3.28.2019

பதிவு . 21

வீடியோ மாரியம்மன் – இமையம்
இந்த ஆண்டில் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பு இமையத்தின் வீடியோ மாரியம்மன் நூலாகும். இதில் பதினொரு சிறுகதைகள் உள்ளன. எல்லா கதைகளின் களமும் கிராமம்தான். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாலம்–கழுதூர்-திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வை அந்த மக்களின் மொழியிலேயே மிகவும் நுட்பமாக பதிவு செய்துள்ளார்.
தொகுப்பின் தலைப்பு கதையான வீடியோ மாரியம்மன் தான் முதல் கதையாக உள்ளது. இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை அமளுக்கு வந்த ஆரம்ப வருடங்களில் கிராமம் தோறும் திருவிழா மற்றும் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு வீடியோ படம் போடும் பழக்கம் உருவானது. தெருநாடகங்களை புறக்கணிக்க தொடங்கிய காலமும் அதுதான். அப்படி ஒரு திருவிழா இரவில் வீடியோவில் படம் பார்க்க அலையும் சிறுவனின் பிரச்சனையை விவரிக்க தொடங்கும் கதை இறுதியில் ஒரு இளம் பெண் தன் காதல் விவகாரம் பிறர்க்கு தெரிய வருவதால் தன் உயிரை மாய்த்துக்கொள்ள எடுக்கும் முடிவுடன் கதை முடிகிறது.
சிறப்பு பொருளாதர மண்டலங்கள் உருவானபோது விவசாய நிலங்கள் அரசால் கட்டாயபடுத்தி பிடுங்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பணத்துக்கா நிலத்தை விற்க தயார இருக்கும்போது நிலத்தை தன் உயிராக நினைக்கும் விவசாயி ஒருவர் நிலம் கைமாறும்முன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுப்பதை உயிர் நாடி சிறுகதை பதிவு செய்கிறது.
பொருளாதாரமாற்றம் மக்களின் சிந்தனைகளில் மாற்றத்தை கொண்டுவருகிறது. அது அவர்களின் பாலியல் வாழ்வு சார்ந்தும் சிக்கல்களை உருவாக்குகிறது. தன் மனைவியின் நடைத்தையால் ஊர் அறிய அவமானப்படும் ஒருவன் யாரையும் குறைசொல்லாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான். இந்த சிறுகதைக்கு பேர் நல்ல சாவு. இன்று திருமணம் தாண்டிய உறவுகளினால் கொலைகள் நிகழ்வது சாதரணமாகியுள்ள சூழலில் இந்தகதை தூண்டும் சிந்தனைகள் ஏராளம்.
பொருளாதாரமும், நாகரிகமும் வளர வளர மனிதர்கள் தனித்தனி தீவுகளாக மாறுகின்றனர். அதில் அதிகமும் பாதிக்க படுவது முதியவர்கள்தான். அம்மா, நாளை, நிஜமும் பொய்யும் மூன்று கதைகளும் முதியவர்களின் தனிமை குறித்து பேசுகிறது.
எழுத்துக்காரன், குடும்பம், பயணம் மூன்று கதைகளும் கிராமங்களில் உள்ள வறுமையால் பாதிக்கப்பட்டு நிராதரவான நிலையில் இருக்கும் மனிதர்களின் வெகுளித்தனம், பிடிவாதம், கோபம், தன்னம்பிக்கை போன்ற குணங்களை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
பிறர் துயரை தன் துயராக எண்ணாத தலைமுறைகள் உருவகியுள்ளதை ஊர்வம்பு சிறுகதை படம்பிடித்து காட்டுகிறது.
கடலூர் மாவட்டத்தில் நடக்கும் சாதியக்கொடுமைகளை கலாபூர்வமாக தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவு செய்யும் இமையம் இதிலும் சத்தியக்கட்டு என்ற சிறுகதை மூலம் அதை சாதித்துள்ளார். சாதியின் பேரால் கொலை செய்யப்படும் பெண் பிறகு தெய்வமாக வணங்கப்படுவதை, துயர் நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்துள்ளார்.
இமையத்தின் எல்லா கதைகளிலும் மக்களின் மொழி, சடங்குகள், சொலவடைகள் என மிக இயல்பாக பதிவாகியுள்ளது. இவர் கதை சொல்லி செல்லும் பாங்கு வாசகனை எளிதாக உள்ளியிழுத்துக் கொள்கிறது.
வீடியோ மாரியம்மன் சிறுகதை தொகுப்பு க்ரியா பதிப்பகத்தால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு முதல் பதிப்பு 2008-ம், இரண்டாம் பதிப்பு 2018-ம் வெளியிடப்பட்டுள்ளது.

                                                                                                                                      10.03.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...