயிடுச்சு, உடனே என்னகூட இருந்து உதவி பண்ணுங்கன்னு சொல்லியிட்டாரு. ஒரு வாரமா அவர் கூடத்தான். அதான் உங்க போனகூட எடுக்க முடியல.

 

நல்லது. இந்த மாதிரி சின்ன படங்கள்ல வேல பாக்குறப்பத் தான் நாம நெறையா கத்துக்க முடியும்.

 

அவரே ஹீரோவ நடிக்கறதால நான் தான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். அவருக்கு என் வேல புடிச்சு போயிடுச்சு. முருகன் உங்களுக்கு எல்லாமே தெரியுது ஏன் இன்னும் டைக்ராகல அப்படி கேக்குறாரு.

 

சூப்பருங்க..

 

சீக்கிரமா கதைய ரெடி பண்ணி டைரக்டரா ஆகுங்க அப்டினு என்ன நல்லா என்கரேஜ் பண்றாரு.

 

நல்ல விசயம் தானே. சீக்கிரம் கதைய ரெடி பண்ணுங்க.

 

ஆமாம். சந்திரன். புதுசா ஒரு ஐடியா பிடிச்சிருக்கேன். டைட்டில் கூட ரெடி. ஒரு படத்தோட ஹீரோ அவரே என்ன பாத்து அப்படி சொன்னது எனக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கு.

 

ம். நீங்க ஏற்கனவே ரெடி பண்ண கதை என்னாச்சு.

 

அது அப்பறம். இப்போ சின்ன பட்ஜெட்டில ஒரு கத ரெடி பண்ண போறேன்.

 

முருகன் நா ஒண்ணு சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டீங்களே.

 

சொல்லுங்க சந்திரன்.

 

சச்சின் கபடிகுழு சூட்டிங் போயிட்டு வந்தப்பவும் இப்படித்தான் ரொம்ப ஆர்வமா சொன்னீங்க. ஆர்வமா கதை எழுத ஆரம்பிச்சிங்க அப்பறம் பாதியில விட்டுடீங்க.

 

அப்ப கடைவச்சி கல்யாணம் பண்ணிடலாம்னு ஆர்வமா இருந்தேன். அதுதான் நடக்காம போச்சே. இப்ப நமக்கு வேற ஆப்சன் இல்ல. இப்பவும் என்ன சினிமாத்தான் காப்பத்துது. சச்சின் கபடிகுழு படத்துல வேல செஞ்சப்ப எனக்கு பெருசா சம்பளம் இல்லை. ஆனா அந்த டைரக்டரோட உதவியாளத்தான் இப்போ சாப்பாட்டு பிரச்சனை இல்லாம இருக்கு.

மார்தாண்டன் என்ன என்கரேஜ் பண்றதுக்கு காரணமும் சினிமாத்தான். நல்ல கதை ரெடி பண்ணினா அவரே கூட நடிக்கலாம். இந்த வாய்ப்ப மிஸ் பண்ணக்கூடாதுன்னு நெனைக்கிறேன்.

 

நல்ல விசயங்க. உங்க கிட்ட புடிச்சதே இதுதான். நா அடிக்கடி சொல்லுறது தான். ஒன்பதாவது படிக்கும் போது லைப்ரரில உக்காந்து யோசிச்ச அந்த முருகனோட மனநிலைய மறந்துடாதீங்க. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

 

கண்டிப்பா, இந்தமொற கதைய எழுதி முடிக்கறேன். கொரோனா முடிஞ்சதும் படம் எடுக்கறேன்.

 

மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் முருகன்.

 

நன்றி சந்திரன். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க நாம நாளைக்கு பேசுவோம்.

 

சரிங்க.

 

முருகன் இணைப்பை துண்டித்தான். அலைப்பேசியை சட்டைப் பைக்குள் வைத்தான். பேசும் போது தெரியாத வெப்பத்தை இப்போது உணர்ந்தான். கைக்குட்டையை எடுத்து முகத்தையும், கழுத்து பகுதியை துடைத்தான். சமதளத்தில் பரவும் நீரைப்போல் அவன் மனதுக்குள் ஓர் தெளிவு படர்வதை, அவனால் உணர முடிந்தது.

 

நன்றி : நடுகல் இணைய இதழ், செப்டம்பர் 2024.நம்பிக்கை

 

 


 

 

சிறுகதை.1 ( மயக்கம்)

 நடிகையின் பெயரை வைத்துள்ள பெண்கள் எல்லோரும் அந்த நடிகையின் சாயலை ஒத்திருப்பதில்லை. ஆனால் வெகுசில பெண்கள் மட்டும் அந்த நடிகையின் சாயலோடு இருப்பார்கள். எங்கக் கூட வேலைப் பார்த்த சரிதா, அந்த வெகுசில பெண்களில் ஒருத்தியாக இருந்தாள்.

ஐந்தடிக்கும் குறைவான உருவம். கண்ணை கவரும் கருமையான நிறம். முறைத்துப் பார்த்தால் மட்டும் பயமுறுத்தும் குண்டு விழிகள். அவள் சொற்கள் மூலம் சொல்வதைக் காட்டிலும், அவளுடைய விழிகள் மூலம் சொல்லும் செய்தியே அதிகமாக இருக்கும். அவளுக்கு கோபம் வந்தால் அந்தப் பெரிய விழிகளை இன்னும் கொஞ்சம் பெரிதாக்குவாள். மகிழ்ச்சி என்றால் அந்தக் கோலிக்குண்டு விழிகள் அலைபாய்ந்துக் கொண்டேயிருக்கும். எப்போதும் அமைதியாக இருப்பதைப் போன்ற தோற்றதை மட்டுமே அவளால் தரமுடியும்.

பழனிக்கு நேரம் மிக மெதுவாக ஊர்ந்து செல்வதாகப்பட்டது. காலை கண்விழித்தது முதல், சரிதாவின் நினைவாகவே இருந்தது. திருமணத்திற்குப் பிறகு அவளை நேரில் பார்க்கவேயில்லை. ஏன் ஃபோனில்கூட பேசவில்லை.

திடீரென நேற்று இரவு, சந்திக்கலாமா… என்று செய்தி அனுப்பியிருந்தாள். செய்தியைப் பார்த்ததும் மனதுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆர்வத்தோடு சந்திக்கலாமே என்று பதில் அனுப்பினான். என்ன விசயம் என்று கேட்டதற்கு, நாளைக்கு நேரில் சொல்வதாக சொல்லிவிட்டாள். என்னப் பேசபோகிறாள் என்று புதிராக இருந்தது.

பழனி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை பார்த்தான். அதுவொரு சின்ன கம்பெனி, அங்கு ஐந்து பேர் மட்டுமே வேலை பார்த்தனர். எல்லோருமே ஐ.டி.ஐ. படித்தவர்கள். கம்பெனி முதலாளியே ஐ.டி.ஐ. படித்தவர்தான். அந்த வளாகத்தில் ஐந்து சின்ன சின்ன கம்பெனிகள் இருந்தன. அனைத்திலும் ஆண்களே வேலைப் பார்த்தனர். ஒருநாள் கம்பெனிக்கு புதிதாக ஒரு பெண் வேலைக்கு வரப்போவதாக முதலாளி சொன்னார்.

எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பெண்ணின் வரவை, முதலாளியைவிட நாங்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கிடந்தோம். எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பெண் ஃபோன் செய்யவும் ஆறுமுகம்தான் சைக்களில் போய் அழைத்து வந்தான். அவளை முதலில் பார்க்கும் வாய்ப்பு அவனுக்குத்தான் கிடைத்தது.

சரிதா உயரம் குறைவான, கருத்த நிறமுள்ள பெண்ணாக இருந்தாள். முகமெல்லாம் முகப்பருக்கள். எங்கள் எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்தது. அவள் மெசினிஸ்ட். ஆவடி டேங்க் ஃபேக்டரியில் அப்ரண்டீஸ் பார்த்துள்ளாள். ட்ரிலிங் மெஷின் ஓட்டத் தெரியுமென்று சொன்னாள். ஆனால் எங்க மொதலாளி அவளுக்குப் பேப்பர் ஒர்க்-தான் கொடுத்தார். கம்பெனியைவிட்டு வெளியே போகும் மற்றும் உள்ளே வரும் பொருட்களுக்கு ரசீது போடுவது, கம்பெனியின் தினசரி செலவுகளை குறித்து வைப்பது, டெலிஃபோனில் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்வது… இப்படியான வேலைகள்.

நாட்கள் செல்ல செல்ல அவளின் கவனத்தைப்பெற எல்லோரும் முயன்றுக் கொண்டிருந்தோம். குறிப்பாக ஆறுமுகம் அதில் முதலிடத்தில் இருந்தான். காலையில் நேரத்தோடு வந்து கம்பெனி சைக்கிளை எடுத்துக்கிட்டுப்போய், அவளை அழைத்து வந்தான். மாலையில் அவளைப் பேருந்து நிலையத்துக்கு கொண்டுவிட வேண்டுமென்பதை மனதில் வைத்தே, வேலைகளை திட்டமிட்டான். இந்தப் போட்டியில் என்னுடைய கூச்ச சுபாவம் காரணமாக நான் கடைசி இடத்தில் இருந்தேன்.

பழனி முகத்தை சவரம் செய்துக்கொண்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு உடைகளை அயர்ன் செய்தான். அறை நண்பர்கள் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தனர். புன்னகைத்தப்படியே அவன் குளிக்கச் சென்றான். கல்யாணத்துக்கு பிறகு ஃபோனில் பேசிக்க வேண்டாம், நேரிலும் சந்திக்க வேண்டாம் என்று அவள்தான் சொன்னாள். எதற்காக ஆறு மாதத்திற்குப் பிறகு, இப்போது சந்திக்க வேண்டும் என்கிறாள். மறுபடியும் வேலைக்கு வரப்போகிறாளா, இல்லை கணவனோடு ஏதும் பிரச்சனையாக இருக்குமா… யோசனைகளோடு குளித்து முடித்தான்.

பழனி உயரமானவன். அதுப்பற்றி அவனுக்கு கொஞ்சம் பெருமைக்கூட உண்டு. பீரோ மேலிருக்கும் புத்தகக் கட்டுகளுக்கு இடையே இருக்கும் ரசீது புத்தகத்தை எடுக்க, அவ்வப்போது சரிதா பழனியை அழைப்பாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடையே புரிதல் ஏற்பட்டது. வேலை குறைவான நாளொன்றில் அனைவரும் ஒன்றாக சிரித்து பேசிக்கொண்டு, ஒருவரையொருவர் கேலி செய்துக்கொண்டனர்.

நான் வேலைக்கு வந்தப் புதுசுல என்கிட்ட பேசவே மாட்டீங்க, என்கிட்ட கடைசியா பேசுன ஆளே நீங்கத்தான். உங்கள அப்பாவின்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ என்னடானா எல்லாரையும் இப்படி கேலி பண்ணுறீங்க. நீங்க அப்பாவியில்ல… அடப்பாவிப் போலிருக்கே என்று சொல்லி, சரிதா பழனியைப் பார்த்துச் சிரித்தாள். அன்றுதான் அவன் மனதுக்குள்ளும் அவள் நுழைந்தாள்.

அறை நண்பர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர். காலை உணவை முடித்துவிட்டு, உடைகளை மாற்றிக்கொண்டு பழனி வெளியே செல்ல தயாரானான். அறையை பூட்டிவிட்டு சாவியை சன்னல் மறைவிலிருக்கும் ஆணியில் மாட்டினான்.

சரிதாவுக்கும் பழனிக்கும் நிறைய விசயங்களில் ஒற்றுமை இருந்தது. இருவரும் பேக்கரி போய் காபி சாப்பிடும் அளவுக்கு, அவர்களிடம் நெருக்கம் அதிகமானது. பழனிக்கு டீத்தான் பிடிக்கும் என்றாலும், அவளுக்காக காபிக்கு மாறினான். ஒருநாள் பேக்கரியில் வைத்து, பழனி சரிதாவிடம் தன் காதலைச் சொன்னான். முதலில் மெளனமாக இருந்த சரிதா, முடிவில் அது சரிவராது என்றாள். ஏன் சரிவராது… என்ன காரணம் சொல்லுன்னு… பழனி கெஞ்சினான்.

நான் குள்ளமா இருக்கேன், நீங்க உயரமா இருக்கிங்க. நாம ஜோடியா போனா எல்லாரும் கேலிப்பண்ணுவாங்க என்றாள்.

இதுல்லாம் ஒரு காரணமா, இப்போ நாம ஒண்ணாதானே சுத்துறோம்.

இது வேற அது வேற….. அதவிடவும் எங்க வீட்ல இத ஒத்துக்க மாட்டாங்க.

பேசி புரியவைக்க முடியாதா.

முடியாது. இந்தப் பேச்ச இதோட விடுங்க.

சரிதா மிகவும் உறுதியாகச் சொன்னாள். தான் உயரமாக வளர்ந்ததுக்காக பழனி அன்று நிறையவே வருத்தப்பட்டான். மேற்கொண்டு அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், பழனி அமைதியாக இருந்தான். அன்று மிகவும் சீக்கிரமாக பேக்கரியிலிருந்து வெளியேறினர். இருவரும் சிலநாட்கள் பேசாமலிருந்தார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. ஏதாவது தேவையின் பொருட்டு இருவரும் பேசவேண்டிய சூழல். கொஞ்சம் நாட்களில் அப்படி ஒரு விசயம் பேசினோம் என்பதை மறந்து, இருவரும் சாதாரணமாக பழகக் கற்றுக்கொண்டனர். சீக்கிரம் வேலைமுடியும் நாட்களில், மறுபடியும் நண்பர்களாக பேக்கரிக்கு சென்று காபி சாப்பிட்டனர்.

சரிதாவுக்கு கல்யாணம் நிச்சயமானதும், வேலையைவிட்டு நின்றாள். கடைசி நாள் பழனியை பேக்கரிக்கு காபி சாப்பிட அழைத்தாள். இனிமே நீங்க எனக்கு ஃபோன் பண்ண வேண்டாம். ஏன் மெஸேஜ் கூட அனுப்ப வேண்டாம். தேவைன்னா நானே கூப்பிடுறேன் என்று சரிதா சொன்னபோது, பழனி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எந்த விதமான மனதடங்களும் இல்லாமல், அவள் பேசிக்கொண்டிருந்தாள். காபி குடித்ததும் உடனே அவள் பிரிந்து சென்றுவிட்டாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் பழனி அந்த பேக்கரி வாசலில் சரிதாவின் வரவை எதிர்பார்த்து காத்து நின்றான். பேக்கரிக்கு பக்கத்திலிருந்த கல்யாண மண்டப வாசலில் திருமணத்திற்கு வந்த மக்கள் கூட்டம். அலங்கரித்துக்கொண்ட ஆண்களும், பெண்களும் அவசர அவசரமாக உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.

முதன்முதலாக புடவைக்கட்டிய சின்ன பெண்கள் இருவர், முகத்தில் பெருமிதத்தோடு தங்களை அழகை தாங்களே வியந்துப் பேசியப்படி சென்றனர். அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியின் கோடுகளை பழனி ரசித்தான்.

அங்க என்ன வேடிக்கை… சரிதாவின் குரல்கேட்டு பழனி திரும்பிப் பார்த்தான். சரிதா அவனருகே நின்றுக்கொண்டிருந்தாள். ஆறு மாதத்தில் கொஞ்சம் மாறித்தான் போயிருக்கிறாள். முகத்தில் கருமை நிறம் மறைந்து, கொஞ்சம் பளப்பளப்புக் கூடியிருந்தது. இருவரும் பேக்கரியின் உள்ளே சென்றனர். வழக்கம் போல காபிக்கு அவளே சொன்னாள்.

வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்ததும், அங்குக் கனத்த அமைதி நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி இருந்தனர். காபி கப்பை கீழை வைத்தப்படியே, அவள் அவனைப்பார்த்து… நீ கொஞ்சம் பொறுமையாவே கல்யாணம் பண்ணிக்கோ, அவசரப்படாத என்றாள்.

ஏன் இப்படி சொல்கிறாள். அவளது கணவன் ஒரு கம்பெனியில் கேஷியராக நல்ல சம்பளத்தில்தானே இருக்கிறான். என்ன பிரச்சனையாக இருக்கும்.

ஏன் அப்படி சொல்ற, கேஷியர் சார் எப்படி இருக்கார்.

அவருக்கென்ன நல்லாயிருக்காரு என்று சலிப்பாக சொன்னாள்.

ஏன் ஒருமாதிரி இழுக்கிற, குடும்பத்துல எதும் பிரச்சனையா.

சரிதா அமைதியாக காபி குடித்தாள். பக்கத்து சீட்டில் இருந்த குழந்தையை வேடிக்கைப் பார்த்தாள். பழனியும் வேடிக்கைப் பார்த்தான். அவளாக பேசட்டும் எனக் காத்திருந்தான். சற்று நேரம் கழித்து பேசத் தொடங்கினாள்.

அங்க தம்பி, தங்கச்சிலாம் அவங்க சம்பாதிக்கிறத தனியா வச்சிக்குறாங்க, இவருதான் வீட்ல எல்லா செலவையும் பாக்கிறார். இதுல கல்யாண கடன்னு வேற தனியா பிரிச்சு விட்டு இருக்காங்க. அது அப்படியே இருக்கு.

வீட்டுக்கு மூத்தவர் அப்படித்தான் இருக்க முடியும், கொஞ்ச நாள் போனா புரிஞ்சுக்குவார்… கவலப்படாத…

ஆமா.. எங்க அம்மாவும் இப்படித்தான் சொல்லுது. இவருதான் வேல வேலன்னு லீவ்-கூட போடாம வேலைக்குப் போறார். அவங்க எல்லாம் அப்படி இல்ல… அப்பப்போ லீவு போட்டுட்டு ஜாலியா ஊர் சுத்துறாங்க. நான் வேலைக்குப் போறேன்னு சொன்னாலும் வேணாங்கிறார், இவரு என்ன எங்கேயும் கூட்டிக்கிட்டே போனதுல்ல.

இன்னைக்கு என் ஃபிரண்டு ஒருத்திக்கு கல்யாணம் வாங்கன்னா, லீவ் போடமுடியாது, கம்பெனில அர்ஜெண்ட் வேல இருக்குன்னு போயிட்டார். அந்த வீட்ல யாருமே என்கூட சரியா பேச மாட்டேங்கறாங்க, எப்பவும் தனியாவே இருக்கேன். இவருக்கு சொன்னாலும் புரியமாட்டேங்குது. ஏன்டா கல்யாணம் ஆச்சுன்னு இருக்கு.

அவள் பேசி முடிக்கும்வரை பழனி அமைதியாக அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கோபத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்த அந்தக் குண்டு விழிகளில், மெல்லிய சோகம் மினுமினுத்தது. அவள் கைக்குட்டையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டாள்.

பழனி மெல்லியக்குரலில்… மத்தவங்களோட நம்மள கம்பேர் பண்ணினா, நாம நிம்மதியா இருக்க முடியுமா. நமக்குக் கெடச்சத வைச்சிக்கிட்டு எப்படி சந்தோசமா இருக்குறதுன்னு பாரு என்றான்.

சரிதாவின் முகம் சோர்ந்துவிட்டது. அவளை எப்படி சாமாதானப்படுத்துவது.

சரி நான் கிளம்புறேன் என்றாள்.

நான் எதும் தப்பா சொல்லிட்டேனா.

அப்படில்லாம் இல்ல.

அப்பறம் என்ன திடீர்ன்னு கிளம்பறேன்னு சொல்ற. ஏதோ பேசனும்னு சொன்னியே.

இந்தப்பக்கம் ஒரு கல்யாணத்துக்காக வந்தேன். உன்னப் பாக்கனும்ன்னு தோணுச்சு. பாத்துட்டேன்.. கெளம்புறேன்.

அவ்வளவுதானா.

ஆமா. அப்பறம் என்ன.. நீ எதும் கற்பனைய வளத்துக்காத… வரட்டுமா என்று புன்னகைத்தாள்.

இப்போது அவள் பழைய சரிதாவாக இருந்தாள். பிடிவாதமாக காபிக்கு அவளே காசுக்கொடுத்தாள். இருவரும் பேக்கரிக்கு வெளியே வந்தனர்.

இருவரும் அமைதியாக பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவளுக்கான பேருந்து வந்ததும், அவள் புன்னகையோடு கை அசைத்துவிட்டு பேருந்தில் ஏறிக்கொண்டாள். அவளின் நினைவுகளால் அவனின் மனம் கணமாகிப்போனது. இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாமோ என்று யோசித்தப்படியே, அவன் சாலையோரமாக மெதுவாக நடக்கத் தொடங்கினான்.                                                                                                                                                                                                                                    நன்றி : SeithiAlai. மயக்கம்

திரை . 23 (The Reader)

 The Reader - 2008.

இந்த படத்தை பார்க்க வேண்டும் நினைத்து படத்தை சேமித்து வைத்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் பார்க்கவேயில்லை. அவ்வப்போது அதில் இருக்கும் பாலியல் காட்சிகளுக்காக பார்த்ததுண்டு. அதற்காக இப்போது வெட்கப்படுகிறேன்.
அண்மையில் நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராமலிங்கம் அவர்களின் தூண்டுதலின் பேரில் இன்று இப்படத்தை பார்த்து முடித்தேன்.
படத்தில் பேசபட்டிருக்கும் அரசியல் சார்ந்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகள் சார்ந்து அப்படி சொல்ல முடியாது.
"மனிதன் மகத்தானவன்" என்றார் மாக்சிம் கார்கி. "மனிதன் மகத்தான சல்லிப்பயல்" என்றார் ஜி.நாகராஜன். இந்த இரண்டு குணாதிசய மனிதர்களும் இத்திரைப்படத்தில் இருக்கிறார்கள்.
முன்னூறு கொலைகளை செய்த பெண்மணியின் தற்கொலைக்காக நம்மை வருத்தப்பட வைக்கிறது இப்படம். இதுதான் இப்படத்தின் அரசியல் சார்ந்து பலரை விலகி நிற்க வைக்கும் புள்ளி. ஆனால் மனித உணர்வுகள் சார்ந்து நம்மை வருத்தப்படவும் வைக்கிறது.
இப்போது நினைத்து பார்க்கும்போது படத்தின் பாலியல் காட்சிகளை எளிதாக கடந்து மனித மனதின் பல்வேறு மனநிலைகளே நம் மனதில் நிலைத்து நிற்கிறது. 29.07.2024
No photo description available.
All re

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...