6.30.2025

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்துபோனது. அந்த சிறுகதையை சில நண்பர்களுக்கு கூட பரிந்துரை செய்தேன். அவர்களுக்கும் அந்த கதையை படித்துவிட்டு பிடித்து இருக்கிறது என்றார்கள்.
அதன்பின் அந்த ஆசிரியரின் மற்ற கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆவலில் இணையத்தில் தேடும்போது “நெட்டுயிர்ப்பு” என்ற சிறுகதை தொகுப்பை கனலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது தெரியவந்தது. அந்த புத்தகத்தை தேடிப்போனால் அது விற்பனையில் இல்லை. சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கலாம் என தேடிப்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
எதிர்பாராத விதமாக கலப்பை பதிப்பகத்திற்கு ஒரு புத்தகம் வாங்க சென்றபோது இந்த புத்தகம் பற்றி விசாரித்தேன். உடனே தோழர் ராமசாமி தேடிக்கண்டு பிடித்து கொடுத்தார். நீண்ட நாட்களாக தேடிய புத்தகம் கிடைத்த மகிழ்ச்சியில் உடனே படிக்க தொடங்கினேன். ஆனால் உடனே படித்து முடிக்காமல் ஒவ்வொரு கதை படித்தபின்புமும் அது பற்றி மனதில் மறுபடியும் ஓட்டிப் பார்த்து, பார்த்து பத்து கதைகளையும் சுமார் இருபது நாட்களில் படித்து முடித்தேன்.
அம்ருதா பதிப்பகம் பிரபலமான சிறுகதை ஆசிரியர்களின் பத்து சிறுகதைகளை தேர்ந்தெடுத்து “முத்துக்கள் பத்து” என்ற வரிசையில் பல புத்தகங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதுப்போல் ஹேமி கிருஷின் “நெட்டுயிர்ப்பு” சிறுகதை தொகுப்பை முத்துக்கள் பத்து என்றே அழைக்கலாம். இதிலுள்ள பத்து சிறுகதைகளும் சிறப்பாக உள்ளது. தமிழின் முக்கியமான சிறுகதை தொகுப்புகளில் இதுவும் என்று துணிந்து சொல்லலாம்.
நாடகம், சினிமா என அலைந்து வாழ்வை தொலைத்தவன், ஒரு மளிகை கடைக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்ட தெருவோர நாடோடி பெண், கடவுள் நம்பிக்கை இல்லாதுபோனதால் திருமண வாழ்வை இழந்த பெண், அக்காவின் திருமண வாழ்க்கைக்காக தன் வாழ்வை தொலைத்த பெண், சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் கொடுமையால் வாழ்வை தொலைத்த மகன் என இப்படியான சில மனிதர்களின் வாழ்வு சொல்லப்படுகிறது.
மேலும், தவறான நபரை காதலித்ததால் வாழ்வை தொலைத்த பெண், தன் வாழ்வு போல் மகளின் வாழ்வு இருந்துவிட கூடாது என்பதற்காக கணவனை விட்டு விலகும் தாய், தன் குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பாராது அலைந்து பணம் தேடும் குடும்ப தலைவன், குழைந்தைகளோடு குழந்தையாய் வளந்த சிறு பூனையின் வாழ்வு, நேர்த்தி கடனை அடைக்க அல்லல்படும் ஒரு அபலை பெண்ணின் வாழ்வு என பலவிதமான மனித உணர்வுகளை ஹேமி கிருஷ் மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி மனிதனை இயக்குகிறது. அதைப்போலவே இந்த கதைகளில் சிலரின் தோல்வியையும் சிலரின் வெற்றியையும் நாம் காண முடிகிறது. ஆசிரியர் எந்த உணர்வை எழுதினாலும் மிக சுருக்கமாகவும் அதேசமயம் சொல்ல வந்ததை மிக தெளிவாகவும் சொல்லிவிடுகிறார். ஹேமி கிருஷின் எழுத்து மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை கனலி பதிப்பகம் (முதல் பதிப்பு 2022) சிறப்பான அட்டை படத்துடன் வெளியிட்டுள்ளது.

- 24.06.2025.



 

5.31.2025

பதிவு - 89

 படத்தொகுப்பு: கலையும் அழகியலும் – ஜீவா பொன்னுசாமி

திரைப்படம் எவ்வாறு உருவாகிறது அல்லது ஒரு திரைப்படத்தை உருவாக்க என்னவெல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று கேள்வியை எழுப்பினால் பலவகையான பதில்கள் கிடைக்கும். முறையாக திரைப்பட பள்ளியில் படிப்பது, திரைப்படங்களை பாடமாக பார்ப்பது, திரை ஆளுமைகளின் அனுபவங்களை கேட்பது அல்லது படிப்பது அல்லது அவர்களின் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.
திரைப்பட உருவாக்கம் சார்ந்த புத்தகங்களை படிப்பதன் வாயிலாகவும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான புத்தகங்கள் தமிழில் நேரடியாகவும் மறைமுகமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து இருக்கிறது. குறிப்பாக துறை சார்ந்து திரைக்கதை. இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என வகைமைகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் படத்தொகுப்பு குறித்து வெளியாகியுள்ள ஜீவா பொன்னுசாமியின் “படத்தொகுப்பு: கலையும் அழகியலும்” என்ற இந்த புத்தகம் மிகவும் முக்கியமானதாகும்.
ஜீவா பொன்னுசாமி இந்த புத்தகத்தில் படத்தொகுப்பின் வரலாற்றில் ஆரம்பித்து படத்தொகுப்புன் நவீன உத்திகள் வரையிலும் பயணிக்கிறார். அதேசமயம் திரைத்துறையின் அடைப்படைகளை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் இருபது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதன் உள்ளே இன்னும் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மிகவும் சுவராசியாமான ஒரு கதைச்சொல்லிபோல் படத்தொகுப்பை அறிமுகம் செய்து, அதன் தொழிற்நுட்ப அம்சங்களை விளக்கி, படத்தொகுப்பின் விதிகள், காட்சிகளின் படத்தொகுப்பு, காட்சி கோர்வைகளின் படத்தொகுப்பு, அதன் ஐந்து கூறுகள், காட்சி துணுக்குகளின் தொடர்ச்சி என மிக லாவகமாக விளக்கி சொல்லிக்கொண்டு செல்கிறார்.
அத்துடன் பாடல் காட்சிகளில் சண்டை காட்சிகளில் படத்தொகுப்பு எப்படி செய்ய வேண்டும், காட்சியை படத்தொகுப்பு ஒலியை எப்படி ஒலிப்படத்தொகுப்பு செய்ய வேண்டும், எந்த வகையான படத்துக்கு என்ன வகையான காட்சி துணுக்குகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் விளக்குகிறார்.
இந்த புத்தகத்தில் மூன்று படங்களின் முதல் ஐந்து நிமிடங்களின் காட்சிகள் எப்படி படத்தொகுப்பு செய்யப்பட்டு இருக்கிறது, அது ஏன் அப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை விளக்கியுள்ள விதம் அருமையாக இருக்கிறது.
திரைப்பட கல்வி கற்கும் மாணவர்களுக்கு இது பாடப்புத்தகமாக வைக்கதகுந்த புத்தகமாகும்.
இந்த புத்தகத்தினை நிழல் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 2018-ல் வெளியாகியுள்ளது.
இந்த புத்தகத்தை எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் என் மனமர்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்…

31.05.2025






பதிவு - 88

 இந்திய சினிமா சில தரிசனங்கள் – செந்தூரம் ஜெகதீஷ்.

இந்த புத்தகத்திற்கு இந்திய சினிமா என்று பெயர் இருந்தாலும் இதில் பழைய இந்தி சினிமாக்கள் குறித்தே அதிகம் எழுதுப்பட்டுள்ளது.
பழம்பெரும் இந்தி இயக்குனர்கள் & நடிகர்கள்- ராஜ்கபூர், தேவ் ஆனந்த், குருதத், மனோஜ் குமார், சசி கபூர்… மேலும்
நடிகைகள் - வகிதா ரஹ்மான், நர்கீஸ், டிம்பிள் கபாடியா… மேலும்
இசையமைப்பாளர்கள் - எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், சலீல் செளத்ரி, ராம் லட்சுமண்.. மேலும்
பாடலாசிரியர்கள் - குல்சார், ஜாவேட் அக்தர், கைஃபி ஆஸ்மி.. மேலும்
பாடகர்கள் - முகமது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர்.. மேலும்
மேற்கண்ட பட்டியலில் இருப்போரும் அவர்களது சமகாலத்தவர்கள் குறித்தும் மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆளுமைகளின் சினிமா வாழ்க்கை மட்டும் இல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளது.
இந்தி பாடல்கள் குறித்தும் ஒரு பகுதி எழுதியுள்ளார். பாடல் வரிகளில் மிளிரும் கருத்துகள் குறித்து மிகவும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். பாடகர்களின் குரல் நயம் குறித்தும் விதந்து எழுதியுள்ளார்.
அண்மைகால இந்தி படங்களான பத்லாபூர், உட்தா பஞ்சாப் குறித்தும் தன் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
செந்தூரம் ஜெகதீஷ் தன் இளமை காலம் தொட்டே இந்தி சினிமா பார்ப்பதும், இந்தி பாடல்களை கேக்கவும் செய்திருப்பதினால் இந்தி சினிமா உலகம் குறித்த நிறைய தகவல்களை இந்த புத்தகத்தில் தூவி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.
இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில பாடல்களை கேட்டேன். புது அனுபவமாக இருந்தது. இதில் குறிப்பிட்டுள்ள இந்தி படங்களையும் பார்க்க திட்டமிட்டுள்ளேன். பழைய இந்தி சினிமாவை அறிந்துகொள்ள இந்த புத்தகம் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம். இந்த புத்தக வரிசை தொடரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
இந்த புத்தகத்தை செந்தூரம் பதிப்பம் (முதல் பதிப்பு 2019) வெளியிட்டுள்ளது.
- 20.05.2025

All reactio

4.29.2025

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு,

பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு,

அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு,

துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு

சிலருக்கு நேர்முகமாகவும்

சிலருக்கு எதிர்முகமாகவும்

தொடர்கிறது இந்த பயணம்.

11.04.2025.

துளி - 403

கண்ணாமூச்சு

உனது அலைபேசியில்
எனது பெயரும்
எனது அலைபேசியில்
உனது பெயரும்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது
நீண்ட காலத்தித்கு முன்பே
யார் முதலில் அழைப்பது
தயக்கம் இருக்கிறது
இருவரிடமும்
ஆனால்
எதிர்பாரா சந்திப்புகளில்
உரிமையோடு கேட்டுகொள்கிறோம்
நீ ஏன் அழைக்கவில்லை.
காலத்தை நடுவில் வைத்து
கண்ணாமூச்சு விளையாடுகிறோம்.

-10.04.2025.

3.31.2025

துளி. 402

எல்லாவற்றையும்

சரியாக செய்ய நினைத்து

பிழைகளுடனே செய்து முடிக்கிறேன்.

23.03.2025

துளி. 401

நீயும் நானும்

வேறுவேறு திசைகளிலிருந்து

முழு நிலவை காண்கிறோம்

முடிவில்லா கனவுகளோடு. 

13.02.2025

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...