3.30.2026

துளி. 419

நீலம் சிவப்பாகிறது

சிவப்பு மஞ்சளாகிறது

மஞ்சள் ஆரஞ்சாகிறது

ஆரஞ்சும் இல்லாமல் போகிறது

அந்திவானத்தை

வண்ணமயமாக்கி விட்டு

மாயமாகிறான் ஆதவன்.

மாறிக்கொண்டே இருக்கும்

அந்திவான வண்ணங்களாய்

மனித மனம்.

- 12.03.2026.

பதிவு. 95

 முதல் காதல் - இவான் துர்கனேவ்

எல்லா மனிதர்களுக்கும் முதல் முதலில் புதிதாக ஒன்றை அனுபவிக்கும்போது தோன்றும் இன்பம் பேரின்பமாகத்தான் இருக்கும். அப்படித்தான் பதின்ம பருவத்தில் தோன்றும் காதலுக்கும் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.
உலகின் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் தொடர்ந்து எழுத்தப்பட்டு வரும் கருப்பொருள் காதல். அதுவும் ஒரு ஆணோக்கோ அல்லது பெண்ணுக்கோ முதன் முதலில் தோன்றும் காதல் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது.
இவான் துர்கனேஷ் எழுதிய “முதல் காதல்” என்ற குறுநாவல் ஒரு ஆணுக்கு ஏற்பட்ட முதல் காதல் அனுபவத்தையே சொல்கிறது. பதினாறு வயதில் தன்னைவிட சில வயது மூத்த பெண் மீது அவனுக்கு ஏற்பட்ட காதலையும் அதனால் அவன் மனதுக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்து செல்கிறது இந்த நாவல். அதே சமயம் அந்த இளம்பெண்ணின் மனவோட்டங்களையும் நமக்குள் கடத்துகிறது.
அந்த காலத்தில் ரஷ்ய வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது. ஆண் பெண் உறவுகள் எப்படி இருந்தது. பணம் படைத்தவர்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், பணம் இல்லாதவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, குறிப்பாக இளம் தலைமுறைக்கு தன் முந்தைய தலைமுறையின் இலக்கியம் குறித்து இருந்த கருத்துகள் என்ன என்பதையெல்லாம் இந்த குறுநாவல் தொட்டு செல்கிறது.
இவான் துர்கனேஷ் எழுதிய “முதல் காதல்” என்ற இந்த குறுநாவல் ரஷ்ய மொழியில் சுமார் 165 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. 2025 ஆண்டு தமிழில் பூ.சோமசுந்திரம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு முயற்கூடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

06.03.2026.


பதிவு. 94



வாடாமல்லி – கண்மணி குணசேகரன்.

இன்று நான் படித்து முடித்த புத்தகம் கண்மணி குணசேகரனின் “வாடாமல்லி” சிறுகதை தொகுப்பாகும். இதில் மொத்தம் ஆறு சிறுகதைகள் இருக்கிறது. இந்த கதைகள் அனைத்தும் நடுநாடு (கடலூர் மாவட்டம்)-ல் விருத்தாசலம் நகருக்கு பக்கத்தில் உள்ள மணகொல்லை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் விவசய குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை சொல்கிறது.
ஒரு நாடக குழுவில் உதவியாளனாக இருப்பவனின் இல்லற சிக்கல்(அம்போகம்), புது தொழில் செய்ய தொடங்கி அதில் பெரும் நட்டம் அடைந்து அதில் இருந்து மீண்டு உதறி தொழிலாளியானவனின் வாழ்க்கை கதை(இரும்பு ராசி), தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு மற்றொருவன் மீது இருந்த காதலை அறியும் ஆண்களின் மனநிலைகள்(பச்சைக்கிளி & வாடாமல்லி), காதலித்து கைபிடித்த கணவன் துரோகம் இழைத்ததை அறிந்த மனைவியின் மனநிலை(வெட்டுக்காடு), பஞ்சாயித்து தேர்தலில் எல்லோரும் பணம் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன் தான் நியாமானவன் அதனால் மக்கள் தனக்கு ஓட்டு போடுவார்கள் என நம்பி ஏமாந்த நபரின்(வாளி) கதை என பலரின் வாழ்க்கை பாடுகள் இந்த கதைகளில் இருக்கிறது.
இந்த ஆறு கதைகளில் நாலு கதைகள் கணவன் மனைவி உறவு சார்ந்த அகச்சிக்கல்களை பேசுகிறது, ஒரு கதை புறவாழ்வினால் ஏற்படும் பணம் நெருக்கடிகளையும் அதனால் ஏற்படும் மன நெருக்கடிகளையும் பேசுகிறது. இந்த கதையில்(இரும்பு ராசி) வரும் கணவன் மனைவி உறவுதான் அதிகமும் புரிதல் உள்ளதாக இருக்கிறது. மற்றொரு கதையில் மனைவின் சந்தேக புத்தியால் ஏற்படும் நெருக்கடிகள் ஒரு புறமும் பஞ்சாயித்து தேர்தலில் தோற்கடிக்கப்படுவதினால் ஏற்படும் நெருக்கடிகள் இன்னொரு புறமும் சூழ அந்த கணவன் திக்குத்தெரியாமல் தவிக்கிறான்.
இந்த புத்தகத்தின் பின்னட்டையில் உள்ள குறிப்பு சொல்வது மாதிரி இந்த கதைகள் அனைத்திலும் கண்ணீர் வழிந்தோடுகிறது. அன்பின் பொருட்டும், அவமானத்தின் பொருட்டும், அவமதிப்பின் பொருட்டும், புரிதல் இன்மையின் பொருட்டும் கண்ணீர் சிந்தப்படுகிறது அல்லது சிந்தவைக்கப்படுகிறது.
எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் எழுத்து நடை மிகவும் எளிமையானது. ஆனால் அவர் எழுதி காட்டும் வாழ்க்கை எளிமையானது அல்ல. அவர் கதைகளில் அந்த வட்டாரத்தின் மொழியும் வாழ்வும் இரண்டற கலந்துள்ளது. இதுதான் அவரின் மிகப்பெரிய வெற்றி என கருதுகிறேன். இந்த ஆறுகதைகளின் வடிவமும் ஒரே மாதிரியாக உள்ளது. இது எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது.
இந்த புத்தகத்தினை சிறப்பான அட்டைப்படத்துடன் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2019 ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த புத்தக வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் பொன்.கர்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- 04.03.2026.

துளி. 418

வெகு காலமாக எங்கெங்கோ
தேடிக்கொண்டு இருந்தேன்
எனக்கான மேய்ப்பரை
கடைசியில் கண்டடைந்தேன்
எனக்கான மேய்ப்பனை
எனக்குள்.

- 01.03..2026.

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...