திரையில் மலர்ந்த சிறுகதைகள்.
இலக்கிய படைப்புகளை திரைப்படமாக எடுப்பது உலகு முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழிலும் நிறைய படைப்புகள் உருவாகியுள்ளது. அப்படி மலையாள சினிமாவில் வெளியான நான்கு திரைப்படங்கள் உருவாக காரணமாக இருந்த ஐந்து சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகமாகும்.
இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய யாத்ரா(1985) திரைப்படத்தின் மூலகதை அமெரிக்க எழுத்தாளர் பீட் ஹாமின் “வீடு திரும்புதல்” என்ற சிறுகதையாகும். இந்த சிறுகதை ஜப்பானில் “மஞ்சள் நிற கைகுட்டை”-யாகவும் மலையாளத்தில் “யாத்ரா”வாகவும் உருமாறி வந்துள்ளது.
இயக்குனர் ஜி.அரவிந்தன் இயக்கிய “சிதம்பரம்”(1985) திரைப்படம், மலையாள எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமனின் “சிதம்பரம்” சிறுகதையை அடைப்படையாக கொண்டது.
இயக்குனர் சி.வி.சந்திரனின் “பொந்தன் மாடா”(1994) திரைப்படம் எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமனின் “பொந்த மாடா” மற்றும் “சீமைத்தம்புரான்” சிறுகதைகளை அடைப்படையாக கொண்டது.
இயக்குனர் பரதனின் “தகர”(1979) திரைப்படம் எழுத்தாளர் பி.பத்தமராஜின் “தகர” சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இதே கதையை அதே இயக்குனர் தமிழில் “ஆவராம் பூ” என எடுத்துள்ளார்.
நான் இந்த நான்கு படங்களையும் பார்த்ததில்லை. இந்த புத்தகத்தை படித்த பிறகு இந்த நான்கு படங்களையும் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்த்துள்ளேன்.
மலையாளத்தில் சிறுகதை என்ன தலைப்பில் எழுதப்பட்டதோ அதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. ஆனால் சிறுகதையில் உள்ளதை மட்டும் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் எதை கூட்டினார்கள், எதை குறைத்தார்கள், எதை மறைத்தார்கள், எதை வெளிப்படையாக வைத்தார்கள் என்பதை படம் பார்த்துதான் தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி தெரிந்து கொள்வதும் அதை காரண காரியங்களோடு புரிந்து கொள்வதும் திரைக்கதையை கற்றுக்கொள்ள நல்ல பயிற்சியாக இருக்குமென கருதுகிறேன். இந்த புத்தகத்தின் நோக்கமும் அதுவாகதான் இருக்க முடியும் என நம்புகிறேன்.
இந்த புத்தகத்தில் எடுத்துக்கொண்ட திரைப்படம் குறித்தும் அதன் இயக்குனர் மற்றும் சிறுகதை ஆசிரியர் குறித்தும் தனித்தனியே குறிப்புகள் இருக்கிறது. இது அவர்களின் மற்ற படைப்புகளை தேடி செல்ல உதவியாக இருக்கிறது.
இந்த தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போல் இருக்கிறது. அந்த அளவுக்கு சிறப்பான முறையில் அவைநாயகம் மொழிப்பெயர்ந்துள்ளார்.
சிறப்பான அடைப்படத்துடன் இந்த புத்தகத்தை மதிமலர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
18.04.2026




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக