9.03.2020

பதிவு - 40

 மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி… - இரா.பாரதிநாதன்.

Bharathi Nathan
ஒரு படைப்பை ( கவிதை, சிறுகதை, நாவல், … ) உருவாக்குவது எப்படி..? என்பதை ஒருவர் மற்றவருக்கு சொல்லித்தர முடியுமா என்று கேள்வி எழுப்பினால் நமக்கு பலவிதமான பதில்கள் கிடைக்கும். அதில் இரண்டு வகை முதன்மையான பதில்கள் நமக்கு கிடைக்கும். ஒன்று சொல்லித்தர முடியும் மற்றது சொல்லித்தர முடியாது. இதுவே கலை மக்களுக்கா, கலை கலைக்காக என்ற இருப்பெரும் பிரிவுகளாக இருந்து படைப்பாளிகள் வாதிட்டுக்கொண்டேயுள்ளனர்.
இரா.பாரதிநாதன் மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி… என்ற இந்த புத்தகம் முதல் வகையை சேர்ந்தது. கலை மக்களுக்காக. படைப்பாளனின் பணி மக்களுக்காக சிந்திப்பது. மக்களுக்காக சிந்திப்பவர்களின் படைப்புகள் எப்படி இருக்க வேண்டும் கேள்விக்கான பதிலே இந்த புத்தகம் என்றால் அது மிகையாகாது.
பாரதிநாதன் மூன்று நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ஒரு படைப்பாளியாக தன் படைப்புகளை உருவாக்கிய அனுபத்திலிருந்தும், வாசகனாக அவர் வாசித்த படைப்புகளிலிருந்தும், அவர் கவனித்த, அவர் கவனத்தோடு இருந்த இடங்களிலிருந்தும் பெற்ற அனுபவங்களை இந்த புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். அரசியல் பார்வையோடு மக்களுக்கா எழுத வரும் இளம் எழுத்தாளனுக்கு இந்த புத்தகம் சிறந்த வழிக்காட்டியாகும்.
இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது நமக்கு இரண்டு பட்டியல் கிடைக்கும். ஒன்று சிறந்த சிறுகதைகளின் பெயர்கள் மற்றது சிறந்த நாவல்களின் பெயர்கள். பட்டியல் என்றதும் தரவரிசை பட்டியல் என்று எண்ண வேண்டாம். இந்த பட்டியல் அப்படியானது அல்ல. ஒரு படைப்பு எப்படி நல்ல படிப்பாக இருக்கிறது அல்லது மோசமான படைப்பாக இருக்கிறது என்பதை பல உதாரணங்களோடு எல்லாருக்கும் புரியும் எளிமையாக எழுதியுள்ளார். அதிலிருந்து பட்டியலை நாம் உருவாக்கி கொள்ளமுடியும்.
2017 ஆண்டு இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தினை களம் வெளியீட்டகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தை எனக்கு படிக்க தந்து உதவிய தோழர் பாரதிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.07.2020.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...