8.31.2025

துளி. 410

நீங்கள் உங்களை

புத்திசாலியாக

திறமைசாலியாக

எப்படி வேண்டுமானாலும்

நினைத்துக்கொள்ளலாம்

தவறில்லை

ஆனால்

எதிரே இருப்பவனை

முட்டாளாக நினைப்பது

புத்திசாலித்தனமில்லை.

31.08.2025

துளி. 409

ஒருபோதும் யாசித்து

பெறக்கூடாத ஒன்று

அன்பு.

28.08.2025

பதிவு. 93

 வாழ்வை நிறுத்துதல் – அதிஷா

எனக்கு தியானம் கற்றுக்கொள்ள விருப்பம். அதனால் சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு நடைப்பெறும் தியான வகுப்பில் ஒருமுறை கலந்துக்கொண்டு இருக்கிறேன். பிறகு மனவளக்கலை மன்றத்தில் நடைபெறும் வகுப்புக்கு சிலமுறை சென்று இருக்கிறேன். ஒருமுறை நித்தியானந்தாவின் கிளை ஒன்றிலும் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எதையும் முழுமையாக பின்பற்றி தியானம் மட்டும் செய்ததே இல்லை. ஆனாலும் தியானம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் புத்தகம் படிப்பதும் உரைகள் கேட்பதும் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் அதிஷா விபாசனா தியான முகாமுக்கு சென்று வந்த அனுபவத்தை முகனூலில் எழுத தொடங்கினார். அப்பொழுது சில பகுதிகள் படித்தேன். பிறகு தொடர முடியாமல் விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அந்த பகுதிகளை படிக்க வேண்டும் என விரும்பினேன். எழுத்தாளர் அதிஷாவை முகனூல் தொடர்பு கொண்டு அந்த இணைப்புகள் கிடைக்குமா என கேட்டேன். அவரும் உடனே அனுப்பி வைத்தார். அதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து முடித்தேன்.
விபாசன தியானம் எப்போது யாரால் கண்டுபிடிக்க பிடிக்கப்பட்டது, அது எப்படியெல்லாம் உருமாறி வளர்ந்து வந்துள்ளது, இந்தியாவில் இந்த முகாம் எங்கெல்லாம் இருக்கிறது, தியான முகாமில் தியானம் எவ்வாறு சொல்லி தரப்படுகிறது, அதன் தினசரி நடவடிக்கைகள் என்ன என்ன, அதை பின்பற்றும்போது உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்ன என்பதை மிகவும் சுவராசியாமாகவும் நகைச்சுவை உணர்வோடும் அதிஷா எழுதியுள்ளார்.
பதினெட்டு பகுதிகளாக எழுதப்பட்டு இருக்கும் இந்த தியான அனுபவ பதிவை படிப்பதே ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இது புத்தகமாக வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
இந்த பதிவுகள் ஒருவகையில் நம் அனுபவங்களை எப்படி எழுத்தாக மாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அதிஷாவின் எழுத்தில் எளிமையும் நகைச்சுவையும் தத்துவார்த்த சிந்தனைகளும் மிளிர்ந்தபடியே இருக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.

18.08.2025

துளி. 408

அதிர்ஷ்டத்தையும்

அற்புதத்தையும்

நம்பாதவன் அவன்

ஆனால் அவனையும்

இதையெல்லாம் எதிர்பார்க்க

வைத்துவிட்டது காலம்.

10.08.2025

7.31.2025

திரை.24 / Santosh



 

Santosh / Sandhya Suri / 2024 / Hindi
இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி. இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் இதற்கு முன்பு ஒரு குறும்படமும் இரண்டு ஆவணப்படமும் எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படம் அவரின் முதல் முழுநீள திரைப்படமாகும். உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ள திரைப்படத்தை இந்த அரசு தடை செய்துள்ளது. ஏன் தடை அதற்கான காரணம் என்ன..?
“சந்தோஷ்” திரைப்படத்தின் கதை சமகாலத்தில் நடக்கிறது. கதை நிகழும் களம் இந்திய ஒன்றியத்தியின் வடபகுதி. முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த கலவரத்தில் ஒரு காவலர் கல்லடிபட்டு இறந்து போகிறார். அந்த காவலர் இந்து மதத்தை சார்ந்தவர். அவரின் மனைவி சைனி சந்தோஷ் கருணை அடிப்படையில் காவலராக பணியில் சேருகிறார்.
காவலர் சைனிக்கு காவல்துறையின் கோர முகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகமாகிறது. காவலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒருபக்க சார்பாக நடந்து கொள்வது, உயர் அதிகாரி காவலர்களை சொந்து வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது, தலித் மக்கள் புகார் கொடுக்க வந்தால் அவர்களை ஏலனமாக நடத்துவது, ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவது என அவர் பார்க்கும் காட்சிகள் அவரை நிலையகுலைய வைக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளிவருகிறார்..? அல்லது அதை அவர் எப்படி உள்வாங்கி கொள்கிறார் என்பதே இப்படத்தின் முடிவாகும்.
இந்திய ஒன்றியத்தின் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது. அது தலித்துகளையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்துகிறது என்பதை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
இந்திய ஒன்றியத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் நிகழ்த்தப்படும் கொடுமைகளின் ஒரு துளியையே இப்படம் காட்சிப்படுத்தி இருக்கிறது.
பலவகையான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட இந்த அரசுக்கு உண்மையை எதிர்கொள்வது சாத்தியமில்லைதான். அதனால்தான் இப்படத்துக்கு தடை விதிக்கிறது.

29.07.2025


7.26.2025

பதிவு.92



இரண்டு நாவல்கள்

சில படைப்பாளிகளின் பெயரை கேள்விபட்ட உடனே அவர்களுடைய படைப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் சிலநேரங்களில் அப்படி நடக்காது. மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவின் படைப்புகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி பட்டிருந்தாலும் அவருடைய எந்த படைப்பையும் சென்ற வாரம் வரை படித்ததில்லை.
அண்மையில் இயக்குனர் ராம் “பரந்து போ” பட சம்மந்தமாக திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொடுத்த நேர்காணலில் கே.ஆர்.மீராவின் படைப்புகள் குறித்தும், குறிப்பாக யூதாஸின் நற்செய்தி நாவல் குறித்தும் பேசியிருந்தார். அந்த உரையை கேட்டபின் மீராவின் படைப்புகளை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகியது.
நண்பர் பால்ராஜிடம் கே.ஆர்.மீராவின் ‘’அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’’ என்ற நாவல் இருந்தது. அதை வாங்கி உடனே படிக்க ஆரம்பித்தேன்.
திருமணமாகி குழந்தை இல்லாமல் வாழும் பெண்ணை தேடி அவளது முன்னால் காதலன் வருகிறான். இப்படி ஆரம்பித்த கதை அந்த பெண் யார், அவளுக்கு சிறுவயதில் நடந்த துர் சம்பவம் அதனால் அவள் உடலும் மனமும் படும் இன்னல்கள், அவள் காதல் வயப்பட்ட தருணம், அந்த காதலில் இருந்து விலகி வந்த தருணம், இன்று அவளை தேடி வந்திருக்கும் முன்னால் காதலனின் வாழ்க்கை முறை, அவனது குடும்பமும் சமூகமும் அவனை பார்க்கும் விதம் என விளக்கியபடியே செல்கிறது. முடிவில் அந்த முன்னால் காதலர்களின் வாழ்வு என்னவானது என்பதே கதையின் முடிவாகும்.
எளிய மனிதர்களின் காதல் கதையாக இருக்கும் நாவலில் குடும்ப அமைப்புக்குள் இருக்கும் வன்முறையை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறார். இதுவரையிலான கதை சரடு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அடுத்து காதலர்களின் முடிவு என்ன என்பதில் எனக்கு குழப்பம் இருக்கிறது. அதற்காகவே அந்த நாவலை மறுபடியும் ஒருமுறை படிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.
இந்த நாவலை சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பாக மொழிப்பெயர்த்துள்ளார்.
அடுத்ததாக யூதாஸின் நற்செய்தி நாவலை படிக்க தொடங்கினேன். அந்த நாவல் என்னை பெரிதும் கவர்ந்துள்ளது. இயக்குனர் ராம் இந்த நாவலை தனக்கு பிடித்த நாவல் என்று சொன்னதன் காரணமும் புரிகிறது. இந்த நாவலும் ஒரு காதல் கதையாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் தீவிரமான அரசியல் கதையாகவும் இருக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் 1975 ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசரநிலை காலத்தில் அரசியல் போராளிகளை காவல்துறை எப்படி வேட்டையாடி கொன்று குவித்தது என்பதற்கு ஆதாரமாக காவல்துறையின் சித்தரவதை முகாம் ஒன்றை மையமாக கொண்டு இக்கதையின் நாயகனும் நாயகியும் உருவாக்கப்படுள்ளார்கள்.
நாயகியின் அப்பா காவல்துறை அதிகாரி, நாயகியின் காதலன் அந்த சித்தரவதை முகாமில் வதைப்பட்டவன் இவர்கள் இருவருக்கும் எப்படி காதல் உருவாகியது. அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பது கதையின் முடிவாகும்.
இந்த நாவலில் பிரேமா என்ற பெண்ணின் காதல் கதை அவளுடைய பதினைந்தாவது வயதில் தொடங்கி முப்பதந்தாவது வயதுவரை சொல்லப்படுகிறது. இதில் முன்னும் பின்னுமாக அவசரநிலை காலத்தில் காவல்துறையினர் அரசியல் போராளிகள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகள், அந்த கொடுமைய நிகழ்த்திய காவலர்கள் அதற்கு சொன்ன காரணங்கள், அரசியல் போராளிகளின் குடும்ப துயரங்கள் என அனைத்தையும் சுமார் 112 பக்கங்களில் ஆசிரியர் சிறப்பாக சொல்லிவிடுகிறார்.

பிரேமாவின் காதல் கதையை சொல்லும் அதே வேளையில் முன்னும் பின்னுமாக சென்று யூதாஸின் அரசியல் கதையையும் அதனால் அவன் அனுபவித்த வன்கொடுமைகளையும் சொல்கிறார். வன்கொடுமை நிகழ்த்திய காவலர்களின் வாழ்க்கை கதையும், அவர்கள் பக்க ஞாயமும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் உணர்வுபூர்வமான காதல் கதையாகவும் மற்றொருவகையில் வலிமிகுந்த அரசியல் போராளியின் கதையாகவும் இன்னொருவகையில் குடும்ப அமைப்பின் வன்முறையை சொல்லும் கதையாகவும் இந்தநாவல் விரிகிறது.
ஒடுக்குமுறை இருக்கும்வரை போராட்டமும் போராட்டம் இருக்கும்வரை போராளியும் இருப்பான் என்பதை சொல்லும் இதே நாவல் தப்பு செய்தவன் தண்டணை பெறுவான் என்ற விதிவாதத்தையும் வலியுறுத்துகிறது. வாழ்க்கை என்பது அப்படி இருப்பது இல்லை. விதிவிலக்குகள் உண்டு.
போராட்டம் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் என்னால் தண்டனை கிடைக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. எனினும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு பல்வேறு பார்வை கோணத்தில் இந்த கதையை சொல்லியுள்ள விதம் எனக்கு பிடித்திருக்கிறது.
இந்த நாவலை மோ.செந்தில்குமார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இந்த இரண்டு நாவல்களையும் எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.

21.07.2025.




துளி.407

எல்லாம் தெரியும்

என்ற புள்ளியில்தான்

ஆரம்பிக்கிறது

அறியாமை.

20.07.2025.

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...