11.30.2018

நிகழ்வு.01

ரித்விக் கட்டக் – பயிலரங்கம்
ரித்விக் கட்டக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பியூர் சினிமா புத்தக அரங்கில் நடைப்பெற்ற ஒரு நாள் பயிலரங்கில் நேற்று(4.11.2018) கலந்து கொண்டேன். காலை பத்து மணிக்கு நிழல் திருநாவுகரசின் நிதானமான உரையுடன் தொடங்கிய நிகழ்வு இரவு ஒன்பது மணிக்கு மிஷ்கினின் உணர்ச்சிபூர்வமான உரையுடன் நிறைவு பெற்றது. இந்த நாள் சிறப்பான நாள் என்ற புத்துணர்வுடன் அரங்கை விட்டு வெளியேறினேன்.
இந்திய திரை இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ரித்விக் கட்டக் என்ற அளவில் மட்டும்தான் இதற்குமுன் இவர் பெயர் எனக்கு அறிமுகம். அவருடைய எந்த படமும் பார்த்த்தில்லை. இன்று கட்டக்கின் இரண்டு படங்களை( meghe Dhaka Tara / Ajantrik) பார்த்தேன். ரித்விக் கட்டக்கின் மற்ற படங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் நிறைய செய்திகளை இன்றைய பயிலரங்கு மூலம் தெரிந்து கொண்டேன். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் என் மனம்மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்த்த படம் குறித்தும், கேட்ட உரைகள் குறித்தும் தனித்தனி பதிவுகளாக வெளியிடுகிறேன்.

Meghe Dhaka Tara / மேகம் கவிந்த தாரகை
மேகா தாகா தாரா இந்த படத்தின் பேரை பல வருடங்களாக கேள்வி பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியிலேயே படத்துக்குள்/கதைக்குள் மிக இயல்பாக சென்றுவிட்டேன். நேரடி தமிழ் படம் பார்ப்பது போலவே கதையும் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளும் எனக்கு புரிய தொடங்கிவிட்டது. கதையின் நாயகி துயரத்தை எதிர் கொள்ளும்போதெல்லாம் என் கண்களும் பனிக்க தொடங்கிவிட்டன.
குடும்பம் தனிமனிதனை பாதுகாப்பது போலவே அவனை/அவளை சுரண்டவும் செய்கிறது. வறுமை எல்லா புனிதங்களை கறைப்படுத்தும் போலும். வேலைக்கு போய் குடும்ப பாரத்தை சுமக்கும் கதைநாயகி, உடனே திருமணம் செய்துக்கொள்ள துடிக்கும் காதலன், வயோகத்தின் காரணமாக வருமானம் இல்லா தந்தை, இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட தாய், இலட்சியத்தை/இசையை கனவுகாணும் ஒரு சகோதரன், ஆடம்பரத்தையும் அழகையும் தேடும் தங்கை, வேலை கிடைத்ததும் குடும்பத்திலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்பும் மற்றொரு சகோகதரன் மற்றும் ஒரு மளிகைக்கடைகார் இவ்வளவு குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கட்டக் மிக காத்திரமான ஒரு திரைப்படைப்பை உருவாக்கியுள்ளார். உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சி போராட்டங்களை மிக துள்ளியமாக/கவித்துவமாக பதிவு செய்துள்ளார்.


பயிலரங்கின் முதல் நிகழ்வாக நிழல் திருநாவுகரசு கட்டக்கின் படங்களோடு தனக்கான உறவு பற்றி பேசினார். என்பதுகளில் கட்டக்கின் படங்களை திரைப்பட சங்கத்தில் பார்த்ததையும் பிறகு கல்கத்தா சென்று கட்டக் படத்தில் நடித்த நடிகர்களை சந்தித்ததையும், கட்டக் படம்பிடித்த இடங்களை சுற்றி பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சத்திய்ஜித் ரே நடுத்தர வர்க்கத்தில் மேல்நிலையில் உள்ளவர்களையும் மற்றும் உயர்குடினரின் வாழ்வைப் பதிவு செய்தார். கட்டக் நடுத்தர வர்க்கத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களையும் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்துள்ளார் என்றும் நிழல் திருநாவுக்கரசு கூறினார்.
கட்டக்கின் இரண்டு படங்கள் திரையிடலுக்கு பிறகு
இயக்குனரும்,கவிஞருமான லீனா மணிமேகலை ரித்விக் கட்டக்கின் படங்கள் குறித்து பேசினார். கட்டக் இயக்குனர் மட்டுமல்ல நாடக ஆசிரியர், சிறுகதையாசிரியர். அவருடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டும் என்று கூறினார், கட்டக் இயக்கி எட்டு படங்கள் வெளியாகியுள்ளது. நிறைய படங்கள் பாதியிலேயே நின்று போயிருக்கின்றன. கட்டக் தன் சிந்தனையை வெளிப்படுத்தவே படைங்களை இயக்கினார், பொருளுக்காகவோ இல்லை புகழுக்காகவோ கட்டக் படங்களை இயக்கவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் உலகம் அவரை கொண்டாட தொடங்கியது. கடக்கிற்கு முன் மாதிரி யாருமில்லை. அவருக்கான சினிமாவை அவரே சுயமாக உருவாக்கினார் என்று கூறினார், லீனாவின் உரையிலிருந்து கட்டக்கின் அரசியில் பார்வையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

இம்மாத படச்சுருள் இதழ் ரித்விக் கட்டக் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டு விழாவில் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி கலந்துகொண்டு ரித்விக் கட்டக் பற்றி சிறப்புரையாற்றினார்.
கட்டக் பற்றி அவர் தெரிந்துகொண்ட விததையும், கட்டக்கின் படங்களை பார்த்து தனக்குள் ஏற்பட்ட மனமாற்றங்கள் பற்றியும் விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசினார். கட்டக்கின் காதல் திருமணம், கட்டக் இரு இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதியது, ரே உடன் இருந்த நட்பு மற்றும் முரண், கட்டக் இயக்கிய படங்கள் பெற்ற வெற்றி தோல்விகள், கட்டக்கின் தீவிர ரசிகையான இந்திரா காந்தின் அழைப்பின் பேரில் பூனே திரைப்பட கல்லூரில் பதவி வகித்தது பிறகு அதிலிருந்து விலகி படம் எடுக்க போனது, படங்களின் தோல்வி மற்றும் பொருளாதர நெருக்கடியின் காரணமாக குடிக்க தொடங்குதல் என கட்டக்கின் தனிப்பட்ட வாழ்வு குறித்து நிறைய பேசினார்.
ரித்விக் கட்டக் பயிலரங்கில் பார்த்த இரண்டு படங்கள், நிழல் திருநாவுகரசு,லீனா மணிமேகலை,ஷாஜி மற்றும் அருண்மொழி ஆகியோரின் கருத்துக்கள் மூலம் எனக்குள் கட்டக் பற்றி ஒரு சித்திரம் உருவாகியுள்ளது. என்னை கட்டக்கின் மற்ற படங்களை தேடிப்பார்க்க தூண்டியுள்ளது. எல்லாவகையிலும் இன்றைய நிகழ்வு கட்டக்கை சிறப்பாக நினைகூர்ந்துள்ளது.

                                                                                                                        05.11.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...